இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கர்மவீரரை நினைவுபடுத்தும் தர்மராஜர் என்ற தமிழக முதல்வர், கல்வியறிவை உணவிட்டு ஊட்டிய நிகழ்வைச் சொல்லி, அவரது தொண்டராக இருக்கும் கோடீஸ்வரர் பச்சமுத்து பழனிமாணிக்கம் என்ற ராதாரவியை அறிமுகப்படுத்தித் தொடங்குகிறது படம்.
இன்னொரு பக்கம் உழைப்புக்கு வேலை கொடுக்காமல், பிழைப்பு நடத்தும் விதமாக மக்கள் பிரச்சினை தீர்க்கவென்று போராட்டம் நடத்தி அதன் மூலம்.சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார் தமிழ்க் குடிமகன் என்ற பெயர் கொண்ட ரவி மரியா. அவரை வைத்து ஒரு அரசியல் சதுரங்கத்தை ஆடிப் பார்த்துவிட, தொழிலதிபர் ராதாரவி முடிவு செய்கிறார்.
அதற்கு ஒத்துக்கொண்டு, முதலில் நடிகராகி பின்னர் அரசியலுக்கு வரும் ரவி மரியா அதிரடித் திட்டங்களை அறிவித்து தேர்தலில் நிற்கிறார். இதற்குப் பின்புலமாக ராதாரவியும் அவரது ‘உள்ளே வெளியே,’ கட்சியில் இணைகிறார். வானவில் நிறத்துடன் களம் இறங்கும் உ.வெ கட்சியில் தேர்தலுக்கு முன் ரவி மரியா விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக வெளிநாடு போய்விடுகிறார்.
எனவே தேர்தலில் உவெ கட்சி வென்றால் முதல்வர் யார் என்ற கேள்வி வர, மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கும் ‘நீங்களும் ஆகலாம் சி எம்…’ என்ற பிரச்சாரதத்தை முன்வைக்கிறார்கள். தேர்தலில் உவெ கட்சி வெற்றியடைய, யார் முதல்வர் ஆனார்கள், இயல்பில் கர்மவீரர் தர்மராஜர் தொண்டரான ராதாரவி இப்படி மக்களை ஏமாற்றும் அரசியல் வேலையில் ஏன் ஈடுபட்டார்? என்பதே கதை….
தொழிலதிபராக நடித்திருக்கும் ராதாரவி தன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். இவர்களுடன் நிஜ அரசியல்வாதிகள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்திருப்பது படத்துக்கு நிஜ அரசியல் நிறத்தைக் கொடுத்திருக்கிறது. கதை அரசியல் இன்றைய TVK அரசை கிண்டலடித்து விமர்சனம் செய்வது போல் இருக்கிறது. கார்ப்பரேட்கள் நினைத்தால் ஒரு முதல்வரை உருவாக்கவும் முடியும் அவரை காணாமல் போகவும் செய்ய முடியும் என்பதை கதை கூறுகிறது. கதை ஒன்னும் பெரிய அளவில் இல்லை. இந்த படம் வர போகிறது என்பதை சரியாக பத்திரிகையாளர்களிடம் கொண்டு செல்லவில்லை என்றே சொல்லலாம்.
நமது சினிமா நிருபர்: திரு. ராஜ்குமார்

















