Wednesday, June 17, 2026
Blog

3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை!  நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அருகேயுள்ள புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதுப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பிஹார் மாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது.
நீண்டநேர தேடுதலுக்கு பிறகு, அந்தக் குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அங்குள்ள முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், பெண் ஒருவர் அளித்த தகவலின் பேரில், புதுப்பேட்டை பகுதியில் தங்கியிருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிப்பின் மான்ஜி(19) என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அந்த இளைஞர் பிஸ்கட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ, தாக்குதல், கொலை உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து பிப்பின் மாஞ்சியை நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைக்கண்டித்து புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் தடுத்தும், அதை மீறி பேரணியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, சிப்காட் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் கும்மிடிப்பூண்டி (பொறுப்பு) டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள், ‘‘சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு உடனடியாக தூக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்ததோடு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து, எங்கள் கோரிக்கைளை ஏற்பதாக உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என கோஷமிட்டனர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்களை கலைக்க முயன்ற போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராசிக், சம்பவ இடம் விரைந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. புதுப்பேட்டை கிராமத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் அரவிந்த் கூறியதாவது: குழந்தை சிகிச்சைக்காக இரவு 10.30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மயக்க நிலையில் இருந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. பிறப்பு உறுப்பு மற்றும் மலம் கழிக்கும் இடம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.

அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டிருந்தது. அதுவும் குழந்தையின் இறப்புக்கு காரணம். அதிகாலை 4.30 மணிக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைய தொடங்கியது. 7.30 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, கைதான பிப்பின் மான்ஜி தங்கி இருந்த அறையில் மேலும் 3 பேர் தங்கியிருந்ததால், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் அவர் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்ட குழந்தையும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

 

பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி! தொடருமா?!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் விஜய் 2026 மே 25-ம் தேதியில் ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநிலம் முழுவதிலும் இருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறு பரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. தமிழக முதல்வர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கு இணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட ஜூன் 15-ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2025-ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதி நிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 2025-ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தள்ளுபடி விவரம் வருமாறு:

குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கான தள்ளுபடி (ரூபாயில்) 75,000 வரை பெற்றவர்களுக்கு கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி.

ரூ.75,000-க்கும் மேல் கடன் தொகை பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி.

இதன் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000மும் குறைந்தபட்சமாக ரூ.35,000மும் பணப்பயன் கிடைக்கும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

· 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி

· 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி

· 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி

ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர்க் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி தொடருமா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அனிருத் புதிய திட்டம்!

மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது.

2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரசிகர்களும் திரையுலகினரும் அவருடைய இசை திறமைக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்து கொண்டாடினர். வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் இசை சூழலில் நிலைத்திருக்கப் போராடும் ஒரு சுயாதீனக் கலைஞரின் சவால்களை ‘அரவிந்த்’ படைப்பின் மூலம் அனிருத் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இப்பாடலின் நாயகனான அரவிந்த் இசையமைப்பாளர் அனிருத்தின் மற்றொரு வடிவம். பல சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் தனது வாழ்வையே இசைக்காக அர்ப்பணித்த ஒரு தீவிர இசைக்கலைஞர் அரவிந்த். இன்றைய சூழலில் இசை வெளியிடுவது முன்பைவிட எளிதாகி விட்டது. ஆனாலும் ஒரு சுயாதீனக் கலைஞராக நீண்ட காலம் நிலைத்திருப்பது, குறிப்பாகத் தென்னிந்திய இசைச் சூழலில் இன்றும் மிகப்பெரும் சவாலாகவே உள்ளது. இருப்பினும், தனது இசை அதற்கான சரியான ரசிகர்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கை அரவிந்துக்கு வலுவாக உள்ளது.

இந்தப் பாடல் குறித்து அனிருத் பகிர்ந்து கொண்டதாவது, “ஏதோவொரு விதத்தில் நம் அனைவரையும் பிரதிபலிக்கும் ஒருவன் தான் அரவிந்த். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘அரவிந்த்’ இருக்கிறார். ஆனால் இந்தப் பாடல், தனது திறமையை உலகுக்கு நிரூபித்து வாய்ப்புக்காக ஏங்கும் ஒரு சுயாதீன இசைக் கலைஞரைப் பற்றி பேசுகிறது. இணையத்தில் எண்ணற்ற உள்ளடக்கங்கள் நிரம்பியுள்ள இந்தக் காலத்தில், ஒரு தனித்துவமான கலைஞர் வெற்றி பெற முயற்சிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

இந்தப் பாடல் அனிருத்தின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. தனது சொந்த அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையை இதில் பிரதிபலித்துள்ள அவர், இதே போன்ற பயணத்தில் இருக்கும் பல கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் இந்தப் பாடல் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் என நம்புகிறார். அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம், வரும் மாதங்களில் பல்வேறு வகையான சுயாதீன இசைத் திட்டங்கள் மற்றும் புதிய கருத்தாக்க இசைப் படைப்புகளை உருவாக்கி வெளியிட அனிருத் திட்டமிட்டுள்ளார்.
 

‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில், ”டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள். அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.‌

இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின்  புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.  

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் ‘டார்க்’. இப்படத்தின் மூலம் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ”இந்தப் படத்தின் டிரைலர் வழக்கமானதாக இல்லாமல் சற்று புதிதாக இருந்தது. இன்றைய தேதியில் ரசிகர்கள் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். ஏனெனில் புதிதாக கதை சொன்ன படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘டார்க்’ திரைப்படத்திலும் புதிதாக ஏதேனும் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.‌

இந்தத் திரைப்படம் ஒரு லாபகரமான திரைப்படமாக இருக்க வேண்டும். ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிமாக அமைந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை கொடுக்க வேண்டும். இப்படத்தின் ஹீரோவான அஜய் கார்த்திக்கும் இந்தப் படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில், ”டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா ‘அப்சஷன்’ என்ற ஒரு பத்து கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில்  ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் ‘டார்க்’ படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

‘டாடா’ படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்கு பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ”டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் ‘டார்க்’ படத்தின் கதையை சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் ? என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா..? புதுமுகமாச்சே..! என்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும், கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றி.

இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பை தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ”அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது.‌ அவருக்கு வாழ்த்துகள்.

இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.

இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.

நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா… வராதா… என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ‘பிளாஸ்ட்’, ‘சிறை’ போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.


தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், ”நான் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில், ”டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். முதல் படத்திலேயே கே பாக்யராஜ், நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி. மிகவும் இனிமையானவர். அப்பாவி.  என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,” என்றார்.

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், ”இந்த படத்தின் குழுவினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுடன் தான் என்னுடைய அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுகிறேன்.  அதனால் இந்த விழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது. எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். இதற்காக படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஜய் கார்த்தி இந்த படத்தில் நன்றாக வேற லெவலில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நியூ சாக்லேட் பாய். அவருடைய சிரிப்பு.. கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களான கணேஷ் கே பாபு மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்,” என்றார்.

நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில், ”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதை கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக் கொண்டதே இந்த படத்தின் படப்பிடிப்பில் தான். இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமான ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புது முகங்களை நம்பி தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கும் எங்களது வாழ்த்துக்கள்.‌

அவரும் நானும் சில வருடங்களாக இணைந்து பயணித்திருக்கிறோம். அதில் பல சுவாரசியமான சம்பவங்கள்- வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கே செந்தில். என் அப்பா. அவருக்கு எத்தனை மேடைகளில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. அவரிடம் தொடக்கத்தில் பேய் படம் என்று சொன்னதும் அவர் பின்வாங்கினார். மகனை இப்படி ஒரு சீரியஸான பேய் படத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமா..! என யோசித்தார்.  அதன் பிறகு எங்களது குழுவினரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து பட குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க கூடியவர்.‌ எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய சின்ன சின்ன அசைவுகளையும் துல்லியமாக கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.

டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ,இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் பேசுகையில், ”எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.

தயாரிப்பாளர் மணிமாறன்- மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்த படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாக காரணமாகவும் இருந்தது.

இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.

நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்பு தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசுகையில், ”டாடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிறைய பேச முடியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தத் தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை. அதே சமயத்தில் நான் மேடையில் அதிகமாக பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்த மேடையில் நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக  என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக படிக்க வேண்டும் என்றார்கள்… படித்தேன். உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்… உதவி இயக்குனராக பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்றார்கள்… சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்… குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள்… அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து.. பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ..! என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.

தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவை குறைக்க முடியும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன்.

கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.

அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

கல்யாணின் மனைவியிடம், ‘இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்’ என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.

டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.‌ அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது.‌ செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்… என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான்.‌ இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது ‘டாடா’ படத்திற்கான தேங்க்ஸ் தான்.    

இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று.

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் ..எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன். மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அஜயிடம் நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன். இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதே  காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார். நான் அப்போது கோபத்துடன் தனியாக சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் ‘கட் ‘சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.

இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  

இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது. அடுத்த மாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது. அதற்குப் பிறகு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.

‘டார்க்’ திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைக்க, ரவி சக்தி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள சண்டைப் பயிற்சியை நைஃப் நரேன் வழங்க, நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார். பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு; ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்; ஒப்பனை: முகம்மது; உடைகள் வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்பிரமணியன்; நிர்வாக தயாரிப்பு: மீனா அருணேஷ்; சவுண்ட் மிக்சிங்: B. முத்துக்கிருஷ்ணன்; டி ஐ: லிக்சோ பிக்சல்ஸ்; கலரிஸ்ட்: ஜி. எஸ். முத்து; ஸ்டில்ஸ்: குமரேசன்: தயாரிப்பு மேலாளர்: பாலாஜி பாபு எஸ்; கோ டைரக்டர்: சதீஷ் சுகுமார்; இணை ஒளிப்பதிவு: கண்ணதாசன் செழியன்; இணை படத்தொகுப்பு: தீபன் சந்திரசேகரன்; இசை லேபிள்: திங்க் மியூசிக்.

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா!

காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’.

ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80 வினாடிகளில் காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கலவையை அழகாக பதிவு செய்திருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் படத்தின் டீசர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அறிமுகம் டீசரின் பலமாக அமைந்துள்ளது.

குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் ஏற்றுள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது இயல்பான நடிப்பும், வித்தியாசமான திரைப்பிரசன்னமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது.

 மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.
படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் நம்பிக்கை கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாகா துர்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்திற்கு இசையமைத்திருப்பவர்கள் வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான FOXn (பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி). இவர்களின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் பா. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் இருக்கும் ‘லவ் ஓ லவ்’, ஜூலை 2026-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இளைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை!

சென்னை:

நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக இது கருதப்படுகிறது.

