சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய நிலையில் அமித் ஷா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.

முன்னதாக, கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமித் ஷா நேற்று (ஏப். 10) இரவு சென்னை வந்த நிலையில், கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கி, இன்று காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசிய நிலையில், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாவாசனை சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவின் சந்திப்பு நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி உருவாகியுள்ளதாகவும் வரும் தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். அமித் ஷாவின் பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வாகும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடனிருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here