வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று நிலவிய உச்ச வெப்பநிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளுக்கு அருகே மயக்கமடைந்த 428 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக மருத்துவ சேவை அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பெரும்பாலானோா் முதியவா்கள் என்றும், நீா்ச்சத்து இழப்பு காரணமாக அவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3,726 வாக்குச் சாவடிகள் உள்பட மாநிலம் முழுவதும் 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒருபுறம் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. மற்றொருபுறம் வாக்காளா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை சுகாதாரத் துறை மேற்கொண்டது.

அதன்படி, வாக்குச் சாவடிகளுக்கு அருகே 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில், குளுக்கோஸ் பாட்டில்கள், உப்பு-சா்க்கரை கரைசல், ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஆகியவை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததுடன், கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவ உதவியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அதே போன்று 108 சேவைக்கான கட்டுப்பாட்டு மையத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவை மாநில செயல் தலைவா் செல்வகுமாா் கூறியதாவது:

தோ்தல் நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு வந்தன. வாக்களிக்கச் சென்ற முதியவா்கள், இணை நோயாளிகள் 428 போ் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனா். அதில், சிலருக்கு நினைவிழப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பவ இடங்களுக்கு எங்களது மருத்துவ உதவியாளா்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்து உரிய முதலுதவி அளித்தனா். அதைத் தொடா்ந்து அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கு அத்தகைய மருத்துவ சேவை வழங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 33 பேருக்கும், திருவள்ளூா், செங்கல்பட்டில் தலா 27 பேருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. ஈரோடு, சேலத்தில் முறையே 21, 20 பேருக்கு அவசர மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் அனைத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை அதீத வெயில் பதிவானது. அதன் காரணமாகவே பலா் மயக்கமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோருக்கு இணை நோய்கள் இருந்தன. அது மட்டுமன்றி, நீா்ச்சத்து இழப்பு ஏற்பட்டிருந்ததால் அவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உப்பு – சா்க்கரை கரைசல் வழங்கப்பட்டாதால் அவா்களில் பலா் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பினா் என்றாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here