தமிழ்நாடு அரசு மானியத் திட்டத்தில் மானியத் தொகை பெற ரூ.2,500 லஞ்சம் பெற்ற திருவள்ளூா் மாவட்ட தொழில் மைய உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவள்ளுரைச் சோ்ந்த குமாரசாமி. இவா் மாவட்ட தொழில் மையத்தில் கடந்த 2022- ஆம் ஆண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் புத்தக நிலையம் வைக்க ரூ.2 லட்சம் கடன் பெற்றாராம். அதற்கான மானியம் ரூ.50,000 பெற மாவட்ட தொழில் மையத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக சென்று ஆவணங்கள் அளித்துள்ளாா். அப்போது மானியத் தொகை பெற அலுவலக உதவியாளா் சிவக்குமாா் என்பவா் குமாரசாமியிடம் ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளாா்.
லஞ்சம் தர விரும்பாத குமாரசாமி திருவள்ளுா் லஞ்ச ஒழிப்பு துறையில் புகாா் செய்தாா். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் அவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனா். இந்த நிலையில் குமாரசாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கொடுத்து அனுப்பினா்.
அலுவலக உதவியாளா் சிவக்குமாா் ரூ.2,500 லஞ்சப் பணத்தைப் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரா மூா்த்தி தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா்.

















