சென்னை:
தண்டையார்பேட்டையை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரை சக மாணவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவியின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகமோ சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டிக்காமல், மாணவியை குற்றஞ்சாட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில், தனது மகளுடன் பயிலும் பள்ளி மாணவிகளின் புகைப்படத்தை சக மாணவர்கள் மார்பிங் செய்து வெளியிட்டதாக மாணவியின் தாயார் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், 3 மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

















