ஆர்.எம் வீரப்பன் டாக்குமென்டரிக்காக நடிகர் ரஜினிகாந்த், அவரது நினைவுகள் பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த காணொலியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தான் கருத்து தெரிவித்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது:
“அனைவருக்கும் வணக்கம்.. ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமென்டரி.. அவரை பற்றி பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி.. எனக்கு ரொம்ப நெருக்கமானவர்கள், என் மீது ரொம்ப அன்பு காட்டியவர்கள் 4, 5 பேர். பாலச்சந்தர் சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்எம் வீரப்பன் சார்.. அவர்கள் எல்லோரும் இப்போது இல்லை என்பதை சில நேரங்களில் ரொம்பவே மிஸ் பண்றேன்.. 1995 ஆம் ஆண்டு ‘பாட்ஷா’ படத்தின் 100வது நாள் விழாவில் தயாரிப்பாளராக ஆர்எம் வீரப்பன் பங்கேற்றிருந்தார். அப்போது வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி நான் பேசினேன். அப்போது ஆர்எம் வீரப்பன் அதிமுகவில் அமைச்சராக இருந்தார்.
அமைச்சரை வைத்துக்கொண்டு அதைப் பற்றி பேசக்கூடாது. அப்போது எனக்கு அது தெளிவு இல்லை. அதை பேசியப் பிறகு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி விட்டார். மேடையில் நீங்கள் இருக்கும் போதே ரஜினி எப்படி வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசினார் என்றுக்கூறி தூக்கிவிட்டார்.
இதைக் கேட்டதும் நான் ஆடி போய்விட்டேன்.. எனக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.. இரவெல்லாம் போன் பண்ணினேன் யாரும் எடுக்கவில்லை. காலையில் போனில் பேசியபோது ஆர்எம் வீரப்பன் சாரிடம் மன்னிப்பு கோரினேன். அப்போது ஒண்ணுமே நடக்காதது போல் அவர் பேசினார். அதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். சந்தோஷமாக இருங்கள். இன்னைக்கு என்ன ஷூட்டிங் என்று சாதாரணமாக கேட்டார்.
முதலில் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்த போதும், இந்த காரணம் முக்கிய காரணம். இதுதொடர்பாக ஜெயலலிதாவிடம் நான் பேசவா என்று கேட்டேன். அதற்கு வேண்டாம், நீங்கள் பேச வேண்டாம் அந்த அம்மா அதையெல்லாம் ஏற்க மாட்டார்கள். நீங்கள் பேசி உங்கள் மரியாதையை குறைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் பேசி அங்கு நான் போய் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டார். அதுபோல உண்மையிலேயே மிகப்பெரிய மனிதர் ஆர்எம் வீரப்பன்.. அவர் ரியல் கிங் மேக்கர்” இவ்வாறு ரஜினிகாந்த் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் போது ஏன்? இதை ரஜினிகாந்த் சொல்லவில்லை என சமூக ஆர்வலர்கள், அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.