இத்திட்ட அறிமுகத்தின் வழியாக, உலகின் மிக அதிநவீன பி.எஃப்.ஏ (PFA) தொழில்நுட்பங்களான ‘மெட்டிரானிக் பல்ஸ்செலக்ட்’™ ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலும், ‘பயோசென்ஸ் வெப்ஸ்டர் வேரிபல்ஸ்’™ வடபழனி காவேரி மருத்துவமனையிலும் செயல்படுத்தப்படுகின்றன. இதில் வடபழனியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாதனமானது, மேம்பட்ட முப்பரிமாண (3D) இதய வரைபட தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘பல்ஸ்செலக்ட்’ மற்றும் ‘வேரிபல்ஸ்’ ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும், 3D வரைபட வசதியுடன் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த மைல்கல் சாதனை, இதய மின்உடலியல் மற்றும் மேம்பட்ட இதயத் துடிப்பு சிகிச்சையில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் முன்னோடித்துவ திறனையும், முதன்மை நிலையையும் மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த முன்னணி சர்வதேச இதய சிகிச்சை நிபுணர்கள், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து இந்த PFA திட்டத்தைத் தொடங்கி வைத்ததுடன், இத்தொழில்நுட்பத்தின் கீழ் முதல் சிகிச்சை செயல்முறைகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கினர்.
இதயத்துடிப்பு புலநீக்க சிகிச்சை (PFA) என்றால் என்ன?
இதயத் துடிப்பு கோளாறுகளில், குறிப்பாக மிகவும் பொதுவான ‘ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்’ (AF) எனப்படும் சீரற்ற இதயத் துடிப்புப் பிரச்சினைக்கு இதயத்துடிப்பு புலநீக்க சிகிச்சை என்பது அடுத்த தலைமுறை தொழில்நுட்ப அடிப்படையிலான அதிநவீன சிகிச்சையாகும். வெப்பம் அல்லது அதிகப்படியான குளிர்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கமான பழைய சிகிச்சை முறைகளைப் போலல்லாமல், பி.எஃப்.ஏ தொழில்நுட்பமானது துல்லியமாகக் கட்டுப்படுத்தப்பட்ட மின் அலைகளைப் பயன்படுத்துகிறது. இது இதயத் துடிப்பு கோளாறுகளுக்குக் காரணமான செல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழிக்கிறது.

மின்னாற்றல் மூலம் சவ்வுகளில் துளை உருவாக்கல் (எலக்ட்ரோபொரேஷன்) என்று அழைக்கப்படும் இந்த புதிய முறை, பாதிக்கப்பட்ட இதயத் திசுக்களை மட்டும் குறிவைத்து குணமாக்குகிறது. அதே நேரத்தில், அருகில் உள்ள உணவுக்குழாய், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. வெப்பம் அல்லது குளிர்ச்சியைப் பயன்படுத்தாத தொழில்நுட்பம் என்பதால், இது நோயாளிகளுக்குப் பாதுகாப்பானதாகவும், மருத்துவர்களுக்கு சிகிச்சை செயல்முறையை எளிதாக்கும் உத்தியாகவும் இருக்கிறது.
உலகளவில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதயத் துடிப்பு கோளாறுகளைக் குணப்படுத்துவதில் மிக முக்கியமான அண்மைக்கால கண்டுபிடிப்பாக பி.எஃப்.ஏ (PFA) அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
‘இதயத் துடிப்பு பரிசோதனைத் திட்டம்’ அறிமுகம்
இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட இதய நோய் சிகிச்சையில் முதுநிலை நிபுணர் டாக்டர் N.S. சிவகடாட்சம், மிகப்பெரிய மாற்றத்தை சாத்தியமாக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை வரவேற்றார். இதயத் துடிப்பு கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிறப்பான விளைவுகளை மேம்படுத்தும் திறன் கொண்டதாக இது இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
காவேரி மருத்துவமனையின் புதிய “ஹார்ட் ரிதம் பேக்கேஜ்” என்ற சிறப்பு பரிசோதனைத் திட்டத்தையும் இவ்விழாவின்போது டாக்டர் N.S. சிவகடாட்சம் தொடங்கி வைத்தார். நெஞ்சுப் படபடப்பு, மூச்சுத் திணறல், மயக்கம், விவரிக்க முடியாத சோர்வு அல்லது திடீரென இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகள், குறைந்த செலவில் தங்களைப் பரிசோதித்துக் கொண்டு, நிபுணர்களின் சிகிச்சையைப் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் நீண்ட கால ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும்.
டாக்டர் தீப் சந்த் ராஜா (இயக்குநர், இதய மின்உடலியல் பிரிவு): “எங்கள் இரண்டு மையங்களிலும் மூன்று நோயாளிகளுக்கு இந்த புதிய முறையில் வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான நெஞ்சுப் படபடப்பால் அவதிப்பட்டு வந்த 69 வயதுப் பெண்மணி ஆவார். மருந்துகளால் குணமாகாத அவருக்கு, வலது தொடைப் பகுதி நரம்பு வழியாக வெறும் ஒரு மணி நேரத்திற்குள் இந்த PFA சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாளே மிகக் குறைந்த மருந்துகளுடன் அவர் வீடு திரும்பினார். பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் அதிவேகம் ஆகியவையே PFA தொழில்நுட்பத்தின் தனிச்சிறப்புகள்.”
காவேரி மருத்துவமனையின் இதய மின்உடலியல் துறை, PFA சிகிச்சை மட்டுமன்றி ECG, ஹோல்டர் மானிட்டரிங், எலக்ட்ரோபிசியாலஜி ஆய்வுகள் மற்றும் பேஸ்மேக்கர், டிஃபிபிரிலேட்டர்கள் போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தும் சிகிச்சைகளையும் முழுமையான 3D வரைபட வசதிகளுடன் வழங்கி வருகிறது.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்: சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, எங்கள் நோயாளிகளுக்கு உலகத்தரத்தில் சிகிச்சை வழங்குவதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். சிகிச்சைகளை எளிதாக்கும், பாதுகாப்பை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களே எங்களின் முதன்மைத் தேர்வாகும். இந்த PFA அறிமுகம் அதற்குச் சிறந்த சான்றாகும்.”
‘பல்ஸ்செலக்ட்’ மற்றும் ‘வேரிபல்ஸ்’ ஆகிய இரண்டு மேம்பட்ட வசதிகள் மூலம் தமிழ்நாடு, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த இதய சிகிச்சை இனி சென்னையிலேயே கிடைக்கும் வண்ணம் காவேரி மருத்துவமனை தன் முன்னிலையை நிலைநிறுத்தியுள்ளது.

