Wednesday, June 3, 2026
Blog

புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி! என்ன?!

மிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால். பின்னர், அவர், ”போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து, காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், சிறைத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. முதல்வர் விஜய் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம். தமிழக காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

கடந்த 1994-ம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவர். 22 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியானார். தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாப் மொழியில் சரளமாக பேசக்கூடியவர். தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் எஸ்.பி., சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்தார்.

பின்னர் 7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். தொடர்ந்து ஐஜி-யாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பி சிபிசிஐடி ஐஜி-யாகப் பதவி வகித்தார். மேலும் அவர் மதுரை காவல் ஆணையரானார். மீண்டும் சிபிசிஐடி ஐஜி ஆனார். பின்னர் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் 2020-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றார். பின்னர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்தார். அதன் பின்னர் அயல்பணியாக டெல்லி சென்ற அவர், தற்போது தமிழக டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கத்தையும் வென்ற இவர் சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள்!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(29). இவர், தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவரும், இவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான ஜெயபால்(27) என்பவரும், ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறினர். இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, பாலசுப்பிரமணியனை கட்சியில் இருந்து நீக்கி, தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்

இச்சம்பவம் தொடர்பாக கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில், திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதல்வர் செயல்படப் போவது எப்போது?’’ என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை தவெக நிர்வாகிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கும், 6 மாதம் கழித்துதான் நாங்கள் கேள்வி கேட்க வேண்டுமா முதல்வரே? இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு செயல்படுகின்ற லட்சணமா? ‘பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம்’ என்று வாய்ச்சவடால் விட்டு ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’ என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘பெண்கள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? குற்றவாளிகள் இருவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதை பதைக்கச் செய்கிறது. லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய், பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, தான் வகிக்கும் பதவியின் பொறுப்பை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!

மிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார்.

அதேபோல் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்து பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வருகிறது.

புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது. புதிய ஆட்சி அமைந்த பின்னரும் அதிகாரிகள் மாற்றம் பெரிய அளவில் நடந்து வருகிறது.

அந்த வகையில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

அதேபோல், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூதாட்டி செயின் பறிப்பு: போக்குவரத்து காவலர்கள் மடக்கி பிடித்தனர்!

சென்னை:

இன்று (03.06.2026) காலை சுமார் 8.15 மணியளவில், P-3 காவல் நிலையத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி (SSI), திரு. ஸ்ரீதரன் (HC 2635) மற்றும் திரு. செந்தில்குமார் (HC 42682) ஆகியோர் வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி பாயிண்டில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 5.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார்.

இதனை கவனித்த காவலர்கள் உடனடியாக செயல்பட்டு, அந்த நபரை துரத்திச் சென்று பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்து, P-5 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் யார்? என்று கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரட்டி பிடித்த போக்குவரத்து காவலர்களை பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் அப்பகுதி பொது மக்கள் பாராட்டினர்.

MICE Roadshows in Ahmedabad, Kolkata and Chennai

The Sri Lanka Convention Bureau, functioning under the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism, is set to organize three impactful MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) Roadshows and Evening Networking Sessions in Ahmedabad, Kolkata, and Chennai during the last week of May 2026. This initiative forms part of a focused effort to strengthen Sri Lanka’s position as a preferred MICE tourism destination in India, one of the country’s most important source markets.

The first roadshow will be held on 25th May 2026 at the Crowne Plaza Ahmedabad City Centre in Ahmedabad, followed by the Kolkata on 27th May 2026 at the ITC Sonar. The third roadshow will take place on 29th May 2026 at the Pullman Chennai Anna Salai in Chennai.

India continues to be a leading source market for Sri Lanka tourism in both leisure and MICE tourism, offering immense growth opportunities. It has consistently maintained its position as the. According to statistics published by the Sri Lanka Tourism Development Authority, a total of 531,511 Indian tourists visited Sri Lanka in 2025, representing 22% of the country’s total tourist arrivals. Sri Lanka also achieved a historic milestone in 2025 by recording the highest number of Indian tourist arrivals ever received by the country. In addition, Sri Lanka’s tourism earnings surpassed USD 3.2 billion during the year 2025.

