Thursday, April 23, 2026
Blog

அங்கீகார கடிதம் இருந்தால் தான் ஊடகவியலாளர்களுக்கு உள்ளே அனுமதி!

தேர்தல் செயல்முறையை செய்தி சேகரிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவது, 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் விதி 32-இன் படி தலைமை அலுவலர்களால் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மீண்டும் வலியுறுத்துகிறது.

அதன்படி, ஒவ்வொரு பொது, இடைத்தேர்தல் அல்லது ஈராண்டுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அத்தகைய நுழைவுக்கான அதிகாரக் கடிதங்களை வழங்குவதற்காக ஊடகவியலாளர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று அனுப்புமாறு நியமிக்கப்பட்ட ஆதரவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆதரவு அதிகாரிகளில் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மற்றும் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் (DIPR) மூலமான தலைமைத் தேர்தல் அலுவலர்கள் (CEO-க்கள்) ஆகியோர் அடங்குவர்.

PIB-யால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை, அதிகாரக் கடிதங்கள் PIB-க்கு வழங்கப்படுகின்றன. அத்தகைய கடிதங்களை வழங்குவதற்கு முன்பு PIB தனது சொந்த மட்டத்தில் அவற்றை ஆய்வு செய்கிறது. பின்னர் PIB, அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலை ECI-க்குச் சமர்ப்பித்து, இந்தச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்கிறது.

மாநில DIPR மூலம் விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் முதலில் மாநில DIPR-ஆல் ஆய்வு செய்யப்பட்டு, அது தனது பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட CEO-க்கு அனுப்புகிறது. இந்தப் பட்டியல் முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், விண்ணப்பதாரர்கள் உண்மையான ஊடகப் பிரதிநிதிகள் என்றும், அவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) வழிகாட்டுதல்களில் வகுக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்கிறார்கள் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி/மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி (CEO/DIPR) சான்றளிக்கிறார்.

பரிந்துரைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பட்டியல், பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரியால் ஒப்புதலுக்காக ஆணையத்திற்கு அனுப்பப்படுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி/மாவட்டத் தேர்தல் அதிகாரி (CEO/DEO) அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே அதிகாரக் கடிதம் வழங்கப்படுகிறது. நம்பகத்தன்மை மற்றும் நேர்மையைப் பேணுவதற்காக, இந்தச் செயல்பாட்டில் நகல் மற்றும்/அல்லது ரப்பர் முத்திரை எதுவும் பயன்படுத்தப்படக்கூடாது என்று ஆணையம் கட்டளையிட்டுள்ளது.

அதிகாரக் கடிதங்களைத் தவறாகப் பயன்படுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்கின் இரகசியத்தன்மையை மீறாத வகையில், வாக்குப்பதிவு அறைக்குள் புகைப்படம்/காணொளி எடுப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. முறையாகச் சரிபார்க்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பணியாளர்கள் மட்டுமே வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், தேர்தல் செயல்பாட்டின் நேர்மை, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கான நடத்தையைப் பேணுவதே இந்த அமைப்புசார்ந்த மற்றும் பல அடுக்கு சரிபார்ப்புச் செயல்முறையின் நோக்கம் என்று ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது.

தேர்தல் நாளன்று செய்தி சேகரிப்பதற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அத்தியாவசிய சேவைகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் தபால் வாக்கு மையத்தில் (PVC) தபால் வாக்கு வசதியைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

விண்ணப்பம் மற்றும் ஒப்புதல்: கோரிக்கைகள் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரால் (DIPR) சரிபார்க்கப்பட்டு, தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அல்லது மாவட்டத் தேர்தல் அதிகாரியால் (DEO) அங்கீகரிக்கப்படுகின்றன.

செல்லுபடி: வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய அதிகாரக் கடிதங்கள் கட்டாயமாகும்.

கட்டுப்பாடுகள்:
அனுமதி இல்லை: அதிகாரக் கடிதங்கள் “வாக்கு எண்ணும் கூடத்திற்குள்” நுழைய அனுமதிப்பதில்லை.

புகைப்படம் எடுக்கக் கூடாது: வாக்குப்பதிவு அறைக்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

உபகரணங்கள்: அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்குக் கையடக்கக் கேமராக்கள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் வாக்கு எண்ணும் கூடத்தில் ஸ்டாண்டுகள்/முக்காலிகள் அனுமதிக்கப்படாது.

