மிழ்நாடும் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றைய தினம் துவங்கிய நிலையில் தவெக அரசுடைய முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதனையடுத்து வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்  இன்றைய தினம் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், இது சம்பந்தமான விவாதங்கள் தற்போது ஆரம்பித்துள்ளது.

தவெக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக முதன்முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்புகளும் இல்லையென எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன. ஏற்கனவே இருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளதாக விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இதற்கிடையில் இன்றைய தினம் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல விதமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடித்தோட்டம், காய்கறி, பழச்செடி வளர்ப்பு உள்ளிட்டவை ஊக்குவிக்கப்படும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இரசாயன உரங்களை பயன்படுத்தாமல் வீட்டுத் தோட்டங்களில் நச்சுத்தன்மையற்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யலாம்.

இதன் மூலமாக ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். எனவே நகர்ப்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராமப்புறங்களில் வீட்டை சுற்றியிருக்கும் நிலப் பகுதிகளில் செடி வளர்ப்புப் பைகளுடன் கூடிய தொகுப்புகள், நீரியல் தோட்டம் மற்றும் செங்குத்து தோட்டம் அமைக்கலாம். இதில் காய்கறிகள், மூலிகை செடிகள், பழங்கள் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலமாக நலமான சூழலையும் ஏற்படுத்த வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

இதற்காக நடப்பாட்டில் ரூ. 10 கோடி மாநில நிதியில் இருந்து ஒதுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி’ உள்ளிட்ட முக்கியமான விருதுகள் வழங்கப்படும் எனவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவில் விவசாயிகளுடைய உற்பத்தியை பெருக்கவும், அவர்களை கெளரவிக்கவும் விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களை பயிரிட்டு அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி விருது’ மாவட்ட அளவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசாக ரூ. 50,000, இரண்டாம் பரிசாக ரூ. 25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமாக 90 பரிசுகள் வழங்கப்படவுள்ள நிலையில், இதற்காக ரூ. 67.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சமீப காலமாகவே இதற்காக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி சம்பந்தமான அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here