சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள் இதில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது.
இதனையடுத்து சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார். இஸ்லாமியர்களை போல தலையில் வெள்ளை தொப்பி, வெள்ளை சட்டை, கைலி அணிந்த படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி வந்த விஜயை இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர். இங்கு 2,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். அவர்களுடன் சேர்ந்து தவெக தலைவர் விஜய்யும் நோன்பு திறந்தார். பின்பு மக்ஃரிப் பாங்கு சரியாக 6:28 மணி அளவில் நடைபெற்றது. மக்ஃரிப் தொழுகை 6.35 மணிக்கும், இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இஃப்தார் விருந்து பரிமாறப்பட்டது.