 

‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- R சந்திரசேகரன் – T ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், எழில் , நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, லியாகத் அலிகான், சி. ரங்கநாதன், ஏ. ஆர். வெங்கடேஷ் வசனகர்த்தா வி. பிரபாகர், இசையமைப்பாளர் தீனா, விநியோகஸ்தர் ஸ்ரீதர், தொழிலதிபர் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். இதனையே நான் பெரிய வெற்றியாக கருதுகிறேன். இந்த மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் பலரையும் திரையில்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து ஒன்றாக இந்த மேடையில் இருப்பது பெருமிதமாக இருக்கிறது. திரையுலகத்தை சார்ந்த ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்களுடைய ஒத்துழைப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அரசியல் சார்ந்த காமெடி படம். இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், ” வாழ்க்கையில் இந்த தருணத்தை பொக்கிஷமாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்கிறேன். ஏனெனில் நான் பார்த்து மிரண்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

‘மக்கள் தலைவா’ என்ற இந்தப் படத்தின் கதையை முதன்முதலாக இயக்குநர் சி ரங்கநாதன் மூலமாக இயக்குநர் எஸ். ஏ . சந்திரசேகரிடம் சொன்னேன். இந்தப் படத்தின் கதை- பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது. அவருடன் நீண்ட நேரம் கதையைப் பற்றி விவாதித்தேன். அதில் ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கு எதிராக அரசியலில் இரு துருவங்கள் ஒன்றிணைவது போன்று வரும். அப்போது இது எப்படி லாஜிக் படி சரியா வரும்? எனக் கேட்டேன். அரசியலில் அதெல்லாம் வரும் என்றார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு ‘மக்கள் தலைவா’ என்ற டைட்டிலையும் அவர்தான் தேர்வு செய்தார். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.

அதன் பிறகு இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பட்டியலிட்டபோது ராதாரவி இடம் பெற்றார். கதையைக் கேட்ட அவர் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாத பல விசயங்களை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதை எப்படி நீ யோசித்தாய்..! என கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தார்.‌

அதன் பிறகு இயக்குநர் சி ரங்கநாதன் இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ ரவி மரியா தான் என்றார். அதன் பிறகு அவர் அரசியல் மேடையில் பேசிய பேச்சுக்களை இணையத்தில் பார்வையிட்டேன். அப்போதே இந்த கதைக்கு நாயகன் இவர்தான் என தீர்மானித்து விட்டேன். அவரையும் சந்தித்தேன். முதலில் கதாநாயகனாக நடிக்க தயக்கம் காட்டினார். அதன் பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் நன்றி. அதன் பிறகு பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, என ஒவ்வொருவராக இணைந்தனர். அனைவருக்கும் நன்றி ” என்றார் .

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ” 1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘தீர்த்தக் கரையினிலே’ என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்றால்.. அதற்கு ரவி மரியாவின் நட்புதான் காரணம். ரவி மரியா சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பண்பாளர். அனைவருக்கும் உதவி செய்யும் தாராள மனப்பான்மை கொண்டவர். சிறந்த படைப்பாளியும் கூட. இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கியவர்.

இந்தப் படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள். பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால்… இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.‌

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் ‘மக்கள் தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.

ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. ‘மக்களாட்சி’ என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது.‌

இந்தப் படத்தை செய்யலாமா…? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.

ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் இன்று இருக்கிறது.

உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம்… கற்பனையைப் பேசலாம் …ஆபாசத்தை பேசலாம்… அருவெறுப்பை பேசலாம்… வன்முறையை பேசலாம்… கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம்… ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான ‘குற்ற பத்திரிக்கை’. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம்.

இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ‘மக்கள் தலைவா’ படம் உருவாகி இருக்கிறது. அதிலும் நாஞ்சில் சம்பத்- பழ கருப்பையா- ராதாரவி – என அரசியல்வாதிகள் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

நட்பிற்கு இலக்கணமாக திகழும் ராதாரவி. இந்தப் படத்தைப் பற்றியும், இதில் பணியாற்றிய கேமராமேனை பற்றியும் பாராட்டி பேசினார். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரான கேமரா மேன் என குறிப்பிட்டார். எனக்கு கேமரா மேன் கார்த்திக் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவருடைய வேலையைப் பற்றி ராதாரவி சொன்ன பிறகுதான் அவருடைய திறமையை நான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ‘மக்கள் தலைவா’ மட்டுமல்ல.. அதன் கீழ் ‘ஃபார் சேல்’ என இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி யோசிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதனை டைட்டிலில் டேக் லைனாக இடம்பெறச் செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நாம் அரசியலில் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். படத்தில் இந்த கதாபாத்திரத்தில் பேரரசு நடித்திருக்கிறார்.

நடிகர் ரவி மரியாவிற்கு இடுப்பு வளையாது. ஆனால் இந்த படத்தில் அவர் ஹீரோயினுடன் பாடல் காட்சியில் நன்றாக டான்ஸ் ஆடி இருக்கிறார். அவருடைய நல்ல மனதிற்கும் நகைச்சுவையான படம் என்பதாலும் இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் – பாடலாசிரியர் துளசி ராமன் பேசுகையில், ” இது என்னுடைய முதல் மேடை. மூன்று திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன்.

ஜாதி, மதம், மொழி, இனம், இவைகளை விட பவர்ஃபுல் சினிமா. இன்னும் நிறைய முதல்வர்களை கொடுக்க இருக்கும் சினிமா. சினிமா சாதாரணமான கலையல்ல. மனிதர்களின் கனவுகளை தாங்கும் வொண்டர்ஃபுல் வொண்டர் வேர்ல்ட். இதில் இன்று ‘மக்கள் தலைவா’ என்ற புதிய லைட் உருவாகி இருக்கிறது. இந்த லைட்டை கொடுத்த தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனுக்கு நன்றி. இதற்கு கரண்ட் கொடுத்த இயக்குநர் ராம்தேவுக்கு நன்றி.

