சென்னை:

அமித்ஷா கூறுகையில்:

“தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்து போட்டியிடுகிறது. தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழக அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி அமைக்கப்படுகிறது. மேலும் சில கட்சிகளுடன் இணைந்து வரும் தேர்தலை சந்திக்கவிருக்கிறோம்.

2026 பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தேர்தலில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். அதேபோல தேர்தலில் வெற்றி பெற்றபின்னரே ஆட்சியமைப்பது பற்றி முடிவு செய்யப்படும்”

ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் இணைவார்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்துபேசி முடிவு எடுப்போம் என்றார்.

மேலும், “இந்த கூட்டணி உறுதியான கூட்டணியாக அமைந்திருக்கிறது. இதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக எங்களுக்கு எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும். அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளதால் இரு கட்சிகளுமே பலனடையும். தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் நாங்கள் கௌரவமாக கருதுகிறோம். தமிழக மக்களின் உண்மையான பிரச்னைகளை மக்களிடம் கொண்டுசெல்வோம்.

தமிழகத்தில் மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து என பல துறைகளில் ஊழல் இருக்கிறது. இதை மறைக்கவே திமுக நீட் விவகாரத்தை கையில் எடுக்கிறது. பல்வேறு ஊழல்களுக்கு திமுக தேர்தலில் பதிலளிக்க வேண்டும். மக்களை திசைதிருப்பவே இதுபோன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது” என்றார்.

மேலும் தமிழ் மொழிக்கு மத்திய பாஜக அரசு அளித்துவரும் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். ‘பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகிய பின்னரே அதிமுக கூட்டணி உறுதியானதா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, ‘இதில் எந்த உண்மையும் இல்லை, இன்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான். அவருக்கு தேசிய அளவில் பல பொறுப்புகள் காத்திருக்கின்றன’ என்று பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here