MICE and business tourism accounts for approximately 10% of the total tourist arrivals to Sri Lanka and remains a significant sub-sector within the tourism industry. From January to mid-May 2026, Sri Lanka welcomed 951,742 tourists, of which 221,953 were from India. This positive trend reflects the growing demand for travel  and the strong connectivity between the two neighbouring countries.

travel between Sri Lanka and India remains highly convenient, with SriLankan Airlines operating 90 weekly flights connecting Sri Lanka with nine Indian cities. In addition, IndiGo and Air India operate daily flights to Ahmedabad, Kolkata, and Chennai, ensuring seamless accessibility for both business and leisure travellers.

The upcoming roadshows will showcase Sri Lanka’s diverse MICE and tourism offerings, reaffirming that the destination is fully open and prepared to welcome leisure, business, and corporate travellers. The events are specifically designed to engage MICE tour operators, media representatives, influencers, corporate leaders, trade associations, and other key stakeholders from the Indian travel industry.

A 24-member delegation comprising leading Sri Lankan tour operators and hoteliers will participate in the initiative, highlighting the country’s diverse attractions, world-class infrastructure and hospitality, and unique experiences.

These Sri Lanka Tourism MICE promotions are structured to facilitate meaningful B2B (Business-to-Business) interactions and productive dialogue among industry stakeholders. Evening networking sessions will further strengthen professional relationships in a more informal setting. In addition, press conferences scheduled in all three cities are expected to generate extensive media coverage and enhance Sri Lanka’s visibility as a premier travel and MICE destination. A performance by a Sri Lankan cultural troupe will also provide a vibrant cultural showcase, highlighting the country’s rich heritage and traditions.

Mr. Dheera Hettiarachchi, Chairman of the Sri Lanka Convention Bureau, stated, “Sri Lanka is an ideal MICE destination due to its close proximity and strong connectivity with India, making it a cost-effective and attractive choice for meetings, incentives, conferences, and exhibitions. These MICE promotions will further showcase Sri Lanka’s growth and strengthen tourism and business ties between the two countries.”

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான  உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 
2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் படக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பாக, படத்தின் காட்சிசார் சுருக்கமும் (Visual Synopsis), கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இது படத்தின் உலகத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றிய சுவாரஸ்யமான முன்னோட்டத்தை வழங்கியதுடன், ஜூன் 25, 2026 அன்று நடைபெறவுள்ள திரையரங்கு வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
 
நிகழ்ச்சியில் பேசப்பட்ட முக்கிய கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:
 
நடிகரும் எழுத்தாளருமான கவிதா பாரதி:
 
“தயாள் பத்மநாபன் கர்நாடகாவில் தொடர்ந்து தரமான மற்றும் துணிச்சலான படைப்புகளை வழங்கும் இயக்குநராக கொண்டாடப்படுகிறார். அவரது மூன்றாவது தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் அவர் என்னைத் தொடர்புகொண்டு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுமாறு கேட்டார். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பானது. பார்வையாளர்களுக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”
 
ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர்செல்வம்:
 
“எழுத்து வலுவாக இருக்கும் போது திரைப்படமும் ஆழமாக மாறுகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க முடிகிறது. ‘கொன்றால் பாவம்’ படத்தின் அசல் பதிப்பைப் பார்த்த பிறகே தயாளுடன் எனது நட்பு தொடங்கியது. பல இயக்குநர்கள் வளர்ச்சியுடன் தங்களது படைப்புகளின் அளவை பெரிதாக்க முயல்வார்கள். ஆனால் தயாள் தனது கலைநோக்கில் உறுதியாக இருக்கிறார். மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து ஒவ்வொரு துறையையும் திட்டமிட்டு அணுகுகிறார். திரைக்கதை கட்டத்திலேயே ஒளிப்பதிவாளரை இணைக்கும் இயக்குநர்கள் அரிது. குழுவின் மீதான அவரது மரியாதை அபாரமானது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு காட்சிவிருந்தாக (Visual Treat) இருக்கும்.”
 
