சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, குமாரபாளையம், ஜல்லிபட்டி, செஞ்சேரிப்புத்தூர், அப்பநாயக்கன்பட்டி, தாளக்கரை உள்பட 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பஸ் நிறுத்தம், மருத்துவமனை வளாகம், உணவு விடுதி, பேக்கரி உள்பட பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார், கார்த்திக்குமார், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட குழுவினர் பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் புகை பிடிப்பதற்கு அனுமதிக்கும் கடை உரிமையாளர்கள் ஆகியோரை கண்டறிந்து தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

இதன்படி நேற்று செலக்கரிச்சல் பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்த 5 பேருக்கு அதிரடியாக தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், பேக்கரிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்: சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பொது இடங்களில் யாரும் புகை பிடிக்கக்கூடாது. இதனை மீறி செயல்படுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here