கே.வி நந்தாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகர்கள் விமல், சூரி, ஸ்ரீதா, கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், விநோதினி வைத்யநாதன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘படவா‘
விமர்சனம்:
படத்தின் கதை மலேசியாவில் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம் மரகாத்தூர் என்ற கிராமத்தில் பொறுப்பற்றுத் திரியும் ஒரு வாலிபன் தான் விமல். விமலை ஸ்ரீதா காதலித்து வருகிறார். விமல் பெரியோர்களுக்குப் பிடிக்காத அனைத்தையும் பட்டியல் போட்டுச் செய்கிறார். இவருடைய தொந்தரவு தாங்க முடியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பினால் தான் தேறுவார் என்று ஊர் மக்களே சேர்ந்து அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.அங்கே அவர் மதுபானங்கள் விற்கும் பாரில் வேலை செய்கிறார்.சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார். மலேசியாவில் அவருக்கு 10 கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்திருக்கிறது என்று ஒரு கதை கிளம்புகிறது. அதனை ஊர் மக்கள் நம்புகிறார்கள். அது பொய் என்று விமலைக் காதலிக்கும் ஶ்ரீதாவுக்குத் தெரிகிறது. ஊர் திரும்பிய விமல் அதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருக்கிறார்.
சூரி தான் இதைப் பரப்பி விட்டது தனக்கு இதில் பங்கு இல்லை என்கிறார் விமல். ஆனால் ஊர் அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறது. ஊரில் அவரை ஒரு கோடிஸ்வரனாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவர் மீது ஒரு நல்ல அபிமானம் வந்து அவரை ஒரு பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தலைவர் பதவியை வைத்து ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறார். ஊரின் குளம், கண்மாய்களை ஆழப்படுத்தி பொதுப்பணிகளை முடித்து விடுகிறார். நிலத்தடி நீரை உறிஞ்சி சாகுபடிநிலத்தை அழிக்கும் வேலிக்கருவை மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கிறார். இதனால் அவருக்கு ஊரில் நல்ல பெயர் கிடைக்கிறது. ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சி என்று பரிசும் கிடைக்கிறது. இது ஒரு புறம் இருக்க, ஊர் மக்கள் விமலிடம் தான் பத்து கோடி இருக்கிறதே உதவி கேட்கலாம் என திட்டமிடுகின்றனர். பிறகு என்ன நடந்தது என்பதே கதை….
நாயகனான விமல், படத்தின் கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். காதல், எமோஷன்ஸ், ஆக்ஷன், கோபம் என பல இடங்களில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் விமல். இந்த படத்தில், நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார் விமல். நாயகியாக வரும் ஸ்ரீதா தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சூரி கழிப்பறைக்குச் செல்லும் காமெடி அதற்காக அவர் வெளிப்படுத்தும் முக பாவனைகள் எல்லாம் சிரிக்க வைக்கிறது. படத்தில் வரும் வசனங்கள் நாம் நிறைய தடவை கேட்டிருந்தாலும் மீண்டும் சிந்திக்க வைக்கிறது. கருவேல மரங்களின் தீமைகள் பற்றி கதை சொல்லுகிறது. ஜான் பீட்டர் இசையில் மிதமான ரகத்தில் பாடல்கள் உள்ளன.
கதையின் வேகத்தை அதிகரித்து நீளத்தை குறைத்திருக்கலாம்…. பாடல்களில் கூடுதல் கவனம் தேவை….
மொத்தத்தில் இந்த ‘படவா’ போக்கிரி மன்னன்.
ராஜ்குமார் (சினிமா நிருபர்)

