இசையமைப்பாளர் தர்புகா சிவா:
 
“பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும், சில படங்களே நம்மை சிந்திக்க வைக்கின்றன. எல்லா படங்களும் முடிந்தபின் பெருமிதத்தை தராது. ஆனால் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ எனக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஹுக் ஸ்டெப்ஸ், டிரெண்டிங் ஃபார்முலாக்கள், வைரல் அம்சங்கள் பற்றி எங்களிடம் பேச்சே இல்லை. திரைக்கதை கேட்டதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் தயாள் சார் நேர்மையாக இருந்தார்.”
 
நடிகர் வெற்றி:
 
“தயாள் சார் போல இவ்வளவு திட்டமிடலுடன் செயல்படும் இயக்குநரை நான் பார்த்ததில்லை. ‘கொன்றால் பாவம்’ பார்த்த பிறகு அவருடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்போது நனவாகியுள்ளது. படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. முழு குழுவிற்கும் எனது நன்றி.”
 
நடிகர் சரவணன்:
 
“இது தயாள் சாரின் மூன்றாவது தமிழ் படம் என்றாலும், அவர் கன்னடத்தில் ஏற்கனவே 18 படங்களை இயக்கியுள்ளார். அவர் மேலும் பல தமிழ் படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவரது திட்டமிடல் அனைவரும் தெளிவாகவும் அமைதியாகவும் வேலை செய்ய உதவியது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கும்.”
 
நடிகை பிரிகிடா சாகா:
 
“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தயாள் சார் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, அருமையான மனிதரும் கூட. படப்பிடிப்பில் அனைவரையும் குடும்பத்தினராக கவனித்தார். எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. முதல் காட்சியிலேயே என் பாட்டியின் ஆன்மாவுடன் இணைந்த உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை முழுப் படத்திலும் தக்கவைத்தேன். இந்த அனுபவம் எனக்கு என்றும் நினைவாக இருக்கும்.”
 
நடிகர் அருவி மதன்:
 
“சிறிய பட்ஜெட் படங்களுக்கு வலுவான உள்ளடக்கம் இருந்தால் அவை நிச்சயம் வெற்றி பெறும். என் ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இதை அனுபவித்தேன். தயாள் சார் அதே பாதையில் பயணிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சம்பளம் வழங்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும்.”
 
நடிகை லிஸ்ஸி ஆண்டனி:
 
“இந்தப் படத்தில் நான் சூடாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக நடிகர்களுக்கு, தாங்கள் செலுத்திய உழைப்பிற்கு இறுதி வெளியீடு நியாயம் செய்யுமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் தயாள் சார் இயக்கும் படங்களில் அத்தகைய கவலை தேவையில்லை. அவரது தெளிவான கலைநோக்கும் திட்டமிடலும் நடிகர்களின் நடிப்பை உயர்த்திக் காட்டும்.”
 
நடிகரும் இயக்குநருமான சுப்பிரமணியம் சிவா:
 
“தயாள் மிகுந்த தெளிவுடைய மனிதர். அவர் வீடு கட்டினாலும், திருடர்கள் எளிதில் உள்ளே வருவதற்கே ஒரு தனி வழியை திட்டமிட்டு வைத்திருப்பார் என்று நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு அவரது திட்டமிடல் அசாதாரணமானது. தனுஷிடம் நான் கண்ட தெளிவை இப்போது தயாளிடமும் பார்க்கிறேன். வணிக மற்றும் மாற்று சினிமாவுக்கிடையேயான இடைவெளியை இந்தப் படம் அழகாக இணைக்கிறது.”
 
நடிகர் ஆரவ்:
 
“ஒரு கொலைக்காக குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. தயாள் பத்மநாபன் மிகத் திறமையான இயக்குநர். குறுகிய காலத்தில் திட்டமிட்டு தரமான படைப்புகளை உருவாக்கும் அவரது திறனை நான் எப்போதும் பாராட்டியுள்ளேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்தப் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.”
 
இயக்குநர் தயாள் பத்மநாபன்:
 
“எங்கள் தயாரிப்பாளர் ஷபரீஷ் தற்போது மொரீஷியஸில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். ரங்கராஜ் பாண்டேவும் அவருடன் இருக்கிறார். அதனால் இருவரும் இன்று வர முடியவில்லை.
 
