தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 74.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 72.78 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன. இது கடந்த தேர்தலை விட 1.46 சதவீதம் குறைவாகும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 60.99 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்முறை அதை விட குறைவாக 59.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் தொடர்ந்து வாக்குப்பதிவு சதவீதம் சரிவதற்கு, மக்கள் மத்தியில் நிலவும் சலிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பூத் சிலிப் உள்ளிட்டவற்றை வாக்காளர்களிடம் 100 சதவிகிதம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், வாக்காளர்களுக்கும் இடையேயான தொடர்பு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில், பெரிய அளவில் வாக்கு சதவீதம் குறையவில்லை என்றும், கொரோனா காலத்தில் தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் வரவேற்கக் கூடியது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
வாக்குச்சாவடி எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, கொரோனா தொற்றாளர்கள் வாக்களிக்க செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் போன்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.