Sunday, November 9, 2025
Blog

நாயகன் விமர்சனம்: அனுபவம்!

நாயகன் படத்தின் முழு கதை அனைவருக்கும் தெரியும் ஆனால் அதில் உள்ள சுவாரஸ்யத்தை வாங்க பார்ப்போம்!

1972 வெளிவந்த The Godfather என்ற அமெரிக்க கேங்ஸ்டர் படத்தின் கதையை சிவாஜியை வைத்து எடுக்க விரும்பிய முக்தா சீனிவாசன், சிவாஜியிடம் சொல்ல சிவாஜியும் ஓகே சொன்னார். அந்தப் படத்தில் கமல்ஹாசனும் அமலாவும் நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் கமலின் வெல்விஷர் அனந்து, அதில் சிவாஜிக்குதான் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லி கமல்ஹாசனை நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டார்.

மணிரத்னம் தனது முதல் படமும் கன்னடப் படமுமான ‘பல்லவி அனு பல்லவி’யில் கமலை நடிக்க வைக்க முயன்றும் முடியவில்லை. ஒரு நிலையில் முக்தா சீனிவாசனிடம் கமல் மணிரத்னம் பற்றி சொல்ல, முக்தா சீனிவாசனிடம் மணிரத்னம் இரண்டு கதைகள் சொன்னார். Dirty Harry என்ற அமெரிக்க ஆக்ஷன் திரில்லர் படமும் Beverly Hills Cop என்ற அமெரிக்க ஆக்ஷன் காமெடி படம் இரண்டும் இணைந்தது போல ஒரு கதை.

இன்னொன்று மும்பையைக் கட்டி ஆண்ட வரதராஜ முதலியார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துச் சொன்ன கதை. முன்பே ஆர் சி பிரகாஷ் என்ற புரடியூசருக்கு மணிரத்னம் சொல்லி நிராகரிக்கப்பட்ட கதைதான் வரதராஜ முதலியார் கதை . ஆனால் முக்தாவுக்கும் அது பிடிக்க, நாயகன் கருவானது . மணிரத்னமும் பிசி ஸ்ரீராமும் சென்னையின் சாலைகளில் சைக்கிள் ரிக்ஷாவில் பயணித்துக் கொண்டே இந்தப் படத்தின் காட்சிகளைப் பேசி இருக்கிறார்கள். கமல்ஹாசன் சம்பளம் 17 லட்சத்து 50000. வயதான வேலு நாயக்கருக்கு சலங்கை ஒலி மாதிரி ஒரு கெட்டப் போடலாம் என்று கமல்ஹாசன் சொல்ல, வேண்டாம் என்று மணிரத்னம் உருவாக்கியதுதான் படத்தில் வரும் கெட்டப்கள்.

சரண்யாவின் அப்பாவுக்கு, மகள் படத்தில் நடிப்பது பிடிக்கவே இல்லை. சரண்யாவும் அவர் அம்மாவும் சம்மதிக்க வைத்தார்கள். வேலுநாயக்கர் மகளாக நடிக்க முதலில் பேசப்பட்டது கமலின் அண்ணன் சாருஹாசனின் மகளான சுஹாசினியே. ஆனால் மணிரத்னம் அதை விரும்பவில்லை. எனவே கார்த்திகா வந்தார் . அப்போது மணிரத்னத்துக்கும் சுஹாசினிக்கும் கல்யாணம் ஆகவில்லை. ஆகி இருந்தால் கார்த்திகா நடித்து இருக்க முடியாது. நாசர் கேரக்டருக்கு முதலில் கேட்கப்பட்டவர் ரகுவரன். ஆனால் அவர் போலீஸ் கட்டிங் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் நாசருக்கு அது அமைந்தது. அப்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்த தாரா இந்தப் படத்தில் தங்கையாக நடிக்க உடனே ஒத்துக் கொண்டார்.

வேலு நாயக்கரை சுட்டுக் கொல்லும் கதாபாத்திரத்துக்கு டினு ஆனந்த்தைக் கேட்க, அவர் ”நான் டைரக்டர் ஆகவே ஆசைப்படுகிறேன்” என்று மறுக்க, மணிரத்னம் வற்புறுத்தி ஒத்துக் கொள்ள வைத்தார். ஒரு காட்சியில் கமல் ஒரு முகபாவனையைக் கொடுக்க, உடனே மணிரத்னம், ” நீங்க கொடுத்தது வெஸ்டர்ன் சினிமா முகபாவனை. எனக்கு அது வேண்டாம். நம்மூர் மனிதர்களின் முகபாவனை வேண்டும்” என்று கூற, அந்த ஒரு வாசகம் பின்னர் கமல்ஹாசன் கூடவே வந்தது.

அறுபது நாட்கள்… எழுபது பிலிம் ரோல்கள்… அறுபது லட்ச ரூபாய்க்கு படத்தை முடிப்பதுதான் பிளான். ஆனால் ஒரு கோடி வரை போனது . படம் பதினைந்து நாள் மும்பை தாராவியிலும் , பின்னர் ஆழ்வார்பேட்டை வீனஸ் ஸ்டுடியோவில் செட் போட்டும் எடுக்கப்பட்டன.

ஆக்ஷன் காட்சிகளுக்கான பட்ஜெட் பனிரெண்டு லட்சம். ஷோலே இந்திப் படத்தின் சண்டை இயக்குனர் வரவழைக்கப்பட , அவர் கேட்ட சம்பளம் காரணமாக மூன்றே நாட்களில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். படத்தின் சில காட்சிகளில் கமலின் சொந்தத் துப்பாக்கி நடித்திருக்கிறது. விபச்சார விடுதியில் படிக்க ஆசைப்படுவதாக சொல்லும் ஹீரோயின் காட்சி முக்தா சீனிவாசன் சொன்னது .

சிறுவயது வேலுவின் காட்சிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் ஒன்றரை நாட்களில் எடுக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலையில் இருக்கும் தாஜ் கிளப், முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் பில்டிங் என்று இருந்தது. அங்கேதான் ”நான் சிரித்தால் தீபாவளி…” பாடல் எடுக்கப்பட்டது.

படத்தின் நீளம் மூன்று மணி நேரத்துக்கு மேல். அப்படியே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கமலும் மணிரத்னமும் சொல்ல, மறுத்த முக்தா சீனிவாசன் எடிட்டர் லெனினிடம் படத்தைக் குறைக்கச் சொன்னார் .
“அப்படி குறைத்ததும் இளையராஜாவின் தென்பாண்டிச் சீமையிலே பாட்டும் அந்த மெட்டில் வரும் தீம் மியூசிக்கும் தான் படத்தின் வெற்றிக்குக் காரணம் “என்றார் முக்தா சீனிவாசன்.

வேலு நாயக்கர் ரெட்டி சகோதரர்களைக் கொல்வது, மகனின் மரணம், அவன் உடல் பார்த்து நாயக்கர் கதறுவது, போலீஸ் எஸ்பி வந்து தன் மகளைக் கற்பழித்த அமைச்சர் மகனைக் கொல்லச் சொல்வது எல்லாம் The Godfather படத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே.

கடலுக்குள் போதைப் பொருளை உப்பு மூட்டையில் கட்டி தண்ணீரில் போட்டு பிறகு உப்பு கரைந்து மேலே வரும் உத்தி Once Upon a Time in America என்ற படத்தினுடையது. இளையராஜாவின் நானூறாவது படம் நாயகன். நிலா அது வானத்து மேலே பாடல் இளையராஜா எழுதியது.காவியமான ”தென் பாண்டிச் சீமையிலே…” பாடல் முதல் கொண்டு மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் .

வாழும் மனிதரைப் பற்றிய படம் என்பதால் திரையிடக் கூடாது என்கிறது தணிக்கைத் துறை. மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு முக்தா சீனிவாசன் போக, அவர்கள் வரதராஜ முதலியாரிடம் இருந்து சம்மதக் கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள் .

உடனே கொடுத்தார் வரதராஜ முதலியார். தமிழகத்தில் இருநூறு நாட்கள் ஓடிய நாயகன் தமிழிலேயே ஆந்திரா கர்நாடகாவில் நூறு நாள் ஓடியது . பின்னர் நாயகுடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட அதுவும் நூறு நாள்.

டைம்ஸ் அமெரிக்க இதழின் ‘எக்காலத்திலும் சிறந்த நூறு படங்கள் ‘பட்டியலில் The Godfather படமும் இருக்கிறது. நாயகன் படமும் இருக்கிறது. The Godfather பாணியில் ஓர் அற்புதமான கேங்க்ஸ்டர் காவியம் நாயகன் ” என்று பாராட்டியது அந்தப் பத்திரிக்கை.

இங்கிலாந்து பத்திரிக்கையாளர் Phil Hardy தனது பிரிட்டிஷ் ஃபிலிம் கம்பானியன் என்ற நூலில், ” The Godfather படத்தை அடுத்து வந்த படங்களில் நாயகன்தான் சுவாரஸ்யமானது” என்கிறார். படம் வந்த போது இருந்த அதே 35 MM படமாகவே நாயகனைப் பொலிவு கூட்டி வெளியிட்டிருந்தால்தான் படத்தின் அழகான ஃபிரேம்களை ரசிக்க முடியும்.. உணர முடியும். இன்றைய ஆடியன்சுக்கு அந்த திரை அனுபவம் பிரம்மிப்பானதாக இருந்திருக்கும்.

ஆனால் சினிமாஸ்கோப் ஆக்கியதால் படத்தின் அற்புதமான காட்சித் தோற்றங்களில் தலையோ காலோ வெட்டப்பட்டது போல இருப்பது வேதனை. முக்கியமாக மகன் மரணத்தில் நாயக்கர் அழும் காட்சி, மகளோடு வீட்டில் சண்டை போடும் காட்சி ஆகியவை அந்தப் பின்புலத்தின் வலுவை இழந்து நிற்கிறது .