வெளிநாட்டு ஊடகங்கள்: வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு ‘J’ விசா தேவை, மேலும் அவர்கள் வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) வெளிநாட்டு விளம்பரப் பிரிவிடம் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வழங்கும் செயல்முறை: நம்பகத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகாரக் கடிதங்களில் நகல் அல்லது ரப்பர் முத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கட்டாயப்படுத்துகிறது.

தேர்தல் ஆணையம்

‘ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது’-டிரம்ப்

மெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு போரில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால் சிலர் போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். ஈரானின் ராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை நாம் விலக்கிக்கொள்ளாத ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஈரான் முற்றிலுமாக அழிந்துக் கொண்டிருக்கிறது.

அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள். ஈரானுடன் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தம், முந்தைய அதிபர்கள் செய்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலமடங்கு சிறந்ததாக இருக்கும். ஈரானின் தலைமை தங்கள் எண்ணெய்யை அமெரிக்கா பெற்றுக்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான கப்பல்களை அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா, அலாஸ்கா மாகாணங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது”.

இவ்வாறு வதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சிறுமியை கர்பமாக்கிய தாய்மாமன்! அதிரடி தீர்ப்பு!!

செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் வசித்து வருபவர்கள் கணேஷ் – மோனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் இவர்களுக்கு 16 வயது ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் கட்டிட தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கின்றனர். எனவே 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தாத்தா வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் சேலையூருக்கு வந்து பெற்றோருடன் தங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். 

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையின் போது சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது தாய் தந்தை இருவரும் வேளைக்கு சென்ற நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற அவரது தாய் மாமா 40 வயதுடைய முருகன் சிறுமியிடம் நலம் விசாரித்து பெற்றோர் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இதுகுறித்து வெளியில் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த மாணவி நடந்ததை பெற்றோரிடம் சொல்லாமல் தாத்தாவின் வீட்டிற்கு சென்று வழக்கம்போல பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். நாளடைவில் சிறுமி கர்ப்பமான நிலையில் தனது கர்ப்பம் குறித்து தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தாயிடம் தெரிவித்த நிலையில் அவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு முருகன் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் காவ்யாவுக்கு கடந்த (30.07.2025) ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் விசாரணைக்கு செய்யப்பட்டு வந்த நிலையில் இறுதிகட்ட விசாரணையில் வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு குற்றம் சாட்டப்பட்ட முருகன் குற்றம் புரிந்தவர் என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

விஜய் காட்டிய சொத்து மதிப்பு மீண்டும் தவறா?!

ட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது முறைகேடானது என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பெரம்பூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

வேட்பு மனுவில் முரண்பாடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என்று குறிப்பிட்டுள்ள விஜய், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி என்று தெரிவித்துள்ளார். இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

தவிர, பெரம்பூரில் சொத்து மதிப்பை அவர் குறைத்துக் காட்டியது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தவறு. வேட்புமனுக்களில் அவர் தெரிவித்துள்ள தகவல்கள் முழுமையானதா, உண்மையானதா என்று விசாரணை நடத்த வருமான வரித் துறை மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தவெக தலைவர் விஜய், ஒரு தொகுதியில் ரூ.100 கோடி வரை சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது முறைகேடானது’’ என்று கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில் வருமான வரித் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

ஏன் இப்படி மனம் மாற்றம்?!

டிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் சங்கீதா, பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய்க்கு எதிராக ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சங்கீதா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். விஜய் 2 தொகுதிகளில் களமிறங்கி இருக்கிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கி உள்ளார். இதுதவிர தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தினார். இதில், எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 233 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே தான் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதாக அவர் குற்றம்சாட்டி இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் விஜய் – சங்கீதா ஆகியோரை ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்க நீதிமன்றம் முடிவு செய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் ஏப்ரல் 20ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் விஜய் ஆஜராகாமல் வழக்கறிஞரை அனுப்பி வைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் ஏப்ரல் 20ம் தேதி விஜய் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை மனைவி சங்கீதா பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் சங்கீதா இப்படி செய்தால் அது விஜயின் இமேஜை பாதிக்கும். அதுமட்டுமின்றி தேர்தலிலும் எதிரொலிக்கலாம். இதனால் விஜய் மட்டுமின்றி தவெக வேட்பாளர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகும்.

