நாகர்கோவில்:

போலியான முகநூல் கணக்கின் மூலமாக பெண்களின் படங்களைக் காட்டி, இளைஞர்களைத் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதனை நம்பி பலரும் அவரது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளனர்.

பணம் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் அழைப்பை அந்தப் பெண் நிராகரித்து வந்துள்ளார். இவ்வாறு பணம் கொடுத்து ஏமாந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் புகார் மனு அளித்தனர்.

இப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைது செய்ய எஸ்.பி. உத்தரவிட்டிருந்தார். சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இளைஞர்களை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (27) என்பவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

அவர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் படங்களைக் காட்டி பணம் வாங்கி விட்டு, பின்னர் தொலைபேசி அழைப்புகளை புறக்கணிப்பது போன்ற ஆன்லைன் தொழில்முறை மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, குமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here