பாடகர்கள் வரிசையில் கமல்ஹாசன் பெயரைக் கமலகாசன் என்று போட்டு இருக்கிறார்கள் . தென் பாண்டிச் சீமையிலே பாட்டுக்கான ஆலாபனையை இளையராஜாவின் காந்தக் குரல் துவங்கும்போது உடம்பு சிலிர்க்கிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை இன்றும் நாளையும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல , இசையமைப்பாளர்களுக்கும் ஒரு மாஸ்டர் கிளாஸ் . தான் ஒரு மேஸ்ட்ரோ என்று ராஜா அப்போதே நிரூபித்து இருக்கிறார். புரிந்து கொள்ள நமக்குத்தான் பல வருடங்கள் ஆனது .

”நாங்கள்தான் திரைப்பட விமர்சனத்தின் மாஸ்டர் ” என்று கூறிக் கொண்டிருந்த ஒரு பிரபல வார இதழ், தனது விமர்சனத்தில் கமல், மணிரத்தனம் ஸ்ரீராமை மட்டும் பாராட்டிவிட்டு, ‘இளையராஜாவின் நானூறாவது படமாம் . டைட்டிலில் மட்டும்தான் தெரிகிறது’ என்று அபத்தமாக வன்மமாக விமர்சனம் எழுதியதை நினைத்து இப்போதும் கோபம் வருகிறது

கமல்ஹாசனின் நடிப்பை இன்னும் வியந்து பார்க்க முடிகிறது. சிறு சிறு முகபாவனைகள் கூட இப்போதும் பிரம்மிக்க வைக்கிறது  பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு இன்னும் படித்து முடிக்கப்படாத கவிதை போலவே இருக்கிறது. ஃபிலிமில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஆழமான பின்புல வித்தியாசத்தில் தெளிவாக எடுக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன . ஃபிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு காட்சியின் அழகியல் எப்படி நாசமாகப் போயிருக்கிறது என்று தெரிகிறது.

மணிரத்னம் மேக்கிங் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது . பாலகுமாரனின் வசனங்கள் ஒரு சில காட்சிகள் தவிர (பச்சைப் புள்ளையை அடிக்கிறாங்களாம் அடிக்கிறாங்க .. இப்படி ஒரு சில காட்சிகள் தவிர) படத்துக்கு புது பரிமாணம் தருகின்றன .

எல்லாரும் தியேட்டரில் போய் நாயகன் படம் பாருங்கள் புதிய படம் போல பார்க்க வைக்கிறது.

 

வட்டக்கானல் விமர்சனம் RATING 2.7/5

MPR Films மற்றும் Skyline Cinemas சார்பில் மதியழகன், வீரம்மாள் தயாரிக்க, துருவன் மனோ , மீனாட்சி கோவிந்தராஜன், ஆர்.கே சுரேஷ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘வட்டக்கானல்’

விமர்சனம்:

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும் இந்தத் தொழிலைக் கைக்குள் வைத்திருக்கும் தாதா ஒருவன் (ஆர் கே சுரேஷ்) அவனது ‘மகன்’களில் ஒருவன் (துருவன் மனோ) முக்கியமானவன். போதைக் காளான் சிறப்பாக விளையும் நிலம் ஒன்று ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசான வாய் பேச முடியாத ஒரு பெண்ணிடம் (மீனாட்சி கோவிந்தராஜன்) இருக்கிறது . சிறுவயதில் அப்பாவோடு வாழ்ந்த காலத்தில், இவளுக்கு ஐந்து வயது இருக்கும்போது விபத்து ஒன்று நடக்கிறது. அப்போது, அந்தக் காரிலேயே அப்பா (மனோ) இறந்து விட , இப்போது அந்தக் கார் தாதா மகனிடம் இருக்க, அந்தக் காரை அவள் விலைக்குக் கேட்கிறாள் . தர மறுக்கிறான் தாதாவின் மகன். அதற்குப் பதிலாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறாள் . அந்தப் பெண்ணின் நல்ல எண்ணத்தை அவளது எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களே தப்பாகப் புரிந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு தீங்கிழைக்க, அதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதே மீதி கதை…

கொடைக்கானல் வட்டக்கானல். உலகின் தரமான போதைக் காளான் என்று படம் ஆரம்பித்தபோது , அதன் பின்னால் உள்ள நெட் ஒர்க், மாபியா, அரசியல், பணக்காரர்கள், அதனால் பாதிக்கப்படும் சமுதாயம் என்று ஒரு வித்தியாசமான பரபரப்பான படம் பார்க்கப் போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் வழக்கமான காதல், அப்பாவிப் பெண், அனாதைகள் செண்டிமெண்ட் என்று நிமிர்ந்த நமது தலையை அவர்களே அழுத்திக் குனிய வைக்கிறார்கள் . தாதா கதிரவனாக ஆக்ரோஷ வில்லனாக ஆர்.கே.சுரேஷ் அழுத்தமான வசன உச்சரிப்பு, மிடுக்கும் கம்பீரம் நிறைந்த தோற்றத்தில், அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், சூழ்ச்சிகள் நிறைந்த சதிகாரராக தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மிரள வைத்துள்ளார்.

மைனஸ்: கதை புதிதாக இல்லை… இசையில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘வட்டக்கானல்’ போதையின் அழிவு.

 

கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் RATING 2.9/5

ஸ்ரீலக்ஷ்மி ட்ரீம் ஃபேக்டரி சார்பில் பிரபாகர் ஸ்தபதி தயாரிக்க, கவுசிக் , பிரதிபா , அருள் சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’

விமர்சனம்:

கதிர்வேலன் என்ற இளைஞன் (கௌஷிக்) கிறிஸ்டினா (பிரதிபா) என்ற பெண்ணை ஒரு கோவில் திருவிழாவில் பார்த்து, அவள் மேல் காதல் கொள்கிறான் . அவளும் அவனை கவனிக்கிறாள். வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் கதிர்வேலன், கிறிஸ்டினா ஒரு கல்லூரியில் படிப்பதை அறிந்து, வெளிநாடு போகும் எண்ணத்தைக் கைவிட்டு, அவளது கல்லூரியில் சேர்ந்து அவளது வகுப்புக்கே போகிறான். அவளும் அவனிடம் பேசுகிறாள். அவன் காதலிப்பதும் அவளுக்குத் தெரிகிறது. அவள் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.

இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவனும் மாணவியும் காதலிக்க, சாதி வேறுபாடு காரணமாக அவர்களது பெற்றோர்கள் கல்யாணத்துக்கு மறுக்க, அவர்கள் குடும்பங்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். சாட்சிக் கையெழுத்துப் போடுவதற்காக கதிர்வேலனும் கிறிஸ்டினாவும் தங்களது ஆதார் கார்டு , மற்றும் ரேஷன் கார்டைத் தருகிறார்கள். இந்த நிலையில் கிறிஸ்டினாவுக்கு குடும்பத்தார் பார்த்தபடி ஒரு கிறிஸ்தவ மணமகனோடு சர்ச்சில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்நிலையில் கதிர்வேலனுக்கும் கிறிஸ்டினாவுக்கும் பதிவுத் திருமணம் நடந்ததாக சான்றிதழ் உறவினர் ஒருவருக்கு கிடைக்கிறது. பிறகு பூகம்பம் வெடித்ததா? மரணம் நிகழ்ந்ததா? என்பதே கதை….

கதையின் ஆரம்பத்தில் இது ஒரு சராசரி காதல் படமாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன். இரண்டாம் பாதியில் படம் சுவாரஸ்யமாகவும், கிளைமேக்ஸில் செண்டிமென்டாகவும் படத்தை நிறைவு செய்துள்ளார். காதலை வெளிப்படுத்த தெரியாத 90களில் பிறந்தவர்களின் நிலைமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.

திருவிழாவில் தனது உயிரை காப்பாற்றிய கதாநாயகியை ஒரு தலை பட்சமாக காதலிக்கும் இளைஞரின் கதை.தனது காதலை எந்த விதத்திலும் சொல்ல முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகன் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தின் நாயகி கண்களாலேயே காதல் மொழி பேசுகிறார். நாம் இதுவரை பார்த்த படங்கள் சொல்லாமல் இருக்கும் காதல்.காதல் கடிதம் கொடுத்து வரும் காதல் பார்த்திருக்கிறோம்.இந்தத் திரைப்படம் கண்களாலேயே காதல் பேசும் புதுமையை செயல்படுத்தி உள்ளார் இயக்குனர்.

மைனஸ்: கதை தெளிவாக இல்லை…. இசையில் கூடுதல் கவனம் தேவை…

மொத்தத்தில் இந்த ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ அசைவு காதல்.

 

‘பரிசு’ விமர்சனம் RATING 2.9/5

ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் போன்ற புது முகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் அறிமுகமான நடிகர்களான ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் ‘பரிசு’ திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.

ஒளிப்பதிவு -சங்கர் செல்வராஜ், இசை – ராஜீஷ்,பின்னணி இசை – சி.வி. ஹமரா ,பாடல்கள் -கே ராஜேந்திர சோழன் ,படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி, நடனம் – சுரேஷ்சித், சண்டைக் காட்சிகள் கோட்டி – இளங்கோ. தயாரிப்பு: ஸ்ரீகலா கிரியேஷன்ஸ்.

படம் எதைப் பற்றிப் பேசுகிறது?

ஜான்வி  பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி.படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவள்.அவளது தந்தை ஒரு ராணுவ வீரர்.

ஜானகியின் அழகையும் அறிவையும் பார்த்துவிட்டு அவள் படிக்கும் கல்லூரியில் சில மாணவர்கள் பின் தொடர்கிறார்கள். நெருங்கிப் பழகவும், அன்பளிப்பு கொடுக்கவும்,பூங்கொத்து  பரிசளிக்கவும் என்று சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவள் மீது ஆசையுடன் காதலைச் சொல்ல ஏங்குகிறார்கள்.

ஆனால் அவளோ எந்தவிதமான மனச்சலனமும் இல்லாமல் இருக்கிறாள். அது ஒரு பருவக் கோளாறு என்று நினைத்து எந்த விதக் கோபமும் காட்டாமல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இலகுவாக புறந்தள்ளிவிட்டுத்  தனது இலட்சியத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறாள்.

விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் அவள், தந்தையிடம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுகிறாள்.  

ஒரு நவீனப் பெண்ணாகத் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றாலும் பாரம்பரியத்தை மறக்காமல் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவளாக இருக்கிறாள். விவசாய வேலைகளில் ஈடுபடுவதும் டிராக்டர் ஓட்டுவதும் என்றும் அதையும் விடாமல் செய்கிறாள்.

அவளைத் தோழிகள் லேடி நம்மாழ்வார் என்கிறார்கள்.சமூக சேவையிலும் ஆர்வம் உண்டு.கல்லூரி மாணவர்களை  இணைத்துக் கொண்டு கிராமங்களைச் சுத்தம் செய்கிறாள்.

முறையான பயிற்சிக்குப் பின் குறி பார்த்துச் சுடும் திறமையை வளர்த்துக் கொள்கிறாள்.எகிப்தில், கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.

இவ்வளவும் செய்யும் ஜான்வி, தனது தந்தையின் ஆசையின்படி ராணுவத்தில் சேர வேண்டும் என்று கனவு காண்கிறாள்.

தனது உறவினர் சென்ட்ராயன் வீட்டு  நிகழ்ச்சிக்கு  ஜான்வி சென்றபோது அங்கே நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர் ராஜேஷின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்குள் ஒரு புரிதல் உண்டாகிறது.

ராஜேஷ் அவளைக் காதலிப்பதாகக் கூறுகிறான் .ஆனால் தனது லட்சியத்திற்குப் பிறகு தான் எல்லாமே என்று அவள் தள்ளி வைக்கிறாள்.

அப்படிப்பட்டவள் ஒரு கார் மீது  லாரி மோதி விட்டு தப்பிச்செல்லும் விபத்தைக் கண்ணெதிரே பார்க்கிறாள்.காருக்குள் இருந்தவரைக் காப்பாற்றியதுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசுக்கு உதவுகிறாள்.அதன் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் ஜான்வியைக் கடத்துகிறார்கள். அவள் அந்த எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்கிறாள்? அவள் தனது ராணுவக் கனவை நிறைவேற்றினாளா?அந்தப் பாதையில் அவள் எதிர் கொள்ளும் போராட்டங்கள் தான் 130. 12 நிமிடங்கள் கொண்ட ‘பரிசு’ படத்தின் மீதிக் கதை.

இது  ஒரு பெண் பாத்திரத்தினை மையம் கொண்ட கதையாக உருவாகி இருக்கிறது.

 மகனோ மகளோ பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரும் பரிசு என்பது அவர்களது கனவை நிறைவேற்றுவதுதான் என்று இதில் கருத்தாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படித் தனது  மகளை ராணுவத்தில் சேர்க்க விரும்பும் தந்தையின் கனவை நிறைவேற்றும் ஒரு மகளின் கதை தான் இது.அந்தப் பரிசை கொடுக்க கதாநாயகி படும் சவால்களும் சோதனைகளும் தான் இந்தப் படம்.

படத்தின் பிரதான ஜான்வி பாத்திரத்தில் ஜான்விகா நடித்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் குடும்பப் பாங்கான தோற்றத்தில் துடிப்பான கல்லூரி மாணவியாகவும் ,பிறருக்கு உதவும் இரக்க குணம் கொண்ட பெண்ணாகவும், துப்பாக்கி சுடுதலில் துடிப்புள்ளவராகவும், தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும் , விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் வருகிறார்.

பல்வேறு தோற்றங்களில் வெளிப்பட்டு அந்தப் பாத்திரத்தின் இயல்பை உணர வைக்கிறார்.

எதையும் புன்னகையுடன்  எதிர்கொள்ளும் நிதானமானகுணம் கொண்டவராக இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும்போது வேறொரு அவதாரமாகத் தோன்றுகிறார். இப்படி  ஆறு பேருடன் மோதும் காட்சிகளில் அவர் எகிறிக் குதித்து தனது சாகசத்தைக் காட்டி வியக்க வைக்கிறார். விவசாயம் செய்பவராக டிராக்டர் ஓட்டிக்கொண்டு ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்று காட்டுகிறார் .அது மட்டும் அல்ல ராணுவ வீரராக மிடுக்குடன் தோன்றுகிறார். இவர் ஆர்ப்பாட்டமான வசனங்கள் பேசாமல் மென்மையாகவே அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்.வன்மையான மனதுடன் மென்மையான முறையில் தான் சவால்களைச் சந்திக்கிறார்.

இவரது பாத்திரம் பெண்களுக்கு  நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

படிக்கிற வயதில் காதல் என்ற மாயவலைக்குள்  சிக்காமல் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் விதைக்கிறது.

ஜான் ஜான் என்று கதாநாயகியை வளைய வளைய கல்லூரியில் சுற்றி வரும் மாணவன் பாத்திரத்தில் கிரண்பிரதாப் நடித்துள்ளார். தனது உடல் மொழியாலும் நடவடிக்கைகளாலும் அவர் சிரிக்க வைக்கிறார்.

ராஜேஷ் பாத்திரத்தில் வரும் ஜெய் பாலா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் கவர்கிறார்.

மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடிக்கு மகனாக வரும் சென்ட்ராயன் இணைந்த கூட்டணி சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.ஆனால்  பெரும்பாலும் பேசும் வசனங்கள் உருவக்கேலியாகவே  உள்ளன. அந்த நகைச்சுவைக் கூட்டணியைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன், அன்பு மகளிடம் கனவுகளை வளர்த்தெடுக்கும் பாசமுள்ள தந்தையாக வருகிறார். தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார்.

மருத்துவமனை நடத்திக் கொண்டு உறுப்பு திருட்டு செய்யும் தொழிலதிபர் பாத்திரத்தில் நடித்துள்ள சுதாகரும் தனது வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. படம் தொடங்கியதும் அருவியின் அழகுடன் முதல் பாடல்காட்சி வருகிறது. அதற்குப் பிறகு இடம் பெறும் பாடல்களின் பின்புலங்களும் ரசிக்கும் படி உள்ளன.

படத்துக்குத் தெளிவான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் சங்கர் செல்வராஜ்.

‘நன்னாரே’ பாடலின் சாயலில் ஒரு பாடல் ஒலித்தாலும் பிற பாடல்களின் மெட்டுகளை ரசிக்கும்படி  இசையமைத்துள்ளார் ராஜீஷ்.

குறிப்பாக ‘ஆட்டங்கள் ஆடிப் பார்ப்போமே ‘,’கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாமா ?’ ‘போராடலாமா ?’ போன்ற பாடல்கள் இசையாலும் வரிகளாலும் கவனிக்க வைக்கின்றன.ஒரு பாடலில்

தூய்மை இந்தியா பற்றிய கருத்துகள் வருகின்றன. வரிகள் ராஜேந்திர சோழன்.

ஆர்ப்பாட்டம் இல்லாத ஹமரா வின் பின்னணி இசை,  படத்திற்குப் பக்க பலமாக அமைந்துள்ளது.

திரைக்கதையின் போக்குக்கு ஊறு செய்யாமல் படத்தொகுப்பாளர்கள் சி.எஸ்.பிரேம்குமார் , ராம் கோபி படத்தொகுப்பு செய்துள்ளனர்.

சண்டை இயக்குநர்கள் கோட்டி மற்றும் இளங்கோ இருவரும் கதாநாயகி டூப் இல்லாமல் போடும் சண்டை காட்சிகளை இயல்பாக அமைத்துள்ளனர்.

‘ஆர்மி என்பது ஒரு கலாச்சாரம்’ என்று ராணுவத்தை உயர்த்திப் பிடித்து, இந்திய ராணுவத்தின் நூற்றாண்டு கடந்த வரலாற்றையும் சில வசனங்கள் பேசுகின்றன.

பெண்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்படி பல வசனங்கள் உள்ளன.ஒரு  கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஜான்விகா பேசும் வசனம் ஒரு உதாரணம்.

அவர் பேசும்போது,

‘1943 ஜூலை 9ஆம் தேதி நேதாஜி சிங்கப்பூரில் பேசும்போது பெண்கள் துப்பாக்கி ஏந்த வேண்டும் என்றார்.ஜான்சி ராணி லட்சுமி பாய் வாளேந்தி சண்டையிட்டது போல் பெண்கள் துப்பாக்கி ஏந்தினால் இந்தியாவிற்கு விரைவில் சுதந்திரம் கிடைத்துவிடும்  ‘என்றதை  நினைவூட்டிப் பேசும் வசனம் பெண்களுக்குச் சரியான ஊக்கமும் உந்துதலும் தரும்.

வணிக ரீதியிலான படம் தான் என்றாலும் ஆபாசமோ இரு பொருள் வசனங்களோ தேவையற்ற வன்முறையோ இல்லாமல் பெண்களுக்கு நம்பிக்கையையும் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் அளிக்கும் வகையில்  இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

படம் உருவாக்கத்தில் சில குறைகள், கேள்விகள் இருந்தாலும் கலா அல்லூரியின் நல்ல கருத்து சொல்லும் நோக்கத்தைப் பாராட்டலாம்.

குடும்பத்துடன் குறிப்பாகப் பெண்கள் முகம் சுழிக்காமல் பார்க்கும் படமாகவும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கிற வகையில் இந்தப் படத்தை வரவேற்கலாம்.

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!

