சென்னை:
தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜா. இவரை மடிப்பாக்கம் காவல் நிலைய எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். அதிகாலை 2 மணியளவில் வேளச்சேரிக்கு அழைத்துவந்தனர். அங்கே அவரிடம் குற்றம் சம்பந்தமாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். பின்னர் வழக்கில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தை கைப்பற்ற வேண்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு அந்த ரவுடியை அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த ரவுடி கிண்டி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை தாக்கியுள்ளார். இதனால், தற்காப்புக்காக காவல் உதவி ஆய்வாளர் ரவுடியின் வலது கால் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். காயமடைந்து விழுந்த ரவுடியை போலீஸார் பிடித்தனர். பின்னர் அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்வில் J7 வேளச்சேரி காவல் நிலைய ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.