முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தரவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
மர்ம கும்பல் கொலை:
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.
ரம்ஜான் நோன்பு இருந்த அவர் இன்று (மார்ச் 18) அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
இட பிரச்சினை காரணமாக கொலையா? – சம்பவ இடத்தில் திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இடப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாகவும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தினர். தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர் கீதா மற்றும் போலீஸார், கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனர். மேலும், ஜாகிர் உசேன் பிலிஜியின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
காவல் துறை விளக்கம்:
இது குறித்து போலீஸார் கூறும்போது, “நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள 36 சென்ட் இடம் தொடர்பாக ஜாகிர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜாகிர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு, டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது” என்றனர்.
2 பேர் நீதிமன்றத்தில் சரண்:
இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாகிர் உசேன் பிஜிலி வெளியிட்ட வீடியோ பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வீடியோவில் கூறியது என்ன? – அந்த வீடியோவில், தான் கொலை செய்யப்படலாம் என்றும், இந்தக் கொலைக்கு மூலகாரணம் நெல்லை டவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனும், நெல்லை மாநகர உதவி ஆணையர் விஜயகுமாரும்தான் என்று கூறியுள்ளார்.
மேலும், “நெல்லை டவுன் தொட்டி பாலம் தெரு அருகேயுள்ள எனது 36 சென்ட் இடத்தை அபகரிக்க முயன்றதை தடுத்தேன். அந்த நபர் கொடுத்த பொய் புகாரின் பேரில், நெல்லை டவுன் போலீஸார் பிசிஆர் வழக்கு பதிவு செய்தது வெட்கக்கேடு. பட்டியலின இளைஞர், மதம் மாறிய பின்னர், பிசிஆர் பிரிவில் எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும்? என்று ஜாகீர் உசேன் காணொலியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைவர்கள் கண்டனம்:
“ஓய்வுபெற்ற எஸ்.ஐ. படுகொலை செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளிகூட இல்லை. இந்தக் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. சாதாரண மக்களின் புகார்களை காவல் துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல் துறை பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
“ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முர்த்தின் ஜஹான் தைக்காவுக்கு சொந்தமான 32 சென்ட் வக்பு இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த சட்டரீதியாக போராடியதே காரணமாகும் என கூறப்படுகிறது. வக்பு சொத்தை சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் உள்ள தனக்கு எதிராக ஒரு குழு கொலை திட்டம் மேற்கொண்டு வருவதாக அவர் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் யார் யாரெல்லாம் அந்த சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள், யாரால் தனக்கு அச்சுறுத்தல் என்கிற விவரத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை காவல் துறை வழங்காத நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல் துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல” என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கூறியுள்ளார்.