யக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் ‘ஆட்டோகிராப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். ‘ஆட்டோகிராப்’ படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன்,  பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரபாலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் பேசுகையில், ”நான் முப்பது வருடங்களாக இசைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு இசை அமைத்த அனுபவம்  மறக்க முடியாதது. பாடல் வரிகளுக்கும், உணர்வுகளுக்கும் இசையில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அமைந்தன. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் சேரன். என்னுடைய இசையில் வெளியான பாடல்களின் ஹிட் லிஸ்டில் ‘ஆட்டோகிராப்’ பட பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இதற்காக இந்த தருணத்தில் சேரனுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டோகிராப்’ படம் ரீ ரிலீஸ் என்றவுடன், அதில் ‘ஞாபகம் வருதே…’ என்ற என்னுடைய குரலை கேட்டவுடன் எனக்கு பழைய நினைவுகள் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன. ‘ஞாபகம் வருதே…’ பாடலை சேரன் தான் எழுதினார். முதன்முதலாக நடைபெற்ற நிகழ்வுகளை பட்டியலிட்டு, அவற்றை அழகாக கோர்த்து, பாடலாக்கினார். படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ”நான் சேரன் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்த போது அவர் ஒரு முறை ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தை பார்த்தார். இதேபோல் ஒரு கதையை எழுத வேண்டும் என்று எங்களிடம் சொன்னார்.‌ அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எங்களிடத்தில் ‘ஆட்டோகிராப்’ படத்தின் கதையை சொன்னார். அவருடன் அலுவலகத்தில் ஒன்றாக தங்கி இருந்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அவருடைய கோபம், பாசம், வருத்தம், துக்கம் என எல்லாவற்றையும் ஜெகனுடனும், என்னுடனும் பகிர்ந்து கொள்வார்.

இந்தப் படத்தில் அனைவரும் புதிதாக இருக்கிறார்கள் . படத்திற்கு கமர்ஷியல் முகம் வேண்டும் என்பதற்காக நடிகை சினேகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தக் கதை ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போல் நடிகர் விஜய்க்கு சென்றது. அதன் பிறகு நடிகர் பிரபு தேவாவிடம் சென்றது. அதன் பிறகு அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆட்டோகிராப் படத்தில் சேரன் நடிக்க வேண்டும் என ஒருபோதும் அவர் விருப்பப்படவில்லை. ஆட்டோகிராப் என்னும் கதை தான் அவரை நடிகராக உள்ளிழுத்துக் கொண்டது. அவர் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் நானும், சிம்பு தேவனும் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். படம் வெற்றி பெற்ற பிறகு சேரன் மற்றும் இதர உதவியாளர்கள் என்னை அர்த்தத்துடன் பார்த்தனர். எங்கள் இயக்குநர் எத்தனையோ அசிங்கங்கள், அவமானங்கள் பட்டாலும் அந்தப் படத்தை நேர்மையாக கடினமாக உழைத்து உருவாக்கினர். இயக்குநரான பிறகு தான் அதனுடைய கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரிந்தது. அவரிடமிருந்து நிறைய  விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அனைத்து படங்களிலும் அவருடைய பாதிப்பு இருக்கும். அவருடைய பாதிப்பில்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது.‌ இந்தப் படத்தை இந்தக்கால இளைய தலைமுறையினரும் கொண்டாடுவார்கள்,” என்றார்.

நடிகர் ஆரி பேசுகையில், ”இங்கு பேசிய அனைவரும் சேரனுக்கும், அவர்களுக்குமான நட்பையும் , உறவையும், அன்பையும் பேசினார்கள். அவருடைய உறவினர் ஒருவர் கொடுத்த கடிதம் தான் எனக்கும், அவருக்குமான அறிமுகம். அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். படத்தின் பணிகள் தொடங்கும் போது அழைப்பு விடுக்கிறேன் என்றார். அவர் ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்குகிறார் என்று தெரிந்தவுடன் அவரை மீண்டும் தொடர்பு கொண்டேன்.

அப்போது நான் ஜிம் டிரைனர். அதனால் சிக்ஸ் பேக் உடல் தோற்றத்தையும் ட்ரெயினராக மாறிய போது உடல் எடை கூடிய தோற்றத்தையும் அவர் பார்த்தார். அப்போது அவர் நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், என கேட்டார். நான் ஜிம் டிரைனர் என்று சொன்னேன். அதன் பிறகு நான் ஒரு படத்தில் நடிக்கிறேன். நீ புகைப்படத்தில் காட்டியது போல் என்னாலும் மாற முடியுமா, எனக் கேட்டார். மாற முடியும் என்று சொன்னேன்.

நான் கேள்விப்பட்டவரை அந்த காலகட்டத்தில் ஒரு கேரக்டருக்காக உடலை வருத்திக் கொள்வது கமல்ஹாசன் ஒருவர் மட்டும்தான்.‌ அதன் பிறகு நடிகர் விக்ரம் அந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினார். சேரன் அதே போல் விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கேட்டபோது, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்குமே என்பதால் அவருடைய ஜிம் டிரெயினராக மாறினேன்.

அவருடைய ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. அவரிடம் என்னை கவர்ந்த மற்றொரு விஷயம் அவருடைய நினைவுத்திறன். படப்பிடிப்பு நடந்த தருணங்களில் என்னை கேரளாவிற்கு அழைத்துச் சென்று அங்கு எனக்கென்று தனியாக ஒரு அறையை ஒதுக்கி அவரும் நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வார். அந்த தருணத்தில் கிடைத்த ஓய்வில் தான் இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டு முடித்ததும் இந்த படம் ஹிட் ஆகிவிடும், ஏனென்றால் நானும் ஒரு லவ் ஃபெயிலியர் கேஸ் தான் என்றேன்.

‘ஆடும் கூத்து’ என்ற படத்தில் எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் இரண்டு வரி டயலாக் தான். அதை என்னால் பொருத்தமாக பேச முடியவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு முதலில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து கூத்துப்பட்டறைக்கு சென்றேன். அதன் பிறகு நடிப்பை கற்றுக்கொண்டு இன்று இந்த மேடை வரை வந்ததற்கு காரணம் இயக்குநர் சேரன் தான்.

இன்று சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்புகளை வழங்குகிறார் என மாரி செல்வராஜ் கொண்டாடப்படுகிறார். ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன்பே ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் சாதியம் சார்ந்து சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்பை கொடுத்தவர் சேரன்.

அதேபோல் ஆட்சியின் நிறை குறைகளை பற்றி ‘தேசிய கீதம்’ படத்தின் மூலம் துணிச்சலுடன் சொன்ன இயக்குநரும் சேரன் தான்.

இன்று காதலைப் பற்றி இளைய தலைமுறை ஜாலியாக குறிப்பிடுகிறார்கள். ‘எனக்கு ரெண்டு பிரேக்கப் மச்சான்’. ‘நாலு பிரேக்கப் மச்சான்’ என்று சொல்கிறார்கள். ஒரு காதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு காதல் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்த படம் தான் ஆட்டோகிராப். ஒரு காதலுடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்த ஏராளமான இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு படம் வந்தவுடன் மற்றொரு காதல் வரும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியது. காதல் தொடர்கதை தான் என்ற விசயத்தை சொன்ன படம் ஆட்டோகிராப்.

இங்கு மேடையில் இயக்குநரை பற்றி அவருடைய உதவியாளர்கள் தங்களுடைய எண்ணங்களை சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்கள் என்றால் அதற்கும் காரணம் இயக்குநர் சேரனின் ஜனநாயக தன்மை தான்.‌ இதை நான் மனதார பாராட்டுகிறேன்.‌

இந்தப் படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் தவறாமல் பதிவிடுங்கள். ஏனெனில் இது போன்ற படங்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்,” என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ”சேரனுக்கு இசை மீது ஆர்வம் அதிகம். எல்லா விஷயங்களையும் நுட்பமாக பார்ப்பார். ‘பொக்கிஷம்’ படத்தில் ‘நிலா அது வானம்…’ எனும் ஒரு பாடல் இருக்கிறது. அந்தப் பாடலில் நாயகி ஓடி வந்து ஓரிடத்தில் நிற்கும் போது அவர் மூச்சிரைப்பு சப்தம் இருக்கும். இந்த பிரத்யேக சப்தத்தை பாடலில் இணைக்கும் போது நடைபெற்ற ஒரு சிறிய தவறை கூட நுட்பமாக கண்டுபிடித்து மாற்றி அமைத்தார்.

ஆட்டோகிராப் திரைப்படத்தை நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பாக பார்த்தோம். இசையில் எந்த மாற்றமும் தேவையில்லை என சொன்னேன் ஆனால் அவர் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதனால் சில மாற்றங்களை செய்து இருக்கிறோம். இது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்,” என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், ”ஆட்டோகிராப் என்ற படமே ஒரு மனிதனின் பழைய நினைவுகளை பற்றிய கதை தான்.  அந்த படத்தைப் பற்றி 21 ஆண்டுகள் கழித்து பேசும்போது சேரனை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். சேரனுடைய உதவியாளர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும்.

அவர் ஆட்டோகிராப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது நான் கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பில் இருந்தேன்.  அப்போது ஆட்டோகிராப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் அவர் கண் கலங்கி பேசினார். அந்த தருணத்தில் அவரைப் பற்றி தெரியுமே தவிர நெருங்கிய தொடர்பு இல்லை. அப்போது அவரிடம் நான் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்யலாமா எனக் கேட்டேன். அதை அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகு ஆட்டோகிராப் வெற்றி விழாவிற்கு பிறகு சேரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.

சேரன் பொதுவாக பெண்களை நன்றாக பார்த்துக் கொள்வார். ஏனெனில் சேரன் அக்கா, தங்கை, சித்தி, தோழி என ஏராளமான உறவுமுறை சார்ந்த பெண்களுடன் பேசி பழகியவர். அவருக்கு அண்ணன், தம்பி போன்ற உறவுகள் அதிகம் இல்லை. அதனால் சேரன் பெண்களிடம் அதிகமாக பழகியவர். அந்த உணர்வு சேரனிடம் எப்போதும் இருக்கும். இதனை நான் அவருடன் பழகிய பிறகு உணர்ந்து கொண்டேன்.

எங்கு தொடங்கி எங்கு நிறைவு செய்வதென்று தெரியவில்லை ஏனெனில் எனக்கும் சேரனுக்கும் அப்படிப்பட்ட உறவு நீடிக்கிறது.