இது என் 22வது திரைப்படமும், மூன்றாவது தமிழ் படமும் ஆகும். இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம். அவை வெளியீட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்படும்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், 1972-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாகக் கொண்டு, அவன் கடந்தகாலத்தை மீள்பார்க்கும் கதையாக இது அமைந்துள்ளது.
 
கன்னடத் துறையில் பணியாற்றியதால் என் தமிழ் பேசும் திறன் சற்று குறைந்துவிட்டது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை சிறப்பாக வடிவமைத்த கவிதா பாரதி சாருக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.
என் நடிகர்கள் அனைவரும் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் நான் கொடுத்த அழுத்தத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டனர்.
 
பிரிகிடாவுக்கு இப்படத்தில் அழகான கதாபாத்திரம் உள்ளது. வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே இருவருக்கும் கதையில் சமமான முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக சரவணன் சார், இந்தப் படத்தின் மீது கொண்ட அன்பினால் தனது சம்பளத்தைக் குறைத்ததோடு, கிளைமாக்ஸ் காட்சிக்காக கூடுதலாக ஒரு நாள் படப்பிடிப்பையும் வழங்கினார்.
 
படப்பிடிப்பு முடிந்த நாளில், திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே வேலை முடிந்ததால், ரங்கராஜ் பாண்டே தனது சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தார். இந்த முழு பயணத்திலும் குழுவின் ஆதரவு அளவிட முடியாதது. அவர்களுடன் பணியாற்றியதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.”
 
இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் ஊடகங்களுடன் கலந்துரையாடி, திரைப்படம், கதாபாத்திரங்கள் மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரத்யேக காட்சிசார் சுருக்கமும் கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

 ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
 
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில்,  படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,
 
“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.
 
இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.
 
சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.
 
இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.
 
ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.
 
மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
 
நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,
 
“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
 
ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.
 
இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.
 
ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக  உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.
 
மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.
 
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.
 
நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.
 
இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”
 
இயக்குநர் புச்சி பாபு  பேசியதாவது..,
 
எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.
 
எனக்கு பிடித்த  மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.
 
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.
 
பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.
 
கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
 
இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
 
திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.
 
ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.
 
மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.
 
இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”
 
 நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,
 
முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.
 
ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.
 
ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர்  பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
 
ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.
 
தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.
 
ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
 
இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.
 
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,
 
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.
 
ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.
 
இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.
 
ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.
 
தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.
 
இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”
 
நடிகர்  ராம் சரண் பேசியதாவது..,
 
“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.
 
முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
 
சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.
 
பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.
 
நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
 
இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.
 
சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.
 
ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.
 
ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.
 
என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
 
இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
 
என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.
 
என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.
 
இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”
 
ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
 
ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
 
இப்படம் வரும்  ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

நிதியாண்டு! எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட்

சென்னை:

LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் (முன்பு ‘எல்ஜிடி பிசினஸ் கனெக்‌ஷன்ஸ் லிமிடெட்’), மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான (FY26) நிதி முடிவுகளை அறிவித்துள்ளது. பயணங்களுக்கான தேவை அதிகரிப்பு, சிறப்பான வணிக ஒருங்கிணைப்பு மற்றும் கார்ப்பரேட், சுற்றுலாப் பிரிவுகளில் கிடைத்த வரவேற்பால் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களைச் சென்றடைதல், சேவைத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம், ‘ஒருங்கிணைந்த பயண மற்றும் ஹாஸ்பிடாலிட்டி சேவை நிறுவனம்’ என்ற தனது நிலையை இந்நிறுவனம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. MICE சேவைகள், டெஸ்டினேஷன் திருமணங்கள், கண்காட்சிகள் மற்றும் அனுபவப்பூர்வ சுற்றுலாக்களுக்கான தேவை அதிகரிப்பு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

நீண்டகால வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் முக்கிய பிராந்திய சந்தைகளில் LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. நாகர்கோவில், கோயம்புத்தூர், புனே மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகர விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அடுத்தகட்டமாக அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில், உலகளாவிய வாடிக்கையாளர் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் துபாய் மற்றும் மலேசியாவை மையமாகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆன்மீக மற்றும் சமயச் சுற்றுலாவை அதிக வளர்ச்சியடையும் பிரிவாகக் கருதி, அதில் பிரத்யேக கவனம் செலுத்துகிறது.

