சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் 25-வயதான இந்துமதி. கடந்த பிப்ரவரி மாதம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு தி.நகரை சேர்ந்த 37-வயதான குமரன் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் ஆன நாள் முதலே இந்துமதியை அவரது மாமியாரான சாந்தி, ராசி இல்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதி, மாமியாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
மாமியார் கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த இந்துமதியை கணவர், மாமியார், மாமனார் என யாரும் வந்து பார்க்ககூட வரவில்லை. கோபத்தில் தாய் வீட்டிற்கு வந்த இந்துமதியை அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்ல கணவர் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை என்றும் கணவரும், தனது அம்மாவின் பேச்சை கேட்டுக் கொண்டு மனைவியை கண்டுகொள்வதில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, இந்துமதி அவரது அக்காவிற்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், “என் சாவுக்கு கணவர் குமரனும், அவரது அம்மாவான (மாமியார்) சாந்திதான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம்” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வாட்ஸ்ஆப்பில் இந்துமதி அக்காவிற்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்ஜை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் இந்துமதி இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துமதி உடலை மீட்டு இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்துமதியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் இந்த வழக்கை கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். 4 மாத கர்ப்பிணி தன்னுடைய மரணத்திற்கு மாமியார்தான் காரணம் என ஆடியோ பதிவிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.