சேரன் தமிழ் சினிமாவில் சாதித்த கலைஞர், தவிர்க்க முடியாத கலைஞர், மக்கள் கலைஞர். மகத்தான கலைஞன். சேரனின் அலுவலகத்திற்கு செல்லும் போது அவருக்கு பின்னால் இருக்கும் விருதுகளை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும். தேசிய விருது, மாநில விருது,  ஃபிலிம்ஃபேர் விருது.என அடுக்கி வைத்திருப்பார்.  பாலச்சந்தருக்கு பிறகு நான் நிறைய விருதுகளை பார்த்தது சேரனிடம் தான்.

சேரனிடம் பணியாற்றிய உதவியாளர்கள் இங்கு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கான அடையாளத்தை வழங்கியது சேரன் தான்.

சேரனுடைய முதல் படத்தை எங்கள் ஊர் திரையரங்கத்தில் பார்த்தவன் நான். அதன் பிறகு அவருடைய வெற்றியை பார்த்தேன். நானும், இயக்குநர் பாலாவும் சாலிகிராமத்தில் ஒரு அறையில் தங்கி இருந்த போது அங்கு சேரன் வருவார். அவருடைய பார்வை தான் சண்டியர் போல் இருக்கும். ஆனால் அவர் மென்மையான மனதுடையவர்.

அவருக்கும், எனக்கும் நிறைய கருத்து முரண் இருந்தாலும் அவருடனான நட்பும் உறவும் தொடர்கிறது. அவரிடம் ஒரு அன்பு இருக்கிறது. அவர் எல்லாவற்றையும் எளிதாக மறந்து விடுவார்.

அவர் இன்றும் தன் மனதை இளமையாக வைத்துக் கொண்டிருக்கிறார். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆட்டோகிராப் போன்றதொரு படத்தை வேறு யாராலும் உருவாக்க முடியாது. இந்தப் படத்தை பார்த்தால் ஒருவருக்கு எப்போதும் அவருடைய கடந்த காலத்தை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பு இது.  

இந்தப் படம் தான் வேறு வெர்ஷனில் ‘பிரேமம்’ ஆக வெளியானது. இப்போதும் இந்த ஜென் ஜி தலைமுறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்தப் படம் சேரனுக்கு பொருளாதார ரீதியாக பெரிய வெற்றியை தர வேண்டும். இந்த தலைமுறைக்கு சேரன் என்றொரு மகத்தான கலைஞன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தெரிய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்,” என்றார்.

நடிகை சினேகா பேசுகையில், ” இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராபில் பணியாற்றிய கலைஞர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது. இது நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் டிரைலரை பார்க்கும் போது புதிதாக இருந்தது.

சேரனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தக் கதை எழுதும்போது நீங்கள் எத்தனை காதல் தோல்விகளை சந்தித்தீர்கள்? என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கான பட்டியல் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. இந்த படத்தில் பணியாற்றும் போது எனக்கு மன அழுத்தம், மன உளைச்சல் இருந்தது. அதை கண்டுபிடித்த ஒரே மனிதர் சேரன் தான்.

ஆட்டோகிராப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது நான் டிப்ரஷனில் இருந்தேன். அது யாருக்கும் தெரியாது. நான் அதற்கேற்ற வகையில் சிரித்துக் கொண்டே இருப்பேன். அப்போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது என் அருகே அமர்ந்து, உனக்கு என்ன பிரச்சனை என கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்று சொன்னேன். அப்போது உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் எனக்கு தெரிகிறது. ஆனால் அது சீக்கிரம் சரியாகும் என்று சொல்லி நட்பு பாராட்டினார். அன்று தொடங்கி 21 வருடங்களாக என்னுடைய சிறந்த நண்பராக அவர் இருக்கிறார். என்னுடைய சிறந்த நண்பர், நலம் விரும்பி யார் என்று கேட்டால் நான் மார்தட்டி சொல்வேன் சேரன் என்று.

இந்தப் படம் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா என பலரும் கேட்டனர். அதை நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படம் அவருக்காக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். படத்தின் வெளியீட்டிற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியும்.

நான் நடித்ததில் எனக்கு பிடித்த படம் எது.என்று கேட்டால் நிச்சயமாக ஆட்டோகிராப் என்று தான் பதில் அளிப்பேன். ‘ஒவ்வொரு பூக்களுமே..’ பாடலை படமாக்கும் போது எவ்வளவு எக்ஸ்ப்ரஷன்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த அனுபவமே எனக்கு போதுமானது.

இந்த தலைமுறையினர் வித்தியாசமாக காதலை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காதல் என்றால் இதுதான் என்று சொன்னவர், சொன்ன படம். ஆட்டோகிராப். இது வெற்றி பெறும்,” என்றார்.

இயக்குநர் சேரன் பேசுகையில், ”இந்த மேடை சேரனை பற்றிய பாராட்டுரையாகவும், சேரனை பற்றிய விமர்சன மேடையாகவும் மாறிவிட்டது. இது இப்படித்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால பயணத்தில் எல்லாவித மனிதர்களையும் சந்தித்து இருக்கிறேன். எல்லா நல்லவர்களையும் சந்தித்து இருக்கிறேன். பல தீய காரணங்களையும் எதிர்கொண்டு இருக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறோம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. வாழ்க்கையில் நிறைய புதிய விஷயங்களை பார்ப்பீர்கள். அதனால் நீ எப்படி இருக்கிறாயோ  அதனை அப்படியே கடந்து செல். இதுதான் எனக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்தது.

இந்த மேடையில் பேசிய எல்லோருடனும் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் எனக்கான மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் இதில் விளக்கம் சொல்வதற்கு எதுவும் இல்லை.  

என்னுடைய உதவியாளர்களுக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். நீங்கள் நிறைய மேடைகளை விழாக்களை பார்த்திருப்பீர்கள். ஒரு இயக்குநரை அவருடைய உதவியாளர்கள் விமர்சித்த மேடை உண்டா? ஆனால் அதை நான் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்தும் கொடுப்பேன். அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவேன். ஏனெனில் ஒரு தகப்பனுக்கு தெரியும் தன்னுடைய பிள்ளைகளின் குணம் என்ன என்று. என் அப்பா என்னை எப்படி வளர்த்தாரோ.. அதே போல் என்னுடைய உதவியாளர்களையும் வளர்த்திருக்கிறேன்.


21 வருடங்களுக்குப் பிறகு ஆட்டோகிராப் படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்த படம் அவர்களுக்கு என்ன சொல்லும்?  நான் இப்படித்தான் படம் எடுப்பேன். வணிக நோக்கத்திற்காக நான் படம் எடுத்திருந்தால் என்றைக்கோ காணாமல் போய் இருக்கலாம். பெரிய வெற்றியை கொடுத்து இருப்பேன். அஞ்சு படம் பெரிய ஹீரோக்களுடன் பணியாற்றி இருப்பேன். அதன் பிறகு காணாமல் போய் இருப்பேன். ஆனால் இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரையோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்து கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என்னுடைய வெற்றியாக பார்க்கிறேன். அப்படித்தான் நான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன்.

இந்த ஆட்டோகிராப் படத்தைக் கூட அப்படித்தான் உருவாக்கினேன். எந்த தோல்வியாக இருந்தாலும் அதை கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.  இதில் காதல் ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே.. அப்படி என்று சொல்வதுதான் இந்தத் திரைப்படம். ‘ஒவ்வொரு பூக்களுமே..’ என்ற பாடலை நானே பலமுறை உணர்ந்து பாடி இருக்கிறேன். சினேகனும் பலமுறை பாடியிருக்கிறார். அமீர் நிறைய முறை பாடியிருப்பார். சினேகாவும் இந்த பாடலை நிறைய முறை பாடியிருப்பார். ஏனெனில் தோல்வி அனைவருக்கும் வரும். அதை எதிர்கொண்டு கடந்து சென்று வெற்றி பெறும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதை இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்.

இதைக் கடந்து இந்த படத்தை நான் தற்போது வெளியிடுவதால் எதையும் சாதித்து விடப் போவதில்லை. இன்றைய தலைமுறை எப்படி இருக்கிறது என்று எமக்குத் தெரியும். இந்தத் தலைமுறையினர் இந்தப் படத்தை பார்த்தால் அவர்களுக்கு வேறு ஒரு யோசனை தோன்றலாம். நாம் விதைக்கத்தான் முடியும். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம்.

மனிதனை மனிதனாக பார். அவனை திருத்த வேண்டும் என்று நீ நினைக்காதே. அவனை அப்படியே ரசி. நீ அழகாய் இருப்பாய். அப்படித்தான் நான் இந்த உலகத்தை அழகானதாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அமீர் குறிப்பிட்ட ஒரு விஷயம் சரியானது.‌ நான் பெண்களுடனேயே பிறந்து வளர்ந்தவன். அவர்கள் என்னை பக்குவப்படுத்தி இருக்கிறார்கள் நான் பெண்களிடம் அன்பை மட்டும் தான் காட்ட முடியும். அது மற்றவர்களின் கண்களுக்கு அன்பாக தெரியவில்லை என்றால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. எனக்கும், சினேகாவுக்கும் இடையேயான நட்பு இன்றும் தொடர்கிறது என்றால் எங்கள் இடையே இருக்கும் கண்ணியம் தான் காரணம்.‌ சினேகாவிற்கும், பிரசன்னாவிற்கும் திருமணம் நிச்சயமானதற்கும் நான்தான் மிக முக்கியமான காரணம். பிரசன்னா எனக்கு முக்கியமான நண்பர். என்னை மதிக்கக் கூடியவர். பிரச்சனைகளை காரணம் காட்டி நீங்கள் உங்களது திருமணத்தை தள்ளிப் போடாதீர்கள். அதுவே பிரச்சனையாகிவிடும். முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வருவதை எதிர்கொள்ளலாம் என்று சொன்னேன். நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லதை மட்டும் நினைக்கிறேன். அது நல்லதாக தெரியவில்லை என்றால் அது என்னுடைய பிரச்சனை இல்லை. அது அவர்களுடைய பிரச்சனை.

