கல்லூரி முதல்வராக இருந்தபோது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடைப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுவந்த முதுநிலை பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் 2 வாரங்களாக சிபிஐ அதிகாரிகள் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பெண் மருத்துவர், கல்லூரியில் உள்ள கருத்தரங்கில் ஆக. 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனிடையே பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம் மட்டுமின்றி, கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அவற்றிற்கு கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுப்பப்பட்டது. முதுநிலை மருத்துவர்கள் தேர்ச்சிக்கு பணம் பெறுவது, மருத்துவமனையில் போதைப் பொருள் புழக்கம் – கடத்தல் போன்ற புகார்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். சந்தீப் கோஷிடம் தொடர்ந்து 15 நாள்களுக்கு இரு இடங்களில் விசாரணை நடைபெற்றது. முதலில் கொல்கத்தா பிந்தாநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நிஜாம் மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. அங்கு வைத்து சிபிஐ அதிகாரிகள் அவரை இன்று !கைது செய்தனர்.

முன்னதாக கொல்கத்தாவின் பெலிகத்ரா குடியிருப்புப் பகுதியில் உள்ள சந்தீப் கோஷின் இல்லத்தில் கடந்த 25ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனையில் பணமோசடி நடைபெற்றதாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here