மக்கள் சக்தி சூரியன் தான். அதன் வெளிச்சம் கேட்கும் கலைஞன் நான். விதியை எழுதியது கடவுள் தான். அந்த விதியை மாற்றி அமைப்பது மக்கள் தான். அதனால் தான் மக்களாகிய உங்களிடம் பணிவுடன் கேட்கிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள். என் பாடலுக்கும் ஆதரவு தாருங்கள். மக்களை மனதை மயக்கி, கொள்ளை கொள்ளும்.. காலத்தை வெல்லும்.. இன்னும் நிறைய பாடல்கள் என்னிடம் இருக்கிறது. அன்பான இயக்குநர்களே! தயாரிப்பாளர்களே! எண்பது மற்றும் தொண்ணூறுகளில் எப்படி அற்புதமான பாடல்கள் வெளியானதோ.. அதனை இன்றுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப வைப்( Vibe) பாக மெகா ஹிட் கொடுக்கிற பாடல்கள் என்னிடம் இருக்கிறது. இந்த மக்கள் தலைவா படம் காமெடி மூவி. இதனை தியேட்டரில் பாருங்கள். உங்களுடைய டென்ஷன் குறைந்து ஹாப்பி அதிகமாகும்.

ஒரு பாடலாசிரியராக… இசையமைப்பாளராக… இந்த படத்தின் இசைக்காக.. ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

இனிமை இனிமை செவிக்கு இனிமை இசை
சிந்தைக்கு இனிமை இசை தாயானாலும் இசை
தவழும் சேயானாலும் இசை.
காதல் மலர்ந்தாலும் இசை
கடவுளை வணங்கினாலும் இசை இன்பத்தின் திறவுகோல் இசை துன்பத்தின் ஆறுதல் இசை
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் இசை மழலையின் சொல்லும் இசை மக்களையே வெல்லும் இசை.
இசை இல்லா உலகம் இல்லை.
ஆக மொத்தத்தில் இசைக்கு இசையாதவர் எவருமில்லை. ஆகவே இசை தான் வாழ்க்கை. இதுதான் கொள்கை. அளித்தேன் உழைப்பை. அடைந்தேன் சிறப்பை. வென்றேன் மக்களின் அன்பை..” என்றார்.

அரசியல்வாதி -தமிழறிஞர்- தயாரிப்பாளர் – நடிகர்- பழ .கருப்பையா பேசுகையில், ” இயக்குநர் ராம்தேவ் நகைச்சுவையான படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஐந்து நாள் பணியை மூன்று நாளிலேயே விரைவாக நிறைவு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவருக்கு ஒளிப்பதிவாளரும் இணையாக பணியாற்றினார். இயக்குநர் தான் இப்படத்தின் முதல் தயாரிப்பாளர். தொடங்கிய பிறகு இடையில் நின்று விட்டது. தயாரிப்பாளர் தேவைப்பட்டார் அப்போது அவருடைய சொந்த ஊரில் உள்ள தொழிலதிபர் கவிதாலயா சரவணனை பார்த்து பேசி, மயக்கி, அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கி படத்தின் பணிகளை தொடங்கினார். அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படமும் அவருடைய வீட்டில் தயாரானது தான். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அவர் பெரிய செல்வந்தர். எங்களிடம் பேசும் போது நான் இரண்டு முறை அமெரிக்காவிற்கு சென்று திரும்பும் செலவுதான் பரவாயில்லை. நான் தயாரிக்கிறேன் என்றார். அதன் பிறகு தற்போது இந்த படம் வெளியாகும் வகையில் அவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இயக்குநர் ராம் தேவிற்கு நன்றாக நகைச்சுவையாக கதையை சொல்லக்கூடிய ஆற்றல் உண்டு. நான் இந்தப் படத்தில் கெடுமதியாளனாக அதாவது வில்லனாக நடித்திருக்கிறேன். பிற வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவையாக இந்த படத்தில் தான் நடித்திருக்கிறேன். இதை மிகவும் ரசித்தேன்.

எந்த ஒரு படமும் கதையும் காலத்தை கடந்து நிற்க முடியாது. ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வந்த காலகட்டத்தில் ‘பராசக்தி’ வந்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் எவராலும் காலத்தை கடந்து எந்த ஒரு கதையையும் சொல்ல முடியாது. காலத்திற்கு உட்பட்டு காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை உள்வாங்கி கதையை சொல்கிறவன் வென்று விடுவான்.

கே பாக்யராஜ் ஒரு சிறந்த கதாசிரியர். காலத்தையும் சமூகத்தையும் உள்வாங்கி அதை கதையாக சொல்கிற ஆற்றல் நமக்கு இருந்து, அதை கலை வடிவத்தில் வெளிப்படுத்தும் போது அவை மிகப்பெரிய வெற்றியை பெறும்.

மகாபாரதங்கள் ஏன் மீண்டும் மீண்டும் எழுதப்படுவதில்லை என்று நான் நினைப்பேன். மகாபாரதத்தில் உள்ள தர்ம புத்திரனை உருவாக்க.. சிறந்த இயக்குநர்கள் போதாது. அதற்கு வலிமை வாய்ந்த வியாசரை போன்ற ஒருவர் தான் வேண்டும்.

மூவாயிரம் ஆண்டுகளாக தர்ம புத்திரனுக்கு நிகராக எந்த ஒரு கதாபாத்திரத்தையும் யாராலும் உருவாக்க முடியவில்லை. வாழ்க்கையிலும் சந்திக்கவில்லை. இதிகாசங்களிலும் சந்திக்கவில்லை.. அவனைப் படைப்பதற்கு அவனை விட ஆற்றல்மிக்க கதை தலைவன் வேண்டும். அதனால் தர்ம புத்திரனை வியாசரை தவிர வேறு யாராலும் படைக்க முடியாது.

நான் படித்த கதைகளிலேயே மிகவும் சிறந்த கதை லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘ரெஸரக்சன்’. டால்ஸ்டாய் காந்திஜிக்கே முன்னோடி. இந்த கதையை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். இப்படி ஒரு கதை தலைவனை எப்படி ஒரு கதாசிரியரால் உருவாக்க முடியும் என்பதை நான் எண்ணிப் பார்த்தால் … அந்த கதையின் தலைவனே டால்ஸ்டாய் தான்.