இந்நிலையில் தான் விஜய் தரப்பில் இருந்து சங்கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 20ம் தேதி பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து சங்கீதா மனம் மாறி பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இன்று அட்சய திருதி! என்ன வாங்கலாம்? வாங்க பார்ப்போம்

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சயம் என்ற சொல்லுக்கு ‘குறையாதது’ என்று பொருள். நாம் செய்யும் நற்செயல்களும், வாங்கும் மங்களகரமான பொருட்களும் மென்மேலும் பெருகும் இந்த அட்சய திருதியை, நடப்பாண்டு அட்சய திருதியை இன்று ஏப்ரல் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை தான் இந்த புண்ணிய தினம்.

அட்சய திருதியை தொடங்கும் நேரம்

தொடக்கம்: ஏப்ரல் 19, காலை 10:49 மணி

முடிவு: ஏப்ரல் 20, காலை 07:27 மணி

தங்கம் வாங்க உகந்த நேரம்: நீங்கள் தங்கம் அல்லது மங்களகரமான பொருட்களை வாங்க விரும்பினால், இன்று (ஏப்ரல் 19) காலை 10:49 மணி முதல் நாளை, அதாவது ஏப்ரல் 20-ஆம் அதிகாலை 05:51 மணி வரை மிகவும் சிறந்த நேரமாகும். அதிகாலை நேரம் என பார்க்காதீர்கள். பல இடங்களில் விடிய விடிய வியாபாரம் நடைபெறும்.

அட்சய திருதியை வெறும் தங்கம் வாங்குவதற்கான நாள் மட்டுமல்ல, அதன் பின்னணியில் பல அற்புதக் கதைகள் உள்ளன.

படைப்பின் ஆரம்பம்: பிரம்ம தேவன் உலகைப் படைக்கத் தொடங்கிய நாள்.

அவதாரங்கள்: விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பிறந்த தினம்.

அன்னபூரணி: பார்வதி தேவி அன்னபூரணியாக அவதரித்து சிவனுக்கே உணவளித்த நாள்.

கங்கை வருகை: பகீரதனின் முயற்சியால் கங்கை பூமிக்கு வந்த புனிதமான நாள்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

  • வீட்டில் செல்வம் நிலைத்திருக்க தங்கம் மட்டுமன்றி இந்த பொருட்களையும் வாங்கலாம்: கல் உப்பு, பச்சரிசி மற்றும் தானியங்கள்.
  • புத்தாடைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்.
  • முக்கியமானது: இந்நாளில் நாம் செய்யும் ‘தானம்’ தான் பல மடங்கு புண்ணியத்தைத் தரும். குடை, ஆடை, உணவு போன்றவற்றை ஏழைகளுக்கு வழங்குவது தங்கம் வாங்குவதை விட மேலான பலனைத் தரும் என்பது ஐதீகம்.

அட்சய யோகம்

இந்த ஆண்டு சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால், இது ஒரு அபூர்வமான ‘அட்சய யோகத்தை’ உருவாக்குகிறது. இந்த நல்ல நேரத்தில் தொடங்கும் புதிய முயற்சிகள், தொழில்கள் நிச்சயம் வெற்றியடையும்.

 

ஒரு பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சி!

திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அடிப்படையில் மிக வித்தியாசமான தேர்தல். பாஜக அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அகற்றிவிட்டு, ஒரு பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சிக்கிறது.

அதிமுக ஒரு சிறந்த கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிபோய் பாஜகவின் முகமூடியாக மாறி விட்டது. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது. தமிழ் என்பது ஒரு தொன்மையான மொழி மட்டுமல்ல. அது தமிழர்களின் ஆன்மா. தமிழ் மக்களின் வீரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால்தான் பாஜக, அதிமுகவின் ஆன்மாவை கையில் பிடித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும். மகளிர் மசோதாவை பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை கொண்டு வரப் பார்த்தனர். இதன்மூலம் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று நினைத்தனர்.

காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அதை தோல்வி அடையச் செய்துள்ளோம் என்பது மிக பெருமையாக உள்ளது. பாஜகவினர் மதங்களால், சாதிகளால், மொழியால் மக்களைப் பிரித்து இந்தியாயை துண்டாட பார்க்கிறார்கள். நாட்டின் ஸ்திரத்தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பாதை சமூக நீதி, சமத்துவ பாதை. அதை பாஜக விரும்பவில்லை. எனவே அதை சிதைக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் உள்ளது. சமூக நீதி காப்பது குறித்து மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களவையில் பிரதமர் மோடியால் எங்களை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை. அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாட்டில் உள்ளார். ட்ரம்ப் கூறுவதை உடனடியாக மோடி செய்கிறார். ட்ரம்ப்புக்கு அவர் பணிந்து இருப்பது போல எடப்பாடி பழனிசாமியை தனக்கு பணிந்து இருக்க வைக்கிறார்.

நம்முடைய விவசாயம் உள்ளிட்ட தொழில்கள், தரவுகள் உள்ளிட்ட அனைத்தையும் மோடி அமெரிக்காவுக்கு விற்று வருகிறார். எஃப்ஸ்டீன் கோப்புகள் மூலம் மோடியை ட்ரம்ப் மிரட்டி வருகிறார். மோடியும், அமித் ஷாவும் தமிழக முதல்வரை மிரட்டலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்க நாம் ஒரு போதும் அவர்களை இங்கு அனுமதிக்க முடியாது. பாஜக – ஆர்எஸ்எஸ் ஒருபோதும் தமிழகத்தில் நுழைய முடியாது.

தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள உறவை அவர்களால் ஒருபோதும் குலைக்க முடியாது. இது வெறும் அரசியல் உறவு அல்ல. இது அன்பின் உறவு. எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியுடன் என்னையும் தொடரும் பாசப் பிணைப்பு. நான் உங்களது (தமிழகத்தின்) சிப்பாயாக டெல்லியில் செயல்படுவேன். தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன். நீங்கள் சொல்வதை நான் செய்து முடிப்பேன்” என்று பேசினார்.

முன்னதாக, அவரை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு வரவேற்றார். காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முக்கிய நிர்வாகிகள் உத்தம்குமார் ரெட்டி, கிறிஸ்டோபர் திலக், விஜய் சிங் உட்பட பலர் பங்கேற்றனர். திமுக பெரம்பலூர் எம்பி அருண்நேரு நன்றி கூறினார்

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா! பிரதமர் கடும் விமர்சனம்!!

களிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருவிலேயே அழித்துவிட்டார்கள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக பெண்களுக்கான அதிகாரம் கிடைக்காமல் போய் உள்ளது” என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறைக்கான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டன. இதையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவித்தார். அதன்படி 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தோம். எங்களின் மிகச்சிறந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நசுக்கப்பட்டு விட்டது. அனைத்து தாய்மார்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருவிலேயே அழித்துவிட்டார்கள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக பெண்களுக்கான அதிகாரம் கிடைக்காமல் போய் உள்ளது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக – காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. அவர்களுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இதன் விளைவுகளை காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை எதிர்காலத்தில் சந்திக்கும். மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதியை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஒரே சாக்குப்போக்கையே கூறி வருகின்றன. ஏதோ ஒரு தொழில்நுட்ப சிக்கலை காரணம் காட்டி, அவர்கள் பெண்களின் உரிமைகளைப் பறித்துள்ளனர். அரசியலின் இந்த இழிவான போக்கை நாடே உணர்ந்துகொண்டுள்ளது. அதன் பின்னணி பற்றியும் நாடு புரிந்து வைத்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்த எதிர்க்கட்சிகளிடம் நான் ஒன்றை மிகத்தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். அவர்கள் பெண்களின் சக்தியைச் சாதாரணமாகக் கருதுகிறார்கள். 21ம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். இவர்களின் உள்நோக்கங்களை அந்த பெண்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். எல்லா உண்மையும் அவர்களுக்கு முழுமையாகத் தெரியும். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம் பாவம் இழைத்துள்ளனர். இந்த பாவத்துக்கு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

‘என்ன பத்தி தெரியாது’…’எனக்கு இன்னொரு முகம் இருக்கு’!!

ரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரபு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். நல்லவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். இப்போது இருக்கும் எம்எல்ஏ மாதிரி திமிர் பிடித்தவர் இல்லை. இதுவரை அடிமையாக இருந்தீர்கள், இனிமேல் சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.