செயல்பாட்டு திறனில் மேம்பாடுகள்

கீழ்க்கண்ட முக்கிய வணிகப் பிரிவுகளில் நிறுவனம் தனது சேவைத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது:

  • கார்ப்பரேட் பயண மேலாண்மை
  • MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்)
  • ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள்
  • சொகுசுக் கப்பல் மற்றும் ஓய்வு நேரச் சுற்றுலா
  • டிக்கெட் முன்பதிவு மற்றும் விசா செயலாக்கச் சேவைகள்
  • பிரத்யேக உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணப் பேக்கேஜ்கள்
  • ஆன்மீக மற்றும் சமய சுற்றுலாச் சேவைகள்
  • கண்காட்சிகள்
  • வர்த்தக கண்காட்சிகள்
  • டெஸ்டினேஷன் திருமணங்கள்

LGT குளோபல் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. வில்ஃபிரட் செல்வராஜ் கூறுகையில்: “பயணத் தேவை அதிகரிப்பு மற்றும் புதிய பயண அனுபவங்கள் மீதான ஆர்வத்தால் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி பிரிவுகளில் நாங்கள் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். கூட்டணிகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் ஒருங்கிணைந்த பயணக் கட்டமைப்பை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும். Yaja, Travflix மற்றும் Holiday One இணைப்பு எங்களின் செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்த முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் துபாய், மலேசியா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கி நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதில் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

‘காட்டாளன்’ விமர்சனம்

க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் பெப்பே, சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பார்த் திவாரி, ஹரிசங்கர் நாராயணன், அல்போன்ஸ் புத்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘காட்டாளன்’

விமர்சனம்:

கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள ‘ஆனக்கொள்ளி’ என்ற கிராமத்தில், காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காப்பாற்ற வரும் மாரி (ராஜ் திரன்தாசு -இளமைப் பருவத்து மாரியாக) என்பவரைச் சுற்றித் தொடங்குகிறது. ஆனால், மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் மாரி, அந்தப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கிராம மக்களை அடிமைகளாக்கி, ஒரு மாபெரும் சட்டவிரோத கடத்தல் கும்பலின் கொடூரமான தலைவனாக மாறுகிறான். யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை வெட்டி எடுத்து சர்வதேச அளவில், குறிப்பாக இலங்கைக்கு கடத்தி கோடிகளை குவிக்கும் மாபியா சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறான். அவனுக்கு கீழே 40-க்கும் மேற்பட்ட ஏழை பழங்குடி மக்கள் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். இந்த சூழலில், மாரிக்கு போட்டியாக ‘எடி’ (கபீர் துகான் சிங்) என்ற புதிய தொழில் எதிரி உருவாகிறான்.

எடி-யுடன் ஏற்படும் மோதலால் மாரியின் தந்தம் கடத்தல் தொழில் முடங்கும் நிலைக்கு வருகிறது. அதிலிருந்து தப்பிக்கவும், பறிபோன தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள தந்தங்களை மீட்டெடுக்கவும் மாரி, எடி-யின் பலத்தை அடக்கவும், தனது தந்தங்களை ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு பாதுகாப்பாக கடத்தவும் ஆண்டனி (ஆண்டனி வர்கீஸ் பெபே) என்ற துணிச்சலான இளைஞனைத் தனது வலதுகரமாக பயன்படுத்திக் கொள்கிறான்.

ஆண்டனி, மாரியின் கடத்தல் நெட்வொர்க்கை தன் கட்டுப்பாட்டில் எடுத்து மிக சாதுரியமாக பிண உடல்களுக்குள் தந்தங்களை ஒளித்து வைத்து கடத்தி மாரியின் நம்பிக்கையை பெறுகிறான். ஆரம்பத்தில் மாரிக்கு விசுவாசமாக செயல்பட்டு எதிரிகளை அழிக்கும் ஆண்டனி, கதையின் போக்கில் மாரியின் சுயரூபத்தை உணர்ந்து அவனுக்கே எதிராக திரும்புகிறான். மாரியின் கொடூரமும், அவன் காட்டின் (கிராம மக்கள்) அடிமைகளை நடத்தும் விதம் எல்லை மீறும் போது ஆண்டனிக்கும் மாரிக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.

