கோவை மாவட்டம், சூலூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஹோட்டலில் பணியாற்றி வரும் எஸ்தர் என்பவரை 4 வது திருமணம் செய்ய ஆசைப்பட்ட நிலையில், ஹோட்டல் உரிமையாளருக்கும், எஸ்தருக்கும் இடையே பழக்கம் இருப்பது தெரியவந்ததையடுத்து ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளரை ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன். இவர் ​கோவை மாவட்டம், சூலூரை அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த ஆட்டோ ஓட்டுநரான பிரேம் ஆனந்த் என்பவர் எஸ்தரை 4 ஆவதாக திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

இந்தத் திருமணத்துக்கு எஸ்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் எஸ்தரும், ஹோட்டல் உரிமையாளரான திலீபனும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த் கடந்த ஜனவரி மாதம் ஹோட்டலுக்குச் சென்று எஸ்தரையும், திலீபனையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்த கொலை முயற்சி சம்பவம் காரணமாக பிரேம் ஆனந்த் சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு 17 நாட்கள் சிறையில் இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த பிரேம் ஆனந்த் இன்று அதிகாலை 5:30 மணியளவில் எஸ்தர் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். இதையடுத்து, எஸ்தர் வீட்டின் கதவைத் திறந்துள்ளார்.

அப்போது, அங்கு திலீபன் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலீபனை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். ​கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்து எரிக்கவும் முயன்றுள்ளார்.

அப்போது, கேஸ் வெடித்த நிலையில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரேம் ஆனந்தைப் பிடித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. கரிகால் சங்கர் பாரி மற்றும் சூலூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த திலீபனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த எஸ்தரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, கொலையாளி பிரேம் ஆனந்தைக் கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here