பிஎஸ் படிக்க வரும் மாணவர்களுக்கு காவல்துறை அதிகாரி ஆன பாலச்சந்தர்(நட்டி) பயத்தைப் பற்றிய ஐயப்பாடுகளை மாணவர்களுக்கு தெளிவுரை படுத்துகிறார்.அதில் ஒரு மாணவன் தாங்கள் சந்தித்த விசாரணையில் நீங்கள் பயந்த சம்பவம் எது என்று கேள்வி எழுப்புகிறார். அந்தத் கேள்வியின் பதில் தான் டார்க் திரைப்படம் கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் குடிவாரத நிலையில், குறைந்த வாடகை என்பதால், அந்த வீடு பற்றிய உண்மை தெரிந்தும் அந்த வீட்டில் குடி வருகிறார் நாயகன் அஜய் கார்த்திக். தைரியத்துடன் அந்த வீட்டில் வசிக்கும் அஜய் கார்த்திக், சில தினங்களுக்குப் பிறகு சில அமானுஷ்ய விசயங்களை எதிர்கொண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார். காவல்துறை அதிகாரியான பாலச்சந்தர் தனது விசாரணை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. அந்தத் தகவல்கள் என்ன என்பதை இந்த படத்தின் மீதி கதை….

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்திக், பேய் வீடு என்ற உண்மை தெரிந்தும், தைரியத்துடன் இருந்தாலும், அங்கு நடக்கும் அமானுஷ்ய விசயங்களை கண்டு அச்சம் கொள்ளும் போது, அந்த உணர்வை மிக சரியாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி பார்வையாளர்களிடத்திலும் அச்சத்தை கடத்தியிருக்கிறார். ஜாலியான இளைஞராக அறிமுகமாகி, பேய் வீட்டுக்குள் சென்றதும், நாளுக்கு நாள் தனது நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளையும் தன் நடிப்பில் கச்சிதமாக பிரதிபலித்திருப்பவர், அழுத்தமான கதாபாத்திரை அளவான நடிப்பின் மூலம் மிக சிறப்பாக கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி, வழக்கமான குற்ற வழக்கு என்று விசாரிக்க தொடங்கி, பிறகு அதன் பின்னணி குறித்து அறிந்துக் கொண்டு, அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அசத்தல். வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பு மற்றும் திரை இருப்பு மூலம் படத்தை பிரகாசிக்கச் செய்யும் விளக்காக பயணித்திருக்கிறார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சிறிய வேடம் என்றாலும், திரைக்கதையோடு பயணித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்கள் என்பதால் ஒளியை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கிறார். வெறும் இருட்டை மட்டும் காட்டாமல், அந்த இருளுக்குள் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருப்பது போன்ற உணர்வை கடத்தியுள்ளார். குறிப்பாக, குறைந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி காட்சிகளுக்குள் ஒரு வித தவிப்பை உருவாக்கியிருப்பவர், அதை பார்க்கும் பார்வையாளர்களிடத்தில் படபடப்பு அதிகரிக்கும் விதத்தில் காட்சிகளின் கோணங்களை கையாண்டிருக்கிறார்.

மனு ரமேஷின் பின்னணி இசை திகில் காட்சியில் பார்வையாளர்களை பயத்தின் உச்சக்கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. பயங்கரமான சத்தத்தை மட்டுமே வைத்து பயம் காட்டும் பேய் படங்களின் வழக்கமான பாணியை தவிர்த்திருக்கும் இசையமைப்பாளர் மனு ரமேஷ், மெளனத்தையும், இசையையும் கையாண்ட விதம் தியேட்டரில் ஒருவித அமைதியின்மையை உருவாக்குவதோடு, சிறு சிறு ஓசைகள் மூலமாகவே பார்வையாளர்களின் இதயத்துடிப்பை வேகமாக்கி விடுகிறது.

மைனஸ்: சஸ்பென்ஸ் காட்சியை இன்னும் சஸ்பென்ஸ் ஆக திட்டமிடுதல் செய்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த ‘DARK’ பேய் வீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here