அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண் உள்பட பலர் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது.
இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அனந்திதா சுந்தரும் கலந்துகொண்டார். இயக்குநர் அஸ்வின் கந்தசாமி கூறும்போது, “இதில் நடித்தவர்கள் அர்ப்பணிப்புடன் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
ரொமான்ஸ் காட்சிகளில் சந்தோஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. சம்யுக்தா விஸ்வநாதனின் நடிப்பு, படத்தின் உணர்ச்சிப்பூர்வமான உச்சக்கட்டக் காட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது. படத்தில் நடித்த அனைவரையும் நான் அதிகம் சிரமப்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
இந்த வெற்றி அவர்களுக்கானது. ஒரு பார்வையாளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்செயலாக இப்படத்தைப் பார்த்ததாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம்விட்டு சிரித்து மகிழ்ந்ததாகவும் கூறினார். ஒரு படைப்பாளியாக எனக்கு அதைவிடப் பெரிய வெற்றி எதுவும் இல்லை” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு பேசுகையில்:
என் மூத்த மகள் திருமண வேலைகளில் தீவரமாக இருக்கிறேன். என் கணவர் சுந்தர் சி. “புருஷன் பட வேலை, திருமண வேலைகளில் சுற்றி வருகிறார். அவராலும் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. என் இளைய மகள் இந்த பட வேலைகளை சரியாக செய்தார். அவந்திகாவை அனி என செல்லமாக அழைப்பார்கள். நான் பொம்மை என்பேன். என் பொம்மைக்கு வாழ்த்துகள். இந்த பட வேலைகளில் சிக்கல், பிரச்னை இருந்தது. அதை மீறி ஜெயித்தார். என் மூத்த மகள் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து நாலு படங்களில் நடிக்கப்போகிறார். முன்பு ஒரு ஹீரோயின் காதல், திருமணம் என்பதை சொல்ல பதறுவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு சின்ன படம் இந்தளவு வந்தது மகிழ்ச்சி. நாம் தயாரிக்கும் படம் மக்களை மகிழ்விக்கணும் அவர்கள் கொடுக்கும். பணத்துக்கு தகுந்ததாக இருக்கணும் என்று சுந்தர் சி சொல்வார். அதை நாங்கள் தொடர்வோம்” எனப் பேசினார்.

















