போஸ் வெங்கட், வினோதினி தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் மூச்சு இல்லாமல் இருக்க, போஸ் வெங்கட் கடவுளிடம் கதறுகிறார். அப்போது வானத்தில் இருந்து வெளியான வெளிச்சம் மூலம் குழந்தையின் நின்ற மூச்சு திரும்ப கிடைக்கிறது. அதே சமயம் ஒரு அதிசயமும் நிகழ்கிறது. பிறக்கும் போது ஆணாக இருந்த குழந்தை, அந்த வெளிச்சம் பட்ட பிறகு பெண் குழந்தையாக மாறிவிடுகிறது. அது மட்டும் இன்றி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அதிசயமும் நடக்கிறது.
உலகத்தில் எங்கும் நிகழாத இந்த அதிசய குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று விடும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதி விபத்து ஒன்றில் இறந்து விட, இந்த அதிசய பிறவிகள் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமலும், ஒருவரது செயல்கள் மற்றவரின் நினைவில் நிற்காமலும் இருக்கும் இவர்களது இந்த மாற்றம் மட்டும் தினம் தினம் அரங்கேற, பகல் முழுவதும் ரேஷ்மா வெங்கடேஷாக இருப்பவர், இரவு சந்தோஷாக மாறிவிடுவார்.
இந்த விசித்திரமான இவர்களது வாழ்க்கையில் காதல் மலர்கிறது. ரேஷ்மா வெங்கடேஷை வினோத் கிஷன் காதலிக்க, சந்தோஷை சம்யுக்தா விஸ்வநாதன் காதலிக்கிறார்.இவர்களது விசித்திரமான வாழ்க்கை இவர்களது காதலில் பல சிக்கல்களை உருவாக்க, அதே சமயம் இவர்களது அதிசய பிறப்பை வியாபரமாக்கி பணம் சம்பாதிக்க மரபணு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று முயற்சிக்கிறது. இவற்றில் இருந்து தப்பித்து இவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தார்களா ? இவர்களது இந்த அதிசய வாழ்க்கை முடிவுக்கு வந்ததா ? இல்லையா?? என்பதே கதை..
நாயகனாக வரும் சந்தோஷ் காதல், டான்ஸ், ஆக்சன் சீக்வன்ஸ் என புகுந்து விளையாடுகிறார். இவரது காதலியாக சம்யுக்தா கச்சிதம். நாயகியாக வரும் ரேஷ்மா வின் கண் பார்வை, உடல் மொழி அருமை. ஆடியன்சுக்கு நல்ல எமோஷனல் கனெக்ட் தருவதில் இவருக்கு வெற்றி.
நாயகியின் காதலனாக வரும் வினோத் லிஷன் உயிர்ப்பான நடிப்பு. விடிவி. கணேஷ் ,பகவதி பெருமாள் இருவரின் பங்களிப்பும் அருமை. ஒளிப்பதிவு சாந்தகுமார். அருமையான ஒர்க். சாம் சி.எஸ்சின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓக்கே ரகம். ஆண் பெண்ணாக மாறும்போது கலரிங் கலக்கல் ரகம். முதல் பாதியில் இருந்த துள்ளல் மற்றும் சிரிப்பு சத்தம் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது படத்திற்கு சற்று பலவீனம் என்றாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத மற்றும் உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள முடியாத வித்தியாசமான இரட்டையர்களின் உணர்வுகள் மூலம் அந்த பலவீனத்தையும் பலமாக்கி விடுகிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசுவாமி.
மைனஸ்: இரண்டாம் பாதி கதை சோர்வு… பாடல்களில் கூடுதல் கவனம் தேவை…
மொத்தத்தில் இந்த ‘டபுள் ஆக்குபன்சி’ உடல் மாற்ற ரசனை.

