மாரியை தீர்த்துக்கட்ட கிராமத்து மக்களும், அலி (ஜெகதீஷ்) போன்ற பெரியவர்களும் ஆண்டனியின் உதவியை நாடுகிறார்கள். கோபமடையும் மாரி, ஆண்டனியும் அவனுக்கு பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த கிராமத்தையும் அழிக்க துணிகிறான். இறுதியில், ஆண்டனி அந்தப் பெரிய கடத்தல் சாம்ராஜ்யத்தை ரத்தக் களரியாக்கி தடம் தெரியாமல் அழிக்கிறான் என்பதே மீதிக்கதை…..

ஆனைகொல்லி காடுகளின் தந்தம் கடத்தல் சிண்டிகேட்டின் பிரதான வில்லனாக வரும் சுனில், நரி குணம் கொண்ட கடத்தல் கார்டெல் தலைவனாக தந்தத்திற்காக காட்டு யானைகளை கொல்லும் சைக்கோத்தனமான வில்லனாக மிரட்டியுள்ளார். படத்தின் நாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ் பெப்பே, அதிரடி இமேஜுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அவரது உடல் மொழி, காடுகளுக்குள் பாய்ந்து பாய்ந்து சண்டை செய்யும் காட்சிகள், ஸ்டண்ட் பிளாக்குகளில் அசாத்திய வேகம் கொடுத்து மிரட்டியுள்ளது. ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ், ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் உட்பட அனைவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.

பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ‘மெண்டிஸ்’ என்ற ரகசியமான, புதிரான பாத்திரத்தில் எதிர்பாராத கேமியோ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

மைனஸ்: ஒரே சண்டை ரத்தம்…. பல காட்சிகள் லாஜிக்கே இல்லை…

மொத்தத்தில் இந்த ‘காட்டாளன்’ அலறல், குமுறல்.

புற்றுநோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை!

சென்னை:

ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் திகழும் சென்னை அப்போலோ மருத்துவமனை, ஹியூகோ ரோபோடிக்-அசிஸ்டெட் சர்ஜரி (ஆர்ஏஎஸ்) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக உலகின் முதல் வீடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி (விஇஐஎல்) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இது தொடையின் நடுப்பகுதிக்கு பதிலாக பக்கவாட்டுப் பகுதி வழியாக இடுப்பு இடுக்கில் உள்ள நிணநீர்முடிச்சுகளை அணுகும் ஒரு மிகக் குறைந்த ஊடுருவல் தொழில்நுட்பமாகும். ஆண்குறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 40 வயதுள்ள நோயாளிக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் எந்தவொரு பெரிய பக்கவிளைவுகளும் இன்றி அவர் மிக விரைவாகவும், முழுமையாகவும் குணமடைந்துள்ளார்.

ஆண்குறி, பெண்குறி வெளிப்பகுதி, யோனி போன்ற புற்றுநோய்கள் இடுப்பு இடுக்குகளில் உள்ள நிணநீர்முடிச்சுகளுக்குப் பரவும் போது, இந்த இங்வினல் நிணநீர்முடிச்சு அகற்றும் முறை ஒரு வழக்கமான நடைமுறையாக மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரியமாக, இந்த அறுவை சிகிச்சையானது இடுப்புப் பகுதியில் பெரிய கீறல்களை ஏற்படுத்தி திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலமாகவே செய்யப்படுகிறது. இது சில நேரங்களில் சருமம் மற்றும் நிணநீர் நாளங்களை சேதப்படுத்தி, காயம் ஆறுவதில் சிக்கல்களையும், அறுவை சிகிச்சைக்குப் பின் நிணநீர் கசிவையும் ஏற்படுத்தக்கூடும்.

