சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பிரதீப்ராஜா (27), முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், மதுரவாயல் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலம்பரசன் (35), சென்னை மதுரவாயலைச் சேர்ந்த பிரபு (41) மற்றும் அவர்களது கூட்டாளிகள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து பலரிடம் பணம் வசூலித்தது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலம்பரசனை அவரது மாவட்டத்திலேயே நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், சென்னை மதுரவாயலில் பதுங்கியிருந்த பிரபுவும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் கட்ட விசாரணையில், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் அவசரத்தை பயன்படுத்தி, பிரபல நிறுவனங்களில் நேரடி நியமனம் செய்து தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருந்தால் முன்வந்து புகார் அளிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

















