அய்யா வைகுண்டரின் 194வது அவதார தின விழா தென்மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து சாமி தோப்பில் உள்ள வைகுண்டர் தலைமை பதி நோக்கி பக்தர்கள் ஊர்வலம் புறப்பட்டுள்ளனர். இந்த ஊர்வலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அய்யா வழி பக்தர்கள் அதிகம் உள்ளனர். சமூக, சமத்துவத்தை வலியுறுத்தியவர் அய்யா வைகுண்டர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ம் தேதி அய்யா அவதார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி அவர் விஞ்சை பெற்ற திருச்செந்தூரில் இருந்தும், அவர் சிறையில் அடைக்கப்பட்ட திருச்செந்தூரில் இருந்தும் நேற்றே அய்யா வழி பக்தர்கள் வாகனங்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு வந்தனர்.

இதையடுத்து அய்யா வைகுண்டரின் அவதார தினவிஒாவையொட்டி நாகராஜா கோவிலில் இருந்து தலைமை பதி சாமிதோப்புக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யா வைகுண்டரின் வாகனத்தின் முன்னால் முத்து குடையும், சிங்காரி மேளமும், செண்டை மேளமும் சென்றது. தலைப்பாகை அணிந்து காவி கொடி அணிந்து ”அய்யா சிவ சிவ அரஹரா அரஹரா” என்ற பக்தி முழக்கமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலம் கோட்டார், ஈத்தாங்காடு, தாமரை குளம் வழியாக சாமிதோப்பை சென்றடைய உள்ளது. சாமி தோப்பில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் திருசெந்தூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் ஆயிரக்கணக்கானவர்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் தென்மாவட்டங்களில் உள்ள பிற பதிகளிலும் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

அய்யா அவதார தினவிழாவையொட்டி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யயும் வகையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மார்ச் 14ம் தேதியும் தென்காசியில் மார்ச் 7 ம்தேதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here