நம் காலத்தில் காலத்தின் சரிவை… அரசியலின் இழிவை… வெளிப்படுத்துகின்ற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புடம் போட்ட தலைவர்கள் நாடாளும் தன்மை வேறு. அவர்கள் அரசியல் என்பது அதிகாரம் என்று கருதியவர்கள் இல்லை. அரசியல் என்பது தொண்டு. அரசியல் என்பது தியாகம். அரசியல் என்பது நேர்மை.. என்று ஒரு 30 ஆண்டு காலம் சிறைகளில் கழித்து, வாழ்ந்து நெறிப்படுத்தப்பட்டு பிறகு ஆட்சித் தலைவனாக வருகிறவர்கள்.

அதற்குப் பிறகு கூட இந்த மண்ணில் கொள்கை சார்ந்த இயக்கங்கள் வளர்ந்தன. அந்த கொள்கையோடு ஊறி திளைத்து தலைவர்களாக மேன்மை அடைகிறார்கள். ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகாரத்திற்காக…. அதிகாரத்தை சுவைப்பதற்காக … பெருமைக்காக… என்ற நிலை வந்து விட்ட பிறகு, அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டே தீரும். அந்த வீழ்ச்சி ஏற்பட்டது . ஆனால் தமிழ் சமுதாயம் முதிர்ச்சி அடைந்த சமுதாயம். ஆகவே இதிலிருந்து மீட்பதற்காகத்தான் ராம்தேவ் போன்றவர்கள் கதை எழுதுகிறார்கள். இது இன்றைய அரசியல் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மோசமாக இருக்கிறது. இதிலிருந்து தமிழ் சமூகம் மீள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கதையை எழுதி இருக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

‘மக்கள் தலைவா ஃபார் சேல்’ என்பது மக்களுக்கு தலைவனாக இருக்கின்றவன் மக்களை வழிநடத்துகின்றவனாக இருக்க வேண்டும். விற்பனைக்கு உரியவனாக இருக்கக் கூடாது என்ற செய்தியை மிகச் சிறப்பாக இயக்குநர் ராம்தேவ் சொல்லி இருக்கிறார். ஆகவே அவரை நான் பாராட்டுகிறேன்.

எனவே கதையின் நாயகன் என்று சொல்வதற்கு ரவி மரியா வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த படம் வெற்றி பெற்று விட்டால்… நீங்கள் மிகப்பெரிய கதை தலைவராகி விடுவீர்கள். வெற்றி சார்ந்தது தான் நம்முடைய வாழ்க்கை ” என்றார்.

நடிகை அப்சரா விஜய் பேசுகையில், ” இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் ரவி மரியா சார் நடிப்பு , நடனம் என பல விசயங்களில் பயனுள்ள குறிப்புகளை வழங்கினார். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகர் ரவி மரியா பேசுகையில், ” என்னுடைய அன்பிற்காக, நட்பிற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

வழக்கமாக நான் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தாலும் காமெடியாக நடித்தாலும் கேரக்டரில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில், ” தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தேனியின் மன்னன்.. சினிமாக்காரர்களின் அண்ணன்.. அவருடைய வீட்டிற்கு விருந்தினர்களாக செல்பவர்களுக்கு உணவு உபசரிப்பதுடன் பெரிய அளவிலான திருப்பதி வெங்கடாஜலபதி புகைப்படத்தையும் பரிசாகத் தருவார். இந்தப் பரிசை சித்தப்பா பேரரசு வாங்கினார். அவர் தலைவர் ஆகிவிட்டார். நானும் வாங்கினேன். விரைவில் தலைவராகி விடுவேன். ‘மக்கள் தலைவா’ படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அதனால் நானும் தலைவனாகி விடுவேன்.

இயக்குநர் ராம்தேவுக்கு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு .முதல் காட்சி உங்களது தான். வந்து விடுங்கள் என்றார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்பிற்கு சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு இல்லை. அன்று ஒயின்ஷாப் விடுமுறை. கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன். இயக்குநர் இங்கு தான் வர சொன்னார் என்றேன். அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகி போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.

அப்போது அவரிடம் பேரரசு நடிக்கும் போது கடையை திறந்தீர்கள்… நான் நடிக்கும் போது ஏன் கடையை மூடி வைத்திருக்கிறீர்கள்? என கேட்டபோது.. அவர் வந்த போது ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் இருந்தது. இன்னைக்கு ஒரு பாட்டிலுக்கு இருபது ரூபாய் எக்ஸ்ட்ராவாக ஏறி இருக்கிறது. இந்த நியாயத்தை நான் யாரிடம் போய் சொல்வது? என கேட்டார்.

இந்தப் படம் வெளியான பிறகு மது பிரியர்கள் அனைவரும் பேரரசு சித்தப்பா வீட்டிற்கு செல்வார்கள். அங்கு ஒரு கொள்கை ஏற்படும். அதன் பிறகு பாட்டில் விலை குறைக்கப்படும்.

தற்போது 9: 45 கெல்லாம் கடையை மூடி விடுகிறார்கள். நான் இந்த ஆட்சியில் டாஸ்மாக் இரவு 12 மணி வரை திறந்திருக்க வேண்டும். அதேபோல் காலையில் 7:00 மணி அளவில் கடையை திறந்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அங்கங்கே ஒயின் ஷாப் குறைவாக இருக்கிறது. கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ” எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ.. அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும். இங்கு பேசிய அனைவரும் ரவி மரியாவின் உதவும் குணத்தையும் , பெருந்தன்மையையும் குறிப்பிட்டனர். இதை கேட்கும் போது சந்தோஷமாக இருந்தது.

