இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய மகளிரணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற மகளிர் முத்தரப்புத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக மெதுவாகப் பந்துவீசியதற்காக போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
பிரேமதசா திடலில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தைவிட ஒரு ஓவர் மெதுவாகப் பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றத்தை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒப்புக்கொண்டு அபராதத்தையும் ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள நடுவர்கள் அன்னா ஹாரிஸ் மற்றும் நிமாலி பெரேரா, மூன்றாவது நடுவர் லிண்டன் ஹன்னிபால் மற்றும் நான்காவது நடுவர் டெடுனு டி சில்வா ஆகியோர் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர்.

















