கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த எல்.என்.புரம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடலூர் வருவாய்த்துறை பறக்கும் படை குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பறக்கும் படை குழுவினர் எல்.என்.புரம் பகுதியில் சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர்.

அதில் சாந்தி என்பவர், தனது வீட்டில் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடியாக உள்ளே புகுந்து தேடியதில் 1200 கிலோ ரேஷன் அரிசி, 9 சமையல் எரிவாயு சிலிண்டர், 70 லிட்டர் மண்ணெண்ணெய், 170 கிலோ துவரம் பருப்பு, 25 கிலோ கோதுமை மற்றும் அரசு முத்திரை கொண்ட காலி சாக்குகள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டு அதிர்ந்து போனார்கள்.

வீட்டையே ரேஷன் கடை போல மாற்றி பலே கடத்தல் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதிகாரிகள் வீட்டில் புகுந்து சோதனை செய்யும்போது தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்…. எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்து விடுகிறேன் எனக் கூறி கெஞ்சியுள்ளார். இதனை அடுத்து ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சாந்தியை கைது செய்தனர். 

எல்.என்.புரத்தில் இயங்கும் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய பொருட்கள் சரியாக கிடைக்காமல் அலைக்கழிக்கபட்டு வரும் நிலையில் தற்பொழுது ஒரே வீட்டில் இவ்வளவு ரேஷன் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைக்கான பொருட்கள் ஒரே நேரத்தில், இங்கு வந்தது எப்படி? எதற்காக ரேஷன் பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்தார்கள்? இப்பொருட்களை விநியோகம் செய்தது யார்? உள்ளிட்ட, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ரேஷன் பொருட்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்று வந்தார்களா? அல்லது வெளிமாநிலங்களுக்கு கடத்தி காசு பார்த்து வந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இக்குற்றசம்பவத்தில் சாந்தி தான் முக்கிய குற்றவாளியா? இல்லை வேறு யாரேனும் முக்கிய புள்ளிகளின் தொடர்பும் இருக்கிறதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் ரேஷன் பொருட்கள் பதுக்கிய வழக்கில் மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here