பாலாஜி இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘தி டார்க் ஹீவன்’
விமர்சனம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மெக்கரை என்ற மலைக்கிராமத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் சில மர்மமான சம்பவங்கள், நிகழ்காலத்திலும் எவ்வாறு தொடர்கின்றன என்பதுதான் படத்தின் கதைக்களத்தின் முக்கிய அடித்தளம்.
மெக்கரையில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், அதை யார் படிக்கத் தொடங்கினாலும், அவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடைபெறவிருக்கும் சம்பவங்கள் அதில் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அந்த நபர் எப்போது, யாரால், எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கதைக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
இந்த மர்மமான புத்தகத்தைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களுக்கும், நிகழ்காலத்தில் நடைபெறும் தொடர் மரணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதையின் முக்கிய முடிச்சாக அமைந்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நூலகரின் மகள் தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக மெக்கரைக்கு வருகிறார். அதே நேரத்தில், கிராமத்தில் மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரியாக சித்து அங்கு வருகிறார்.
கிராம மக்கள் இந்த தொடர் மரணங்களுக்கு பின்னால் வன தெய்வத்தின் சாபம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் காவல்துறை அதிகாரியான சித்து, இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவமாக பார்க்காமல், இதன் பின்னால் ஒரு சைக்கோ கொலையாளி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறார். இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார்? என்பதே கதை.
சித்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தர்ஷிகா, ரித்விகா ஆகியோருக்கும் கதையோட்டத்திற்கு தேவையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.
நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, அருள் D சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே படத்தின் மர்மத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது. கதாபாத்திரத்தின் தீவிரத்தையும், விசாரணைக் காட்சிகளின் அழுத்தத்தையும் உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, கதையின் மர்மம் அதிகரிக்கும் நேரங்களில் அவரது நடிப்பு படத்தின் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
தி டார்க் ஹீவன்- த்ரில் கலவை.
















