திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை பொருட்களான கஞ்சா, போதைக் காளான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனுர், கூக்கால், கவுஞ்சி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி பெறாமல் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு அதில் முறைகேடான, சட்டம் ஒழுங்கு பாதிக்கின்ற வகையில் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சிவராம் தலைமையில் வருவாயத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மேல்மலைக் கிராமங்களில் ஆய்வு நடத்தினர்.
அப்போது பூம்பாறை பகுதியில் அனுமதியில்லாமல் நடைபெற்று வந்த இரண்டு காட்டேஜ்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் மன்னவனூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தன்ராஜ்(38) என்ற நபரை பிடித்து அவரிடமிருந்த போதைப் பொருட்களான காளான்,கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மேல்மலைப் பகுதிகளில் வருவாய்த் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதே போல கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் காட்டேஜ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.
எமது நிருபர்: S.வினோத்

















