ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மண்டாடி’
மீனவ சமூகத்தின் வாழ்க்கை, கடல், பாரம்பரிய படகுப் பந்தயம் மற்றும் தனிப்பட்ட பகை ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். கடலில் மீன்பிடிப்பதில் திறமை வாய்ந்தவராக மட்டுமல்லாமல், படகுப் பந்தயத்திலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவராக முத்துக்காளி காட்டப்படுகிறார். சில தனிப்பட்ட காரணங்களால் தனது சொந்த ஊரை விட்டு விலகியிருக்கும் அவர், மீண்டும் தனது மக்களுக்காக திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது நீண்ட காலமாக அவருடன் மோதலில் இருக்கும் சட்டைப் புலி என்ற கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. அதை சூரி எப்படி கையாண்டார் என்பதே கதை.
முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன் உடலமைப்பை முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இடையிலான சண்டைகாட்சி, உணர்வுப்பூர்வமான ஃப்ளாஷ்பேக் மற்றும் ஜி.வி-யின் பின்னணி இசை ஆகியவை வேற லெவல். கடலில் படகில் நடக்கும் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் மிகச்சிறந்த பகுதிகள் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் வருகிறது.
சற்று நீளமான ஃப்ளாஷ்பேக் காட்சிக்குப் பிறகு, திரைக்கதை மீண்டும் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக, பிரம்மாண்டமான படகுப் பந்தயக் காட்சியுடன் அமையும் க்ளைமாக்ஸ், கண்டிப்பாகப் பெரிய திரையில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. படம் முழுவதும் சூரி மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை உறுதியுடன் தாங்கிப் பிடிக்கிறார்.
முதல் பாதி முழுவதும் கொஞ்சம் போர் அடிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி படத்தை ஓரளவுக்குக் காப்பாற்றுகிறது. காளி தன் கடந்த காலத்தைச் சொல்லும் காட்சிகள், புலியுடனான நட்பு, சத்யராஜ் கதாபாத்திரம் ஆகியவை நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது. மஹிமா உடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. க்ளைமாக்ஸில் வரும் படகுப் போட்டி காட்சிகள் விறுவிறுப்பாகவும், எமோஷனலாகவும் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு இரண்டாம் பாதியும், படகுப் போட்டிகளும்தான் முக்கிய பலம்.
மொத்தத்தில் இந்த ‘மண்டாடி’ படகு மன்னன்
