நான் அவருடன் அதிகமாக உரையாடியதில்லை. அவர் பார்ப்பதற்கு கரடு முரடானவர் போல் இருந்தாலும்.. அவருடைய பேச்சு முரணாக இருந்தாலும்.. ஆனால் அவருடைய கேரக்டர் இவ்வளவு சிறப்பாக இருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார்.‌

நான் இங்கு வந்த பிறகு தான் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத் – பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவர்களுடைய தமிழை கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் பேச முடியாது. அதில் அவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள்.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்- இசையமைப்பாளர் -நடிகர்கள்- நடிகைகள்- என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இங்கு சென்சார் பிரச்சனையை பற்றி பேசினார்கள். என்னுடைய படங்கள் என்றால்.. சென்சாரில் நான்கு பெண்கள் ஒரு ஆண் இருப்பார்கள். ‘மௌன கீதங்கள்’ படத்தில் ஒரு காட்சி இடம் பிடித்திருக்கும். இந்த காட்சியை சென்சார் குழுவில் இருந்த பெண்கள் பிடித்துக் கொண்டனர். இது எப்படி? இது ரெட்டை அர்த்தத்தை குறிப்பிடுகிறது. எப்படி அனுமதிப்பது? என கேள்வி எழுப்பினர். இதில் என்ன இரட்டை அர்த்தம். எனக்கு எதுவும் புரியவில்லை என்று சொன்னேன். அப்போது அவர்களிடம் கணவன் – மனைவி இடையே தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தேன்.

இதனால் சில காட்சிகள் இயல்பாக இருந்தால் அதனை போராடி இடம்பெறச் செய்யலாம். இந்த படத்தில் இயக்குநர் ராம்தேவ் அரசியலை சொல்லி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில் தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதில்லை.

இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்ட போது இதனை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று நினைத்து உதவிய தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனை பாராட்டுகிறேன்.

இந்த படம் இந்த நேரத்தில் அரசியல் நையாண்டியுடன் வந்தால் எதிர்பார்ப்பு கூடுதலாக தான் இருக்கும். சிரித்துக் கொண்டே காமெடியாக சொல்லும்போது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்” என்றார்.

VG Pageants Chennai Launched

Chennai:

A new platform dedicated to women’s confidence, personality development and leadership was officially launched in Chennai on Sunday with the unveiling of VG Pageants Chennai at a press conference held at The Park Chennai, Nungambakkam.

The launch marked the entry of the National VG Pageants platform into Chennai, creating a structured opportunity for women to participate in city-level pageants and advance to the prestigious VG Miss & Mrs India National Pageant.

Addressing the gathering, India’s Leading Transformation Leader, Binita Shrivastava, Founder and National Director of VG Pageants, said that women across India possess immense potential and only need the right platform to showcase their abilities. Widely recognized as India’s Leading Transformation Leader, TEDx Speaker, Amazon Bestselling Author and Founder of Visionara Global, Binita has built a community of more than 1.3 million followers and has inspired over one lakh women through her transformational initiatives.

She said that VG Pageants is not merely a beauty pageant platform but a movement that encourages women to step beyond limitations and embrace leadership, confidence and self-expression. Speaking on the occasion, Dr Vishwas Srivastava, CEO of Visionara Global, said that the organization is expanding its city leadership model across India to provide local women with access to national opportunities while creating strong city-based communities.

The Chennai chapter will be led by Radhika Lakra, City Director – VG Pageants, Chennai. Sharing her journey, Radhika spoke about balancing a demanding banking career, family responsibilities and motherhood while continuing to pursue her own dreams.

A First Runner-Up at VG Miss & Mrs India Global Icon 2026, Radhika said her journey through Visionara Global helped her rediscover confidence and purpose. At the age of 47, she chose to challenge limitations and step onto a national stage, proving that it is never too late to begin again. She said her mission is now to inspire women across Chennai to believe in themselves, restart their dreams and build a life filled with confidence and self-worth.

During the press conference, organisers announced the upcoming VG Miss Chennai, VG Ms Chennai and VG Mrs Chennai city pageants, along with Kids & Teen Fashion Shows, Runway Shows, Grooming Programs and Professional Portfolio Opportunities.

Organizers also informed that winners from the city platform will qualify for the national stage of VG Miss & Mrs India, providing participants with an opportunity to represent their city at a national level. The initiative is expected to create new avenues for women seeking confidence, visibility, personality development and leadership opportunities while positioning Chennai as an important center in Visionara Global’s expanding national network.

‘டபுள் ஆக்குபன்சி’ விமர்சனம் RATING 3.2/5

போஸ் வெங்கட், வினோதினி தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் மூச்சு இல்லாமல் இருக்க, போஸ் வெங்கட் கடவுளிடம் கதறுகிறார். அப்போது வானத்தில் இருந்து வெளியான வெளிச்சம் மூலம் குழந்தையின் நின்ற மூச்சு திரும்ப கிடைக்கிறது. அதே சமயம் ஒரு அதிசயமும் நிகழ்கிறது. பிறக்கும் போது ஆணாக இருந்த குழந்தை, அந்த வெளிச்சம் பட்ட பிறகு பெண் குழந்தையாக மாறிவிடுகிறது. அது மட்டும் இன்றி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அதிசயமும் நடக்கிறது.

உலகத்தில் எங்கும் நிகழாத இந்த அதிசய குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று விடும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதி விபத்து ஒன்றில் இறந்து விட, இந்த அதிசய பிறவிகள் சென்னைக்கு வந்து விடுகிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமலும், ஒருவரது செயல்கள் மற்றவரின் நினைவில் நிற்காமலும் இருக்கும் இவர்களது இந்த மாற்றம் மட்டும் தினம் தினம் அரங்கேற, பகல் முழுவதும் ரேஷ்மா வெங்கடேஷாக இருப்பவர், இரவு சந்தோஷாக மாறிவிடுவார்.

