சென்னை:

ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் திகழும் சென்னை அப்போலோ மருத்துவமனை, ஹியூகோ ரோபோடிக்-அசிஸ்டெட் சர்ஜரி (ஆர்ஏஎஸ்) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக உலகின் முதல் வீடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி (விஇஐஎல்) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இது தொடையின் நடுப்பகுதிக்கு பதிலாக பக்கவாட்டுப் பகுதி வழியாக இடுப்பு இடுக்கில் உள்ள நிணநீர்முடிச்சுகளை அணுகும் ஒரு மிகக் குறைந்த ஊடுருவல் தொழில்நுட்பமாகும். ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 40 வயதுள்ள நோயாளிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் எந்தவொரு பெரிய பக்கவிளைவுகளும் இன்றி அவர் மிக விரைவாகவும், முழுமையாகவும் குணமடைந்துள்ளார்.

ஆண்குறி, பெண்குறி வெளிப்பகுதி, யோனி போன்ற புற்றுநோய்கள் இடுப்பு இடுக்குகளில் உள்ள நிணநீர்முடிச்சுகளுக்குப் பரவும் போது, இந்த இங்வினல் நிணநீர்முடிச்சு அகற்றும் முறை ஒரு வழக்கமான நடைமுறையாக மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரியமாக, இந்த அறுவை சிகிச்சையானது இடுப்புப் பகுதியில் பெரிய கீறல்களை ஏற்படுத்தி திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலமாகவே செய்யப்படுகிறது. இது சில நேரங்களில் சருமம் மற்றும் நிணநீர் நாளங்களை சேதப்படுத்தி, காயம் ஆறுவதில் சிக்கல்களையும், அறுவை சிகிச்சைக்குப் பின் நிணநீர் கசிவையும் ஏற்படுத்தக்கூடும்.

இருப்பினும், ரோபோடிக் தளங்களில் மிகக் குறைந்த ஊடுருவல் மற்றும் கேமரா வழிகாட்டுதலுடன் கூடிய விஇஐஎல் (VEIL) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் போது முடிவுகள் பெரும்பாலும் சிறப்பாக அமைகின்றன. ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மிகவும் துல்லியமான ரோபோடிக் கருவிகள் மற்றும் மேம்பட்ட விஷுவல் கண்ட்ரோல் உதவியுடன் மிகச் சிறிய கீறல்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இதனால் சருமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மேலும், இந்த அணுகுமுறை வழக்கமான திறந்தநிலை அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிணநீர் கசிவை கணிசமாகக் குறைக்கிறது.

புரோஸ்டேட், சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பல்வேறு வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு அப்போலோ மருத்துவமனை ‘ஹியூகோ ஆர்ஏஎஸ்’ அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது நிணநீர்முடிச்சை அகற்றுவதற்கான இந்த விஇஐஎல் செயல்முறையையும் இணைத்ததன் மூலம், இந்த மருத்துவமனை இந்த அமைப்பைப் பயன்படுத்தி அனைத்து வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளது.

இந்த வரலாற்று மைல்கல் குறித்து சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனையின் சிஇஓ டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், “மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அப்போலோவின் உறுதிப்பாடு ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை எட்டி வருகிறது. மருத்துவ மேன்மைக்கும், உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பின் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு முற்போக்கான மருத்துவ நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மேலும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”

சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் என். ராகவன் அவர்கள் கூறியதாவது: “இந்த சாதனை பல மாத கால நுணுக்கமான திட்டமிடல், மருத்துவத் துல்லியம், ஒருங்கிணைந்த குழுப்பணி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாகும். ஹியூகோ ஆர்ஏஎஸ் தளத்தைப் பயன்படுத்தி பக்கவாட்டு அணுகுமுறை மூலம் உலகின் முதல் ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது சவாலாகவும் அதே நேரத்தில் திருப்திகரமாகவும் இருந்தது. மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு மைல்கல்லும் தொடர்ச்சியான கற்றல், அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவ மேன்மையின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் உறுதியாக இருக்கும் திறமையான குழுக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகிறது. இந்த வெற்றி நோயாளிகளின் குணமடையும் விகிதத்தை மேம்படுத்த உதவுவதுடன், மிகக் குறைந்த ஊடுருவல் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், ஆலோசகர் டாக்டர் மாதவ் திவாரி அவர்கள் மேலும் கூறியதாவது: “நோயாளி குணமடைந்த விதம், இந்த அணுகுமுறையின் ஆற்றலையும் அதன் செயல்திறனையும் காட்டுகிறது. இடுப்பு இடுக்கு நிணநீர்முடிச்சு அகற்றம் தேவைப்படும் ஆண்குறி புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், அவற்றிற்கு பெரும்பாலும் மிகவும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. விஇஐஎல் போன்ற மேம்பட்ட ரோபோடிக் உதவி நடைமுறைகள் பக்கவிளைவுகளைக் குறைப்பதன் மூலமும், அறுவை சிகிச்சை காயங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், விரைவாக குணமடைய வழிவகுத்து நோயாளிகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சிறந்த சிகிச்சை விளைவுகளைப் பெறுவதற்கு விழிப்புணர்வை அதிகரிப்பதும், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதும் தொடர்ந்து அவசியமாக உள்ளது.”

டாக்டர் என். ராகவன், டாக்டர் மாதவ் திவாரி ஆகியோரின் தலைமையிலான பல்துறை நிபுணர் குழுவினரால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டாக்டர் பிரதீப் சிருவர் தலைமையிலான குழுவினர் மயக்க மருந்து ஆதரவை வழங்கினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மிகச் சிறந்த முறையில் குணமடைந்துள்ளார். இந்த வெற்றிகரமான சிகிச்சை, துல்லியம் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை நோக்கிய மற்றொரு முக்கிய படியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here