திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீதான மனித உரிமை ஆணையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஓய்வூதிய பலன்களில் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்து, பணி ஓய்வை அனுமதிக்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல்நிலைய மரணத்தில், வெள்ளத்துரைக்கு சம்மந்தம் இருப்பதாக விசாரணையில் முடிவான நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை அயோத்தி குப்பத்தில் ரௌடி வீரமணி என்பவரை என்கவுண்டர் செய்ததில் பிரபலமானார். இதேபோன்று கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரௌடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரௌடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக இருந்து வந்தார்.

இந்த நிலையில், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் வியாழக்கிழமை(மே 30) மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவர் சட்ட ரீதியாக சந்திப்பதாகவும் அவர் மீது எந்த தவறும் இல்லை என அவர் தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ரௌடி ராமு என்கிற கொக்கி குமார் காவல்நிலைய மரணம் சம்பந்தமாக சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் வெள்ளத்துரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை(மே 31) ஓய்வுபெற இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை ஒறு நாள் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here