செல்வம் கொழிக்க வைக்கும் அட்சயம் என்ற சொல்லுக்கு ‘குறையாதது’ என்று பொருள். நாம் செய்யும் நற்செயல்களும், வாங்கும் மங்களகரமான பொருட்களும் மென்மேலும் பெருகும் இந்த அட்சய திருதியை, நடப்பாண்டு அட்சய திருதியை இன்று ஏப்ரல் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை தான் இந்த புண்ணிய தினம்.
அட்சய திருதியை தொடங்கும் நேரம்
தொடக்கம்: ஏப்ரல் 19, காலை 10:49 மணி
முடிவு: ஏப்ரல் 20, காலை 07:27 மணி
தங்கம் வாங்க உகந்த நேரம்: நீங்கள் தங்கம் அல்லது மங்களகரமான பொருட்களை வாங்க விரும்பினால், இன்று (ஏப்ரல் 19) காலை 10:49 மணி முதல் நாளை, அதாவது ஏப்ரல் 20-ஆம் அதிகாலை 05:51 மணி வரை மிகவும் சிறந்த நேரமாகும். அதிகாலை நேரம் என பார்க்காதீர்கள். பல இடங்களில் விடிய விடிய வியாபாரம் நடைபெறும்.
அட்சய திருதியை வெறும் தங்கம் வாங்குவதற்கான நாள் மட்டுமல்ல, அதன் பின்னணியில் பல அற்புதக் கதைகள் உள்ளன.
படைப்பின் ஆரம்பம்: பிரம்ம தேவன் உலகைப் படைக்கத் தொடங்கிய நாள்.
அவதாரங்கள்: விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பிறந்த தினம்.
அன்னபூரணி: பார்வதி தேவி அன்னபூரணியாக அவதரித்து சிவனுக்கே உணவளித்த நாள்.
கங்கை வருகை: பகீரதனின் முயற்சியால் கங்கை பூமிக்கு வந்த புனிதமான நாள்.
இந்நாளில் என்ன செய்யலாம்?
- வீட்டில் செல்வம் நிலைத்திருக்க தங்கம் மட்டுமன்றி இந்த பொருட்களையும் வாங்கலாம்: கல் உப்பு, பச்சரிசி மற்றும் தானியங்கள்.
- புத்தாடைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்.
- முக்கியமானது: இந்நாளில் நாம் செய்யும் ‘தானம்’ தான் பல மடங்கு புண்ணியத்தைத் தரும். குடை, ஆடை, உணவு போன்றவற்றை ஏழைகளுக்கு வழங்குவது தங்கம் வாங்குவதை விட மேலான பலனைத் தரும் என்பது ஐதீகம்.
அட்சய யோகம்
இந்த ஆண்டு சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால், இது ஒரு அபூர்வமான ‘அட்சய யோகத்தை’ உருவாக்குகிறது. இந்த நல்ல நேரத்தில் தொடங்கும் புதிய முயற்சிகள், தொழில்கள் நிச்சயம் வெற்றியடையும்.

















