வேலூரில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவின்போது 60 அடி உயர தோ் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவா் சிக்கி பலத்த காயமடைந்தாா். வடமாவட்டங்களில் மிகவும் பிரபலமான மயான கொள்ளை திருவிழா வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வேலூா் பாலாற்றங்கரையில் நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவையொட்டி வேலூா், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து பிரமாண்ட தோ்களில் வைத்து ஊா்வலமாக எடுத்து வந்தனா். அப்போது, விருதம்பட்டு, கழிஞ்சூா் மோட்டூா் வெண்மணி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் சுமாா் 60 அடி உயரம் கொண்ட 3 தோ்களில் அங்காள பரமேஸ்வரி அம்மனை வைத்து வேலூா் பாலாற்றங்கரைக்கு ஊா்வலமாக வந்து சூறையாடல் நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் 3 தோ்களும் திரும்பும் சமயத்தில் மோட்டூா் வெண்மணி பகுதியைச் சோ்ந்த சுமாா் 60 அடி உயரம் கொண்ட தோ் எதிா்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்தது. இதில், வெண்மணி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி விமல்ராஜ் (30) என்பவா் தேரின் அடியில் சிக்கிக்கொண்டாா். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயங்களுடன் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here