ஆட்டோகிராப் திரைப்படம் முதலில் வெளியான போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இல்லை. படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளியான பிறகு தான் கூட்டம் அதிகரித்தது. இந்த படத்தை கொண்டாடினார்கள். நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும் என இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகத்தை அது அளித்தது.

விமர்சனங்கள் ஒரு காலத்தில் நேர்மையானதாகவும் விசாலமான பார்வையுடனும் இருந்தது. ஆனால் இன்று அதில் எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது. இன்று ஆன்லைனை எடுத்துக் கொண்டால் எல்லாம் மார்க்கெட்டிங்  என்றான பிறகு நாம் மனிதத்தை இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்தப் படத்தை நான் மீண்டும் எடிட் செய்து 15 நிமிடங்களை குறைத்து இருக்கிறேன். இந்தப் படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கலர் கரெக்ஷன் முழுவதுமாக செய்து இருக்கிறேன். இசை பழமை வாய்ந்ததாகவே இருக்குமே, அது கூட ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டால்பி அட்மாஸ்  போன்ற புதிய இசை நுட்பங்களை இணைத்து இருக்கிறோம். பார்வையாளர்களை எங்கும் ஏமாற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். 50 லட்சம் ரூபாயை செலவழித்து இந்த படம் புதிய அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி இருக்கிறேன்,” என்றார்.

‘தடை அதை உடை’ விமர்சனம்

குணாபாபு தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படம் தயாரிக்கிறார். அந்த குறும்படத்தை சரியில்லை என்று கூறி தயாரிப்பாளர் நிராகரிக்கிறார். சோகத்தில் தனது நண்பர்களுடன் உலா வரும் குணாபாபு, அந்தவழியாக காரில் செல்லும் ஒருவரிடம் லிப்ட் கேட்டு செல்கிறார். அவரிடம் தனது குறும்படத்தின் கதையை சோகத்துடன் சொல்கிறார்.

அவர் சொல்லும் கதையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஏகப்பட்ட இடையூறுகளையும், தடைகளையும் தாண்டி ஒரு சிறுவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்கிறான் என்பது போல குறிப்பிடப்படுகிறது. இதில் அங்காடித்தெரு மகேஷ் உள்ளிட்டோர் இடம்பெறுகிறார்கள். ‘யூ-டியூப்’ மோகத்தால் மக்கள் சந்திக்கும் அவலம் சொல்லப்படுகிறது. இரண்டு கதைகளும் இணையும் இடத்தில் சில திருப்பங்களும் உண்டாகின்றன. அவை என்ன? என்ன நடந்தது? என்பதே கதை…

அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் ஒரு சிலர் சில படங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அந்த அடையாளம் தெரியாதபடி அனைவரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ள ‘அங்காடித்தெரு’ மகேஷ் நடிப்பு கவனிக்க வைக்கிறது. சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகள் மற்றும் அதன் பேராபத்துகளையும் படம் சொல்லுகிறது. 

மைனஸ்: கதையை தெளிவாக சொல்லவில்லை…. இசையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ’தடை அதை உடை’ குழப்பம்.

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

நவம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில், “தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில், ”இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.

இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில், ”சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா  விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். ‘பவுடர்’ படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய ‘ஹரா’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது ‘ஹரா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.

படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.

‘பிக்பாஸ்’ பிரபலம் நடிகர் சிபி பேசுகையில், ”இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் விஷ்ணு பேசுகையில், ”இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய ‘ட்ரேட்மார்க்’ சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர்.

இந்த திரைப்படத்திற்கு அதிக  திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், ”என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ  முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார்.‌ நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் ‘செல்லாட்டி..’ என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. ‘தென்மேற்கு பருவக்காற்று ‘ படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார்.

இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. உச்சகட்ட காட்சியை பார்த்துவிட்டு நீங்களே அது தொடர்பாக பேசுவீர்கள். இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. ‘அயோத்தி’ படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். இதற்கும் ஊடகங்கள் பேராதரவு தெரிவிக்க வேண்டும்.

நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,” என்றார்.

நடிகை பிரதீபா பேசுகையில், ” கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. ‘நீர்ப்பறவைசி படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.

கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் ‘பருத்திவீரன்’, ‘மைனா’ படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து
ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நவம்பர் 7ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.

நடிகர் கௌஷிக் ராம் பேசுகையில், ”இந்த படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும் அதற்கு காரணமாக இருந்த நிகில் முருகனுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரசியமானதாக இருந்தது.‌ கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி இப்படத்தில் நடித்தேன். எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். ஆனால் கும்பகோணத்திற்கு பயணித்ததில்லை. அங்குள்ள மக்களின் பாசமும், அன்பும் என்னை வியக்க வைத்தது.  

இந்த படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம்.‌ இது கிராமத்து காதல் கதை. அதிலும் ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தன் காதலை சொல்வதற்கு எப்படி தவிக்கிறான், எப்படி அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். இதனை இந்த படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களையும் இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.  

இந்தப் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத புதிய இளம் திறமைசாலிகள் பணியாற்றிருக்கிறார்கள். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். 2019ம் ஆண்டிலிருந்து நான் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.

தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார்.‌ இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது.  

புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன்.‌ அவரும்  எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.‌

பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்கிறது. அவரும் எதிர்காலத்தில் மிகப்பெரும் கதாநாயகியாக வருவார்கள். அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி நான் பார்க்கும் போது அவருக்கு 15,16 வயது தான் இருக்கும். அப்போதே அவர்  40 குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த பயிற்சி பெற்றேன். என்னுடைய திட்டமே தாமதமாக இயக்குநராக வேண்டும் என்பதுதான்.

இப்படத்தின் இருபது நிமிட காட்சிகளை செல்போனில் தான் எனது நண்பரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான கார்த்திக் வீரப்பனிடம் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு எமோஷனலாகி இப்படத்திற்கு தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக மதுரையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திக் காட்டினார். தொடர்ந்து நேரு கல்லூரியிலும் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்திக் காட்டினார். அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தவுடன் நான் எழுதிய முதல் தொழில்நுட்பக் கலைஞரின் பெயர் என். ஆர். ரகுநந்தன். நான் ‘நீர்ப்பறவை’ எனும் படத்தை பார்த்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசையை பார்த்தவுடன் இவர் தான் என் முதல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்தப் படத்தில் அவருடைய அற்புதமான திறமையை பார்க்கலாம். அதிலும் 25 நிமிடம் கொண்ட உச்சகட்ட காட்சியில் அவருடைய பின்னணி இசை நிச்சயமாக பேசப்படும்.‌ அந்த வகையில் இது சின்ன படம் அல்ல. பெரிய படம்தான். ஒலி அமைப்புக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்திற்கான வியாபாரத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

என்னுடைய குருநாதர் விஜய் ஸ்ரீ. நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றாலும் கிடைத்த இடைவெளியில் அவரின் அறிமுகம் கிடைத்து அவருடன் பவுடர் படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். ‘பவுடர்’, ‘ஹரா’ ஆகிய இரண்டு படத்தின் வெளியீட்டின் போதும் அவருடன் இருந்தேன். அதனால் படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க ஒருங்கிணைப்பு விசயத்தைப் பற்றிய வழிமுறையை  தெரிந்து கொண்டேன். அதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக அளவில் நல்லபடியான திரையரங்குகளில் வெளியாகிறது. அத்துடன் கேரளாவில் 20 திரையரங்குகளில் வெளியாகிறது. கர்நாடகாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாய்ப்புகளை என் ஆர் ரகுநந்தன் உருவாக்கி தந்தார். எந்த ஒரு சின்ன படத்திற்கும் இத்தகைய வரவேற்பு இருக்காது. அதனால் இது சின்ன படம் இல்லை பெரிய படம்தான்.‌ இதற்கு ஊடகங்களும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் அழகான தலைப்பு. இது நான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை நினைவு படுத்தியது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்கிய இயக்குநருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஸ்தபதி என்றார்கள். சிற்பி நல்ல கதையை தான் தேர்ந்தெடுத்து இருப்பார். அதனால் இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக வெற்றி பெற்றவை. சமீபத்தில் ‘அயோத்தி’ படத்தில் கூட ‘காற்று ஒரு பட்டம் போல..’ பாடலை வெற்றி பெற வைத்தார். இந்தப் பாடலை அண்மையில் கேட்டேன். உடனே தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடலைப் பற்றி அவருடன் பேசினேன்.‌ மிகுந்த இசைஞானம் உள்ளவர்களால் தான் இது போன்ற பாடல்களை உருவாக்க முடியும். அவருக்குள்ள திறமைக்கு அவர் செல்ல வேண்டிய உயரம் இன்னும் அதிகம். இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் ஒரு கிறிஸ்தவ பெண்ணிற்கும், ஒரு இந்து பையனுக்கும் இடையே ஏற்பட்ட காதலாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது சமூகம் சார்ந்து சாதி சார்ந்து மதம் சார்ந்து கதை எழுதும்போது சாதாரண கதையை எழுதுவதை விட கூடுதல் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டி இருக்கும்.

காதலைப் பற்றி எழுதும் தருணத்தில் காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம். எங்கு கைத்தட்டல்கள் கிடைக்குமோ அதைத்தான் எழுதுவோம்.‌ அதே தருணத்தில் சமூகம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து கதை எழுதும் போது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் சமமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் பிடித்த நியாயமான தீர்வும் இதில் இருந்தால் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும்.‌ இந்த மேடையில் படத்தில் இடம்பெறும் உச்சகட்ட காட்சியை பற்றி பேசும்போது எமோஷனலாக பேசினார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களையும் பாதிக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்,” என்றார்.

சென்னை- காவேரி மருத்துவமனையில் 4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம்!