இருப்பினும், ரோபோடிக் தளங்களில் மிகக் குறைந்த ஊடுருவல் மற்றும் கேமரா வழிகாட்டுதலுடன் கூடிய விஇஐஎல் (VEIL) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் போது முடிவுகள் பெரும்பாலும் சிறப்பாக அமைகின்றன. ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மிகவும் துல்லியமான ரோபோடிக் கருவிகள் மற்றும் மேம்பட்ட விஷுவல் கண்ட்ரோல் உதவியுடன் மிகச் சிறிய கீறல்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இதனால் சருமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன. மேலும், இந்த அணுகுமுறை வழக்கமான திறந்தநிலை அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிணநீர் கசிவை கணிசமாகக் குறைக்கிறது.

புரோஸ்டேட், சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான பல்வேறு வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு அப்போலோ மருத்துவமனை ‘ஹியூகோ ஆர்ஏஎஸ்’ அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. தற்போது நிணநீர்முடிச்சை அகற்றுவதற்கான இந்த விஇஐஎல் செயல்முறையையும் இணைத்ததன் மூலம், இந்த மருத்துவமனை இந்த அமைப்பைப் பயன்படுத்தி அனைத்து வகையான ரோபோடிக் சிறுநீரகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளது.

இந்த வரலாற்று மைல்கல் குறித்து சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனையின் சிஇஓ டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், “மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அப்போலோவின் உறுதிப்பாடு ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை எட்டி வருகிறது. மருத்துவ மேன்மைக்கும், உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பின் மூலம் நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு முற்போக்கான மருத்துவ நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மேலும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”

சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் என். ராகவன் அவர்கள் கூறியதாவது: “இந்த சாதனை பல மாத கால நுணுக்கமான திட்டமிடல், மருத்துவத் துல்லியம், ஒருங்கிணைந்த குழுப்பணி ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றியாகும். ஹியூகோ ஆர்ஏஎஸ் தளத்தைப் பயன்படுத்தி பக்கவாட்டு அணுகுமுறை மூலம் உலகின் முதல் ரோபோடிக் விஇஐஎல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது சவாலாகவும் அதே நேரத்தில் திருப்திகரமாகவும் இருந்தது. மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சையின் ஒவ்வொரு மைல்கல்லும் தொடர்ச்சியான கற்றல், அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவ மேன்மையின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் உறுதியாக இருக்கும் திறமையான குழுக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகிறது. இந்த வெற்றி நோயாளிகளின் குணமடையும் விகிதத்தை மேம்படுத்த உதவுவதுடன், மிகக் குறைந்த ஊடுருவல் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறுநீரகவியல், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், ஆலோசகர் டாக்டர் மாதவ் திவாரி அவர்கள் மேலும் கூறியதாவது: “நோயாளி குணமடைந்த விதம், இந்த அணுகுமுறையின் ஆற்றலையும் அதன் செயல்திறனையும் காட்டுகிறது. இடுப்பு இடுக்கு நிணநீர்முடிச்சு அகற்றம் தேவைப்படும் ஆண்குறி புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், அவற்றிற்கு பெரும்பாலும் மிகவும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை தலையீடுகள் தேவைப்படுகின்றன. விஇஐஎல் போன்ற மேம்பட்ட ரோபோடிக் உதவி நடைமுறைகள் பக்கவிளைவுகளைக் குறைப்பதன் மூலமும், அறுவை சிகிச்சை காயங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், விரைவாக குணமடைய வழிவகுத்து நோயாளிகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சிறந்த சிகிச்சை விளைவுகளைப் பெறுவதற்கு விழிப்புணர்வை அதிகரிப்பதும், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதும் தொடர்ந்து அவசியமாக உள்ளது.”

டாக்டர் என். ராகவன், டாக்டர் மாதவ் திவாரி ஆகியோரின் தலைமையிலான பல்துறை நிபுணர் குழுவினரால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு டாக்டர் பிரதீப் சிருவர் தலைமையிலான குழுவினர் மயக்க மருந்து ஆதரவை வழங்கினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மிகச் சிறந்த முறையில் குணமடைந்துள்ளார். இந்த வெற்றிகரமான சிகிச்சை, துல்லியம் சார்ந்த மற்றும் தொழில்நுட்ப உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை நோக்கிய மற்றொரு முக்கிய படியாகும்.