சென்னையில் ஆண்டுதோறும் திருப்பதி வரை திருக்குடைகள் பூக்கடை சென்னை கேசவ பெருமாள் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக கவுனி அயனாவரம், அம்பத்தூர், ஆவடி வழியாக திருமலை திருப்பதிக்கு செல்வது வழக்கம். அதனால் ஆவடி பகுதியில் திருப்பதி திருக்குடையை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தில் 3 -க்கும் மேற்பட்ட இடத்தில் 4 பேரிடம் வழிப்பறி சம்பவத்தை 2 பெண்கள் அரங்கேற்றியுள்ளனர்.
இதனையறிந்த ஆவடி காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பொழுது சந்தேகம் படும்படியான இரு பெண்கள் கவரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பட்டாபிராம் வழியாக செல்லக்கூடிய ஷேர் ஆட்டோவில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆவடி காவல் உதவி ஆய்வாளர் சீதாலட்சுமி, கார்த்திக் மற்றும் மனோவா ஜான்சன் உள்ளிட்டோர் இவர்களை பின்தொடர்ந்து சென்று பட்டாபிராம் அருகே தனியார் மருத்துவமனை வாசலில் இறங்கிய பொழுது கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்தனர். இதனை அறிந்த காவலர் உடனடியாக ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், இரண்டு பெண்களும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லதா , மற்றும் கீதா என்பது விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக காவலர்கள் பெண்களின் புகைப்படத்தினை திருவண்ணாமலை மாவட்ட காவலருக்கு அனுப்பி விசாரிக்கையில் இரு பெண்களும் அப்பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இரு பெண்கள் மீதும் ஆவடி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்து திருடி வைத்திருந்த மூன்று சவரன் நகையை மட்டும் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் மேலும் 3 சவரன் நகையை எங்கு ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தேடி வருகின்றனர். ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் நீதிமன்ற காவலில் மீண்டும் மறு விசாரணைக்கு இவர்களை உட்படுத்தி எங்கெல்லாம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என கண்டறிந்து விசாரணையை தொடர உள்ளதாக ஆவடி காவல் துணைய ஆணையர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.