செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் வசித்து வருபவர்கள் கணேஷ் – மோனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் இவர்களுக்கு 16 வயது ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் கட்டிட தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கின்றனர். எனவே 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தாத்தா வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் சேலையூருக்கு வந்து பெற்றோருடன் தங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையின் போது சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது தாய் தந்தை இருவரும் வேளைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற அவரது தாய் மாமா 40 வயதுடைய முருகன் சிறுமியிடம் நலம் விசாரித்து பெற்றோர் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இதுகுறித்து வெளியில் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதனால் அச்சமடைந்த மாணவி நடந்ததை பெற்றோரிடம் சொல்லாமல் தாத்தாவின் வீட்டிற்கு சென்று வழக்கம்போல பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். நாளடைவில் சிறுமி கர்ப்பமான நிலையில் தனது கர்ப்பம் குறித்து தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தாயிடம் தெரிவித்த நிலையில் அவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு முருகன் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் காவ்யாவுக்கு கடந்த (30.07.2025) ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் விசாரணைக்கு செய்யப்பட்டு வந்த நிலையில் இறுதிகட்ட விசாரணையில் வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு குற்றம் சாட்டப்பட்ட முருகன் குற்றம் புரிந்தவர் என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

















