சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.
மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும். ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும் இது நித்திய சிவராத்திரி ஆகும். தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்.
மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என்கிறார் அகத்தியர்.
இந்த சிவராத்திரி பூஜையால் பெண்களுக்கு இழைத்த துரோகம், பெண்களுக்கு செய்த சாபம், பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும். அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால் கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும் என சிவ மஹா புராணம் கூறுகிறது. சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்கிறது புராணம். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை படிப்பதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.
சிவராத்திரி விரதம் இருந்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன. பிரம்மா தனது படைப்புத் தொழிலை தொடங்கிய இந்த நாளில்தான்.
இந்திரன் தேவலோக அதிபதியாக மாறியதும் இந்த நாளில்தான். குபேரன் செல்வத்தின் அதிபதியான நாளும் இந்த நாள் தான். எனவேதான் மகா சிவராத்திரி நாளில் விடிய விடிய கண் விழித்து ஈசனை வணங்கினால் குபேர யோகம் தேடி வரும் என்கின்றனர். சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில்தான். அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான்.
கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது புண்ணியம் தரும். மறுநாள் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனுக்கு நெய்வேத்தியம் படைத்து வணங்க வேண்டும்.
இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.