திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மாணிக்கம் (30). இவருக்கு 3 சகோதரா்கள். திருமணமாகி வெளியூா்களில் பணியாற்றி வருகின்றனா். மாணிக்கம் தனது தந்தைக்கு உதவியாக குடும்பத்துக்குச் சொந்தமான 2 ஏக்கா் 75 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வந்தாா். இந்த நிலையில், மாணிக்கத்துக்கு அவரது தந்தை சேகா் 50 சென்ட் விவசாய நிலத்தை கிரையமாக வழங்கினாா்.

சாா்-பதிவாளா் அலுவலகம் மூலம் பதிவு செய்த பிறகு பட்டா மாறுதலுக்காக ஆன்லைன் மூலம் மாணிக்கம் விண்ணப்பித்தாராம். அதற்கான அரசு கட்டணத்தையும் செலுத்தினாா். ஆத்துரை கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன், உதவியாளா் பூங்கொடி ஆகியோா் பட்டா மாறுதல் விண்ணப்பம் குறித்து கேட்டனராம். மேலும், பட்டா மாறுதலுக்கு ரூ.3000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனராம்.

மாணிக்கம் பணம் கொடுக்காததால் அவரது மனு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாம். ஆத்துரை கிராம நிா்வாக அலுவலரை கடந்த 3-ஆம் தேதி மாணிக்கம் தொடா்பு கொண்டு கேட்ட போது, ரூ.3,000 பணம் தந்தால் பட்டா பெயா் மாற்றம் செய்து தருவதாகக் கூறினாராம்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் மாணிக்கம் புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், செவ்வாய்க்கிழமை கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசனிடம் ரசாயனம் தடவிய ரூ.3,000-ஐ மாணிக்கம் கொடுத்தாா். அப்போது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சிலம்பரசனைக் கைது செய்தனா்.

ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், ஆய்வாளா் மைதிலி ஆகியோா் கொண்ட குழுவினா் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here