இந்த விசித்திரமான இவர்களது வாழ்க்கையில் காதல் மலர்கிறது. ரேஷ்மா வெங்கடேஷை வினோத் கிஷன் காதலிக்க, சந்தோஷை சம்யுக்தா விஸ்வநாதன் காதலிக்கிறார்.இவர்களது விசித்திரமான வாழ்க்கை இவர்களது காதலில் பல சிக்கல்களை உருவாக்க, அதே சமயம் இவர்களது அதிசய பிறப்பை வியாபரமாக்கி பணம் சம்பாதிக்க மரபணு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று முயற்சிக்கிறது. இவற்றில் இருந்து தப்பித்து இவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தார்களா ? இவர்களது இந்த அதிசய வாழ்க்கை முடிவுக்கு வந்ததா ? இல்லையா?? என்பதே கதை..

நாயகனாக வரும் சந்தோஷ் காதல், டான்ஸ், ஆக்சன் சீக்வன்ஸ் என புகுந்து விளையாடுகிறார். இவரது காதலியாக சம்யுக்தா கச்சிதம். நாயகியாக வரும் ரேஷ்மா வின் கண் பார்வை, உடல் மொழி அருமை. ஆடியன்சுக்கு நல்ல எமோஷனல் கனெக்ட் தருவதில் இவருக்கு வெற்றி.

நாயகியின் காதலனாக வரும் வினோத் லிஷன் உயிர்ப்பான நடிப்பு. விடிவி. கணேஷ் ,பகவதி பெருமாள் இருவரின் பங்களிப்பும் அருமை. ஒளிப்பதிவு சாந்தகுமார். அருமையான ஒர்க். சாம் சி.எஸ்சின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓக்கே ரகம். ஆண் பெண்ணாக மாறும்போது கலரிங் கலக்கல் ரகம். முதல் பாதியில் இருந்த துள்ளல் மற்றும் சிரிப்பு சத்தம் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது படத்திற்கு சற்று பலவீனம் என்றாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத மற்றும் உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள முடியாத வித்தியாசமான இரட்டையர்களின் உணர்வுகள் மூலம் அந்த பலவீனத்தையும் பலமாக்கி விடுகிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசுவாமி.

மைனஸ்: இரண்டாம் பாதி கதை சோர்வு… பாடல்களில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘டபுள் ஆக்குபன்சி’ உடல் மாற்ற ரசனை.

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா!

பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ‘நூறு சாமி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ் எஸ் குமரன், சிமோன், சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்துடன் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினர்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி வரவேற்று பேசுகையில், ”ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர், ‘நன்றாக நடித்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். என்னை நன்றாக நடிக்க வைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி. இந்தப் படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில், “இந்த மேடையில் என்னை அறிமுகப்படுத்தி லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி. ஒரு நாள் இயக்குநர் சசி போன் செய்து.. ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார். அதுதான் ‘அம்மா அம்மா.. ‘எனும் பாடல். அந்த பாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்து போனது. உடனடியாக இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் வழிகாட்டுதல் தான் முதன்மையான காரணம்,” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.

எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.

பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,” ‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.

நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். ‘நூறு சாமி’ படத்தை பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும். எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் ‘சீலிங் ஃபேன்’ காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்து பார்க்க முடிந்தது.

சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, ‘இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்’ என்றார். அதேபோல் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், ”இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.

விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.

பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி- அவமானம்- என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , ‘எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்’ என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ… இல்லையோ… நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்… நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ… இல்லையோ… நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.

என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் ‘இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது’ என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். ‘படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் -பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ” நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி  இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே  சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.

சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால்.. ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.

நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.

நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்… அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.

பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ…! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா – ஏ ஆர் ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.

இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.

இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் … இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள்… நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது” என்றார்.

இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், ” இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா.. பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி, மிஷ்கினில் நிறைவடைகிறது.

எல்லோரையும் போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம். அவருடைய எல்லா படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் ‘டிஸ்டர்ப்டு’ ஆக இருந்தேன்.

சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்… ஒரு காலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான். அதன் பிறகு அச்சு ஊடகம் வெளியான போது.. அது கிசுகிசுவாக மாறியது. அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது. சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.

ஒரு கள்ள காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்… பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,’ இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!’ என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை- பாலியல் வன்கொடுமை -ஆகியவை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் ‘நூறு சாமி’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.

இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.

நீண்ட நாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி.. கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும்.

விஜய் ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்.. திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் ‘நூறு சாமி’ படத்தை பார்த்த பிறகு, அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி.

ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி- தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்-  எங்கேயோ நடை பயணத்தின் போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்- தேசியக் கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் – அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை- என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும் தான் முடியும். இந்தப் படம் மிகச் சிறந்த படம். வணிக ரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ” இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். ஏனெனில் ‘பூ’ படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது.  இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர். வேறு ஒரு நடிகர் இருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்தது. அந்தத் தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய் ஆண்டனி சார்.

இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார். அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சாமி விஜய் ஆண்டனி தான்.  இந்தப் படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் விஜய் ஆண்டனி தான். இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசியபோது ‘சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றார்.

இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல. பக்கா கமர்ஷியல் திரைப்படம். கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த படம் வெற்றிகரமான திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ” தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் சசி சாருக்கு என் வாழ்த்துக்கள்.

விஜய் ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்-  வித்தியாசமான படங்கள்-  புது இயக்குநர்கள் – என தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் சசி பேசுகையில், ” இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, ‘நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்’ என்றார்.

இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் ‘நூறு சாமி’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.

இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்-  படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.

என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.

ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.

இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்… தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.

தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.

ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.

இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.

இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் ” என்றார்.

தயாரிப்பாளர் – நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ” என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள்.  அதில் ஒன்று ‘டிஷ்யூம்’ படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை ‘லவ்வர் பாய்’ ஆக மாற்றியது.  இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா -அக்கா- தங்கை- என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது” என்றார்.