பாலியல் புகாரில் போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா, மாணவிகளை கட்டிப்பிடித்து நடனம் ஆடியது ஏன்? என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.சிவசங்கர் பாபாவை விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை சூப்பிரண்டு குணவர்மன் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் சுமார் 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நடத்திய விசாரணை விவரம் வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த பாபா, மாணவிகளை கட்டிப்பிடித்து நடனம் ஆடியதை ஒப்பு கொண்டதாக தெரிகிறது. ஆனால் குழந்தை வயதுள்ள மாணவிகளை, தான் காமத்தோடு கட்டிப்பிடிக்கவில்லை என்றும், பாசத்தோடும், நட்பு ரீதியாகவும் மட்டுமே கட்டிப்பிடித்து நடனம் ஆடினேன், என்றும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணைக்கு சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். போலீசார் வாங்கி கொடுத்த காலை டிபன், மதிய உணவு வகைகளையும் அவர் சாப்பிட்டதாக தெரிகிறது.
சிவசங்கர் பாபாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா அழைத்து வரப்பட்டுள்ளார்.