சென்னை:

பல குடும்பங்களுக்கு பக்கவாதம் / ஸ்ட்ரோக், எவ்வித முன்னெச்சரிக்கை இல்லாமல் நடத்தப்படும் தாக்குதலாகவே இருக்கிறது; சில நிமிடங்களில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சையானது அவர்களின் வாழ்க்கைக் கதையை மாற்றி மேம்படுத்தி புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

உலக பக்கவாத தினம் 2025 – ஐயொட்டி நடத்தப்பட்ட வெற்றி பெருமித நிகழ்வின்போது தனது 4 ½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் வழங்கியிருக்கும் நம்பிக்கை தரும் விளைவுகளை இம்மருத்துவமனை பகிர்ந்து கொண்டது; பக்கவாத அறிகுறிகள் தோன்றிய பிறகு மிக முக்கியமான ஆரம்ப மணி நேரங்களுக்குள் அந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தனிச்சிறப்பான முன்னெடுப்பு திட்டமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், காவேரி மருத்துவமனையின் பக்கவாத சிகிச்சைக் குழுக்கள், சென்னையில் 956 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது.  இவர்களுள், 120+ நோயாளிகள் முதல் அறிகுறி தோன்றியதிலிருந்து 4 ½ மணி நேரங்களுக்குள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.  இவர்களுள் 82+ நபர்களுக்கு பக்கவாதத்திலிருந்து முழுமையான மீட்சி கிடைத்திருக்கிறது.  நிரந்தர சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கு உகந்த நேரத்திற்குள் மூளைக்கு இரத்தஓட்டம் மீண்டும் இந்நபர்களுக்கு நிலைநாட்டப்பட்டது என்பதையே இது உணர்த்துகிறது. 

வடபழனி, காவேரி மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். பெரியகருப்பன் பேசுகையில், “பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும்போது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது.  கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், மூளையிலுள்ள ஆயிரக்கணக்கான செல்கள் இழக்கப்படுகின்றன.  ஆனால், நோயாளிகள் மிக விரைவாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறபோது அவர்களது உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பேசவும், நடமாடவும் மற்றும் சுதந்திரமாக வாழவும், நடமாடவும் அவர்களது அவசியமான திறனை சேதமின்றி பாதுகாத்து எங்களால் காப்பாற்ற முடியும்.  இத்தகைய பெரிய பாதிப்பு நிகழ்விற்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து முழுமையான மீட்சி பெற்று, இத்தகைய நோயாளிகள் நலமுடன் நடந்து செல்வதை பார்ப்பதே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கிறது.” என்று கூறினார்.

உரிய நேரத்திற்குள் சிகிச்சைப் பெறுவது ஏன் முக்கியமானது:

மூளையின் ஒரு பகுதிக்கு செல்லும் இரத்தஓட்டம் தடுக்கப்படும்போது அல்லது உறையும்போது மூளையின் திசுவிற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் பக்கவாதம் நிகழ்கிறது.  உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன.  இதனால் ஏற்படும் இழப்பும், சேதமும் நிரந்தரமானதாக இருக்கக்கூடும்.

பக்கவாதத்தின் அறிகுறிகள் வெளிப்பட்டதிலிருந்து முதல் 4 ½ மணி நேரங்கள், “தங்கமான நேரம்” “golden window” என அழைக்கப்படுகிறது.  பக்கவாதத்தை ஏற்படுத்துகின்ற இரத்தஉறைவு கட்டிகளை அகற்ற அல்லது கரைக்க மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கக்கூடிய காலஅளவாக இது இருக்கிறது.  இந்த சாளர காலஅளவிற்குள் துரிதமாக செயல்படுவதில் தான், ஆயுட்காலம் முழுவதும் நீடிக்கின்ற திறனிழப்பிற்கும் மற்றும் முழுமையான மீட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையின் இடையீடு;டு கதிர்வீச்சியல் (நரம்பியல்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஜி. சதீஷ் இது குறித்து கூறியதாவது: “பக்கவாதத்திற்கான சிகிச்சை என்பது, அறிவியல், துல்லியம் மற்றும் குழுவாக இணைந்து செயல்படுவது என்பவற்றின் ஒருங்கிணைந்த கலவையாகும்.  உரிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நோயாளிகள் வந்து சேரும்போது, அவர்களுக்கு சிகிச்சையினால் கிடைக்கும் விளைவுகள் உண்மையிலேயே வியக்க வைக்கின்றன.  அவர்களது பேச்சுத் திறனையும், ஆற்றலையும் மற்றும் நம்பிக்கையையும் அவர்கள் மிக வேகமாகவே திரும்பப் பெறுகின்றனர்.  விதியை தீர்மானிப்பதாக நிமிடங்கள் இருக்கின்ற பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களுள் ஒன்றாக பக்கவாதம் இருக்கிறது.”

கடந்த பத்து ஆண்டுகளில், பக்கவாதத்திற்கான சிகிச்சையில் புரட்சிகரமான பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  சிரை ஊடாக செலுத்தப்படும் “இரத்த உறைவுக் கட்டியை” (க்ளாட் பஸ்டர்) உடைக்கும் மருந்துகள் மற்றும் இயந்திர வழி இரத்தக்கட்டி நீக்கம் என்பவை நவீன சிகிச்சை உத்திகளுள் சிலவாகும். 

சென்னை மாநகரில், ஆழ்வார்பேட்டை, வடபழனி மற்றும் ரேடியல் சாலை ஆகிய அமைவிடங்களில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் பக்கவாத மீட்பு சிகிச்சைப் பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.  மிக நவீன இமேஜிங் சாதனங்கள், இடையீட்டு சிகிச்சை செயல்முறைகளுக்கான அறைகள் மற்றும் தீவிர பக்கவாத சிகிச்சை மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை ஒருங்கிணைந்து, சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்குகின்றன.

“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீண்டும் இயல்பாக நடப்பதையும், பேசுவதையும் மற்றும் தங்கள் பணி வாழ்க்கைக்கும், குடும்பங்களுக்கும் மீண்டும் திரும்புவதையும் நாங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.  பாதிப்பு அறிகுறிகள் தோன்றியவுடன் விரைவாகவே சிகிச்சைக்கு எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.  “திரும்பவும் விரைவாக இயல்பான நபராக நான் உணர்கிறேன் என்று ஒரு நோயாளி புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் சொல்லும் தருணம் தான் எந்தவொரு மருத்துவரும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற மிகப்பெரிய சிகிச்சை விளைவாக இருக்கிறது.” என்று ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின், இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். சத்ய நாராயணன் கூறினார்.

பொதுமக்களை தொடர்புகொள்ளும் நிகழ்ச்சிகள் வழியாகவும் மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மக்களின் புரிதலை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட கூட்டாண்மைகள் வழியாகவும், இது குறித்த விழிப்புணர்வை வலுவாக்கும் பணியை இம்மருத்துவமனை தொடர்ந்து செய்து வருகிறது.

காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ்  பேசுகையில், “விரைவாக செயல்படுவது, சரியான சிகிச்சை அளிப்பது மற்றும் வாழ்க்கையை திரும்ப வழங்குவது என்பதே சென்னை வாழ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் வாக்குறுதியாக இருக்கிறது.  பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிப்பது மட்டும் எமது இலக்கு அல்ல. இந்த மாநகரில், அதற்கான பதில்வினையான சிகிச்சை வழிமுறைகளை மேம்பட மாற்றுவது எமது நோக்கமாகும்.  பக்கவாத தாக்குதலின் அறிகுறிகளை குடிமக்கள் ஒவ்வொருவரும் அடையாளம் காண இயலுமானால் மற்றும் உடனடியாகவே பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க முழுத்திறன் கொண்ட மருத்துவமனையை அணுகுவார்கள் என்றால், எண்ணற்ற உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் மற்றும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு ஏற்படும் திறனிழப்புகள் நிகழாமல் தடுக்க முடியும்.” என்று கூறினார்.

‘வள்ளுவன்’ இசை வெளியீட்டு விழா!

சென்னை:
 
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
 
மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார்.
 
விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இந்த நிகழ்வில்
 
*இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது*,
 
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?  இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்.  
 
“இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை. 
 
இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.
 
*இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர் பேசும்போது,*
 
இந்த படத்தை ஆரம்பிக்கும்போது இது முடியுமா? என்று யோசித்தோம். ஆனால் இப்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்  பார்க்கும்போது பாதி ஜெயித்து விட்டோம் என நினைக்கிறேன். இந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களை எடுப்போம். தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். முதலில் கன்னடத்தில் தான் படம் எடுக்க நினைத்தோம். ஆனால் இங்கே தமிழில் செல்வமணி சார் போன்ற ஜாம்பவான்கள் முன்னால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே படம் எடுத்தோம்” என்று பேசினார்.
 
*இசையமைப்பாளர் அஸ்வத் பேசும்போது,*
 
“படத்தின் நாயகன் சேத்தன் சீனு மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் திறமையான நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் இந்த படத்தில் நிறைய பாடகர்கள், கவிஞர்கள் என புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்த முடிந்தது” என்று பேசினார்.
 
*நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,*
 
“இயக்குநர் சங்கர் சாரதி இந்த படத்தை பல சிரமங்களுக்கு இடையே பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று இந்த டிரைலரை பார்க்கும்போது அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு கிடைத்தது போல இருக்கிறது. கதாநாயகி எங்கள் தமிழ்நாட்டு ஐஸ்வர்யா ராய் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை, படம் எப்படி வேண்டுமானாலும் எடுங்கள்.. வந்தவர்கள் யாருக்கும் சாப்பாட்டில் குறை வைத்து விடாதீர்கள் என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பளம் சரியான நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் ஆனது. இவர்களின் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.
 
*தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,*
 
“இந்த படத்திற்கு வள்ளுவன் என தலைப்பு வைத்து அவரது குறளை மையமாக வைத்து படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.. அதேசமயம் கெட்டது செய்தவனுக்கு நல்லது செய் என்று எழுதிய வள்ளுவன் பெயரை வைத்து கொலைகாரன் படம் எடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத படங்களில் ஆங்கில டைட்டில் தான் இருக்கிறது. இது தமிழ்நாடா என்கிற கேள்வியே வந்து விட்டது. இந்த சமயத்தில் இப்படி வள்ளுவன் என தலைப்பு வைத்திருப்பதால் இயக்குநர் சங்கர் சாரதியை பாராட்டுகிறேன். பணம் இருந்தால் நீதியையே இப்போது விலைக்கு வாங்கி விடலாம். நீதிபதிகள் பலர் இப்போது பாதிபதிகளாகி விட்டார்கள்” இன்று பேசினார்.
 
*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*
 
தவறு செய்தவர்களை கண்டித்து திருத்த வேண்டும் என்கிற கருத்தைச் சொல்ல வள்ளுவரை உதாரணமாக இயக்குநர் சங்கர் சாரதி எடுத்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இவர் சென்சாரில் தப்பித்து விட்டார். அந்த வகையில் எங்கள் இயக்குநர் சங்கத்திலிருந்து வள்ளுவன் என்கிற டைட்டிலுடன் அவர் கையில் எழுத்தாணிக்கு பதிலாக கத்தியை கொடுத்து ஒருவர் துணிச்சலாக படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் இயக்கிய டெக்னிக் நன்றாக இருந்தது. கதாநாயகன் சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார். அவர் நன்றாக வரவேண்டும்” என்று பேசினார்
 
*நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,*
 
“இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் சாரதி என்னை அழைத்தபோது முதலில் வர மறுத்துவிட்டேன். அவர் சரியாக 2023 அக்டோபர் 25ஆம் தேதி என்னை அழைத்தார். அன்று கேப்டனின் பிறந்த நாள். மீண்டும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் கேப்டனிடம் சென்று அனுமதி பெற்று, ஆசி பெற்று மதியத்திற்கு மேல் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டேன். அந்த வகையில் என் வாழ்க்கையில் இந்த படம் மறக்கவே முடியாது. சினிமாவில் நான் இருப்பதே கடவுள் கொடுத்த கொடுப்பினை. இப்போதுள்ள இயக்குநர்கள் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு வந்து சினிமா வாய்ப்பை பெற்றுக்கொண்டு சினிமா கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. தயவு செய்து அந்த கலாச்சாரத்தை மாற்றாதீர்கள்” என்று பேசினார்
 
*நடிகர் பரத் பேசும்போது,*
 
“சினிமாவில் நாம் இருப்பதே ஒரு பெரிய வரம் தான். அப்படிப்பட்ட சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் நாமாகவே பிடித்து முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம் என்று அப்படி வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல வலுவான அரசியல் கலந்த ஒரு கருத்து இந்த படத்தின் டைட்டில் துவங்கும்போதே ஆரம்பிக்கிறது. கதையை இயக்குநர் என்னிடம் சொன்னாலும் அந்த சமயத்தில் என்னுடைய வேறு சில கமிட்மென்ட்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் சேத்தன் சீனு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கிறார். அவருக்கு தமிழில் இது மிகப்பெரிய பிரேக்காக அமையும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா என்னுடன் காளிதாஸ், காளிதாஸ் 2, மிரல் என மூன்று படங்களில் வேலை பார்த்தவர்” என்று கூறினார்.
 
*நடிகர் கராத்தே ராஜா பேசும்போது,*
 
“இந்த வள்ளுவன் படத்தில் எனக்கு ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பல கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளில் காலை, மதிய காட்சிகள் படம் பார்க்க செல்லும் போது வெறும் ஐந்து பேர், பத்து பேர் மட்டும் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறும். பல இடங்களில் திரையரங்குகளை எடுத்துவிட்டு மண்டபம், மால் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்.. அவ்வளவு பெரிய சுற்றுலா தளம்.. ஆனால் அவ்வளவு பெரிய ஊரில் ஒரு தியேட்டர் கூட இல்லை. அதேபோல பொதுமக்களிடம் ஏன் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என நான் பேசியபோது பலரும் நாங்களே வெளியில் இருந்து தின்பண்டம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் தின்பண்டங்களை விற்பது ஒரு பக்கம் விற்றுக் கொள்ளட்டும். ஆனால் வெளியில் இருந்து இப்படி கொண்டு வருபவர்களையும் அனுமதிக்கட்டும். அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து அதை களைய முயற்சி எடுத்தால் அந்த ஜனங்களும் திரையரங்கிற்கு சென்று நமது படத்தை பார்ப்பார்கள். அப்படி வெளியிலிருந்து தின்பண்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் திரையரங்குகளில் விற்கும் பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வழி வகுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தாலும் எனக்கு சந்தோசம்” என்று பேசினார்.
 
*நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,*
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது பல கஷ்டங்களுக்கு இடையே தான் நடைபெற்றது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் எங்களைப் போன்ற நடிகர்களாகட்டும் அவரவர் தரப்பில் சில கஷ்டங்கள் இருந்தன. அப்படி கஷ்டங்களுக்கு இடையே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால் இந்த படம் இப்படி இந்த அளவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தான் அப்படி அவர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நடிகர்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறார்கள் என இங்கே சிலர் பேசினார்கள். எல்லோருக்கும் அப்படி அல்ல.. கொரோனா காலகட்டத்தில் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தி வந்த ஹோட்டலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் காது படவே சில பேர் அதை விமர்சித்து பேசுவார்கள். அதனால் பொத்தாம் பொதுவாக நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. நான் இங்கே இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதில் கூட சிக்கல் இருக்கிறது. அதையும் நான் எதிர்கொண்டு செய்துதான் வருகிறேன்” என்று பேசினார்.
 
*நடிகர் பிரேம்குமார் பேசும்போது,*
 
“படத்தின் இயக்குநர் என்னிடம் இந்த கதையை சொல்ல வந்தபோது இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர்.. இந்த படத்திற்கு வள்ளுவன் என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோதே நான் இதில் நடிக்க ஓகே சொல்லி விட்டேன். இந்த படத்தில் ஒரு அழுத்தமான செய்தி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு தாக்கம் இருக்கும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் எவ்வாறு தவறு செய்கிறார்கள், அதை எப்படி தட்டிக் கேட்பது என அதற்கான தீர்வுகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
 
*நாயகி ஆஸ்னா சவேரி பேசும்போது,*
 
“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். வள்ளுவன் படத்தில் எமோஷன், ஃப்ரண்ட்ஷிப், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைய டுவிஸ்ட் என எல்லாமே இருக்கிறது. நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயம் ஒர்த் ஆக இந்த படம் இருக்கும்” என்று பேசினார்.
 
*இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,*
 
“படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப்  பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா ? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள். இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான். 
 
கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள். 
 
ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத்  தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள். 
 
இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச்  செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது. 
 
நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள்   என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.
 
சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” என்று பேசினார்
 
*இயக்குநர் ராதா பாரதி பேசும்போது,*
 
“இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடித்துள்ள இந்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நீங்கள் பார்க்கும் போது, ரொம்பவே பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கதாநாயகியைப் பார்த்து பயப்படுவீர்கள். இயக்குநர் சங்கர் சாரதி என்னுடைய சீடன் தான். யாருக்கும் தெரியாத விஷயம், அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். தேவாரம், திருப்புகழ், திருப்பாவை எல்லாம் தெளிவாகப் பாடக்கூடியவர். என் தந்தை அவரை ஆழ்வார் என்று தான் அழைப்பார். அவ்வளவு பக்திமான். அதேசமயம்  என்னிடம் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்கள் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். பரிமேலழகர், கலைஞர் போன்றவர்கள் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்கள்.
 
 இயக்குநர் சங்கர் சாரதி திருக்குறளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்” என்று பேசினார்.
 
*நடிகை கோமல் சர்மா பேசும்போது*,
 
“2000 வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல.. அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ,  கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்” என்று பேசினார்.
 
*நாயகன் சேத்தன் சீனு பேசும்போது,*
 
“கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.
 
நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று  கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசினார்.
 
*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,*
 
“நான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆன சமயத்தில் தான் இதே போன்று பீட்சா படத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லோருமே பெரிய ஆட்களாக மாறிவிட்டார்கள். அதேபோலத்தான் இந்த வள்ளுவன் திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் அதேபோன்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
 
*வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது,*
 
“நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட  படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.
 
*இயக்குநர் பேரரசு பேசும்போது,*
 
“வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மீகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, கற்பழிப்பு.. வள்ளுவன் என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள். ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர்  கத்தியைக் கொடுக்கத்  தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார்.. நாடு அப்படி இருக்கிறது. என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..
 
நான் சிவகாசி படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.. நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்.. பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மீகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

பைக் திருடர்கள் கைது!

ருசக்கர வாக​னத்தை திருடி அதில் சென்று திருட்​டில் ஈடு​பட்ட இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். புழல் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் சிதம்​பரம் (23). இவரது விலை உயர்ந்த பைக் கடந்த 19-ம் தேதி திருடு​போனது.

இது குறித்து புழல் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பைக் திருட்​டில் ஈடு​பட்​டது ஐயப்​பன்​தாங்​கல் தண்​டலம் பகு​தி​யைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்​யமூர்த்தி (19), செங்​குன்​றம் காந்தி நகரைச் சேர்ந்த மணி​கண்​டன் என்ற காரைக்​கால் மணி (20) என்​பது தெரிய​வந்​தது. இவர்​கள் இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் இரு​வரும் திருடிய வாக​னத்​தில் சென்று மேலும் சில இருசக்கர வாக​னங்​களை திருடியதோடு, புழல் சக்​திவேல் நகரில் உள்ள கோயில் உண்​டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்​றது தெரிய​வந்​தது. மேலும், நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் சூர்​யமூர்த்தி மீது 20 திருட்டு வழக்​கு​களும், மணி​கண்​டன் மீது 13 திருட்டு வழக்​கு​களும் ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் இருப்பது தெரிய​வந்​தது.