ஆவடி அடுத்த பாலவேரிப்பட்டு நிரஞ்சன் நகரைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 76 ஆயிரத்து 800 சதுர அடி நிலம் தென்னந் தோப்பு வாங்க ஆசைப்பட்டுள்ளார். விளம்பரத்தில் பார்த்து, வாங்க ஆசைப்பட்டவர் முன்பணமாக 55 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் நிலத்தை பதிவு செய்து தராமல் ஏமாற்றி உள்ளாராம் ரியல் எஸ்டேட் தரகர்… அவரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு சென்னை மற்றும் சென்னை புறநகரில் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேர்த்தவர்கள் இடம் வாங்கி போட விரும்புகிறார்கள். சிலர் பணம் அதிகம் கொடுத்து சென்னையில் இருந்து 100 முதல் 80 கிமீ தள்ளி தோப்பு வாங்குகிறார்கள். அப்படி இயற்கை எழில் சூழ தென்னந்தோப்பு வாங்க ஆசைப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர் 55 லட்சத்தை இழந்துள்ளார்.
தென்னந் தோப்புடன் நிலம்
சென்னை ஆவடி அடுத்த பாலவேரிப்பட்டு, நிரஞ்சன் நகரில் 60 வயதாகும் லட்சுமி நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், கடந்த 2023-ம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஓச்சலம் பகுதியில் 76 ஆயிரத்து 800 சதுர அடி நிலம் தென்னந் தோப்புடன் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.
விளம்பரம்
அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசியவர் பூந்தமல்லி அடுத்த மாங்காடு அடிசன் நகரைச் சேர்ந்த 52 வயதாகும் பாஸ்கரன் எனவும், குமணன்சாவடி பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்து நடத்தி வருவதாகவும் கூறி அங்கு லட்சுமி நரசிம்மனை நேரில் வரவழைத்துப் பேசினார். பின்னர் விளம்பரத்தில் பார்த்த அந்த இடத்துக்கு ரூ.55 லட்சம் விலை பேசி அதனை பாஸ்கரனிடம் லட்சுமி நரசிம்மன் கொடுத்தாராம். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட பாஸ்கரன், நிலத்தை லட்சுமி நரசிம்மனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.
ரியல் எஸ்டேட் தரகர் கைது
பாஸ்கரனிடம் பலமுறை பணத்தைக் கேட்டும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததால் இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் லட்சுமி நரசிம்மன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் தரகரான பாஸ்கரனை நேற்று கைது செய்தனர்.
நிலத்தை பதிவு செய்யாமல் ஏமாற்றினால்
பொதுவாக இதுபோல் யாராவது உங்களிடம் நிலத்தை பதிவு செய்யாமல் ஏமாற்றினால் என்ன செய்ய வேண்டும்? பணம் கொடுத்துவிட்டு நிலத்தைப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தால், முதலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட குற்றப்பிரிவில் ஆதாரங்களுடன் (வங்கி பரிவர்த்தனை, ஒப்பந்தம்) புகார் அளிக்க வேண்டும். அத்துடன் சிவில் நீதிமன்றத்தில் ‘நிச்சயித்தபடி ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி’ வழக்கு தொடரலாம். இதன் மூலம் நீதிமன்றம் அந்த நபரை நிலத்தைப் பதிவு செய்யும்படி உத்தரவிடும். நிலம் வேண்டாம் எனில், கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற வழக்கு தொடரலாம். நீதிமன்றம் பணத்தை தர உத்தரவிடும். அதேபோல் அந்த நிலத்தை அவர் வேறு யாருக்கும் விற்காமல் இருக்க நீதிமன்றம் மூலம் ‘தடையுத்தரவு’ பெற முடியும்.
என்ன தண்டனை கிடைக்கும்?
இந்திய தண்டனைச் சட்டத்தின் (தற்போது பாரதிய நியாய சன்ஹிதா – BNS) படி, பிரிவு 420 ன் படி, நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நில ஆவணங்களை போலியாகத் தயாரித்திருந்தால், அதற்காகத் தனித்தனியாக சிறை தண்டனைகள் கிடைக்கும். இதில் குற்றவியல் வழக்கில் தண்டனை கிடைப்பதோடு மட்டுமல்லாமல், சிவில் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்களை ஜப்தி செய்து கூட உங்கள் பணத்தை மீட்க சட்டம் வழிவகை செய்கிறது.
பொதுவாக பலரும் அறிய வேண்டிய ஒரு சிக்கல் நில மோசடியில் இருக்கிறது.. குற்றவியல் போலீசில் புகார் அளிப்பது ஏன்.. நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்போது (பிரிவு 420 போன்ற மோசடி பிரிவுகளில்), காவல்துறை விசாரணை நடத்தி அந்த நபரைக் கைது செய்யும். மோசடி செய்தவருக்குத் தண்டனை பெற்றுத் தரும்.. எனவே சிறைத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில், அந்த நபர் தானாகவே முன்வந்து பணத்தைத் திருப்பிக் கொடுக்கவோ அல்லது நிலத்தைப் பதிவு செய்து கொடுக்கவோ வாய்ப்பு உண்டு. நீதிமன்றம் குற்றவியல் வழக்கில் அவருக்குச் சிறை தண்டனை மட்டுமே வழங்கும்; நிலத்தை உங்களுக்குப் பதிவு செய்து கொடுக்கும்படி நேரடியாக “ஆணை” பிறப்பிக்காது.

