இங்கு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர், தானாக எம்எல்ஏ ஆகவில்லை. அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்எல்ஏ ஆனார். ஆனால் சுயநலம், திமிர், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று அம்மா பாணியைக் கடைப்பிடித்தோம்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து ஒருவரைக் கூட என்னைப் பார்க்க விட மாட்டார். மோசமான குணம் படைத்தவர். பிறர் நல்ல சட்டை போட்டுக்கொண்டால் கூட பிடிக்காது, பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? சிந்து ரவிச்சந்திரனை பொட்டிகட்டி அனுப்பினார். மாவட்ட சேர்மன் ஒருவரும் இவரால் கட்சியை விட்டுப் போய்விட்டார். மரியாதை இல்லாத மனிதர்.

அனைவரது மனைவியும் கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது, கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு.

நான் அப்போது கீழேதான் இருந்தேன், ஜெயலலிதாவிடம் அவர்கள் பேசினார்கள். படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும் அவர் பதவியை விட்டு இறக்கிவிட்டார். நகர, ஒன்றியச் செயலாளரோ, கட்சியினரோ புகார் அளிக்கவில்லை, அவரது மனைவி, மகன் புகார் அளித்தனர். அந்த புகாரைச் சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது. பிறகு என்னை அழைத்து இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பா போச்சு என்றார் ஜெயலலிதா.

இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை, இவரெல்லாம் மோசமான மனிதர் என்றார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன், இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா?

நீங்கள் முதல்வராக இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள் என்று கெஞ்சினார். ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார், இவரைப் போல எனக்கு பொய் பேச வேண்டிய அவசியமில்லை. நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன், அந்த மரியாதை உங்களுக்கு இருக்கிறதா?

அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு 66 ஆண்டு காலம் போராடுகிறீர்கள். விவசாயத்திற்கும் குடிக்கவும் நீர் வேண்டும். முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போதே கொண்டுவர நினைத்தார், நானும் ஒரு விவசாயி. அதனால் முழுக்க மாநில அரசு நிதியைக் கொண்டு 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றினோம், கரோனா காலத்தில் தடைபட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதற்கு விவசாய அமைப்புகள் கட்சி பாகுபாடு இல்லாமல், திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எல்லோரும் சேர்ந்து நன்றி செலுத்தினார்கள்.

அதற்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லை என்று சொல்லி இந்த தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் வர மறுத்துவிட்டார். இப்படி பொறாமை பிடித்த ஆள் தேவையா? யார் ஏற்பாடு..? எதிர்க்கட்சிகள் செய்கிறார்கள், அவருக்கு இருக்கும் உணர்வு கூட உங்களுக்கு இல்லையே? ஓட்டுப்போட்ட மக்கள் செழிக்கத்தான் இந்த திட்டம்.

நீங்கள் ஜெயலலிதாவை மதிப்பது உண்மையா…? இதை பாருங்கள், (போட்டோ காட்டுகிறார்) ஸ்டாலின், கருணாநிதி படம் இருக்கும் சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போதே பி டீமாக போய்விட்டார், திமுகவின் உளவாளி என்று கண்டுபிடித்தாகிவிட்டது. நீங்கள் சரியான ஆளில்லை, அதிமுக விசுவாசி இல்லை, குழிதோண்டிப் பறிக்கும் உளவாளி என்று கண்டுபிடித்துவிட்டோம்.

சட்டப்பேரவையில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்துப் பேசியது கிடையாது. இவரை வைத்திருக்கலாமா? இவர் மன்னிக்க முடியாத நபர். வாக்களித்த உங்களுக்கு அவர் விசுவாசமாக இல்லை. கேவலம், அங்கே போய் துண்டு வாங்குகிறார். யார் போட்டோவை பையில் வைத்திருக்கிறார்..? இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார். 100 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்திருக்கும் நீங்கள் நல்லவரா..?

என் மீதும் கேஸ் போட்டனர், வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொன்னார்கள், ஆனால், நான் வழக்கை நடத்துவேன் என்று சொல்லி நடத்தி, நிரபராதி என்று உங்கள் முன்பு நிற்கிறேன். செங்கோட்டையன் சிந்திக்க வேண்டும். அசிங்கமாகப் பேசினால், நாக்கு இருக்கிறது என்று பேசினால் சாலையில் நடக்க முடியாது. அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன்.

நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நான் முதல்வராக இருக்கும்போதே எடுத்து வைத்துவிட்டேன். நீங்கள் எப்படியும் அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் சேர்ந்து சதி செய்வீர்கள் என்று தெரியும். ஆட்சி மாறும், காட்சி மாறும், நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியும், யாராவது சவுண்ட் விட்டுப் பேசினால் கிட்டேயே போகமாட்டார்.

நான் அதிமுகவில், என் ஏரியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் 45 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்றேன். சட்டப்பேரவை தேர்தலில் 10வது முறை நின்றேன். 94 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன், இந்த தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன், நீங்கள் சவால் விட முடியுமா?

என் தொகுதி மக்கள், குடும்பத்தில் ஒருவனாக என்னைப் பார்க்கிறார்கள். எனக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்கள். என் மக்களை நீதிபதி அந்தஸ்தில் பார்க்கிறேன். நீங்கள் தொகுதி மக்களை அடிமையாகப் பார்க்கிறீர்கள். இனி ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

ஒரு ஒன்றியச் செயலாளர் இப்போதுதான் உங்களுடன் ஒரு போட்டோ எடுக்கிறேன் என்று சொன்னார். எப்படி கட்சியை வைத்திருக்கிறார் என்று பாருங்கள். மிகவும் மோசமான ஆள், பச்சையாகப் பேச ஆரம்பித்துவிடுவேன், எனது பதவி மதிப்புக்காக அடக்கி வாசிக்கிறேன்.

நான் எப்படிப்பட்டவன் என்பது தெரியாது. எனது முகம் ஒரு பக்கம் தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை. நான் எதுக்கும் துணிந்தவன். ஸ்டாலின் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவன் நான். என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவரே தடுமாறுகிறார். ஸ்டாலினுக்கு நீங்கள் துணை போனது தெரிந்தும் நான் பக்கத்தில் வைத்திருந்தேன்.

நல்ல பண்பு இருக்கவேண்டும். வாய்க்கு வந்தமாதிரி பேசக்கூடாது. பல கோடி ரூபாய்க்கு எனக்கு மில் இருக்கிறதாம். அது என் சம்பந்தி ஃபேக்டரி. அதில் சண்டை உண்டாக்க வேண்டாம். அவர் 1997-ம் ஆண்டிலே கட்டி வைத்திருக்கிறார், இன்னொன்று என் மகனின் சகலை. அவர் 1996ம் ஆண்டு கட்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை.

30 ஏக்கரில் கதிர் காலேஜ் எப்படி வந்தது..? வயதுக்கு ஏத்த மாதிரி பேச்சு தேவை, விசிலடிக்கும் இடத்துக்குச் சென்றால் அப்படித்தான் பேச்சுவரும். அவ்வளவு பணம் மிஞ்சியிருக்கிறது. ஆனால், ஒருத்தனுக்கும் ஒரு பைசா கொடுக்க மாட்டார். இவர் யாராவது ஒருத்தரையாவது கட்சியில் சேர்த்திருக்கிறாரா?

இவரால் வெளியேறியவர்கள்தான் அதிகம். முத்துசாமி, சிந்து ரவிச்சந்திரன், மாவட்டச் சேர்மன், தோப்பு வெங்கடாசலம் என்று பலரை வெளியேற்றினார். யாரையும் வளர விட மாட்டார். இந்த தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது, மக்களை உதாசீனப்படுத்தும் மனிதர் போட்டியிடுகிறார், அவருக்கு வாக்களிப்பீர்களா? 10 முறை நின்று என்ன செய்தார்?

புறவழிச்சாலை நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன், அவர் செய்யவில்லை. அதிமுக ஆட்சி வந்தால் கோபிச்செட்டிப்பாளையம் பிரமாண்ட பகுதியாக்குவேன், நான் சொன்னதைச் செய்வேன். அவர் பணக்காரரைப் பார்த்தால் பேசுவார், சாதாரண ஆட்களைப் பார்த்தால் பேச மாட்டார். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்பார். ஆனால், ஓட்டுப்போட்ட மக்கள், நிர்வாகிகள் பற்றி வாயைத் திறந்ததில்லை.

அரசியல் ரீதியாகப் பேசுவதை விட்டுவிட்டு தனிபட்ட முறையில் பேசினால் நிறைய இருக்கிறது, டிவியில் போட்டுவிடுவேன். பிறகு கோபியில் நடமாட முடியாது, காறித் துப்பிவிடுவார்கள். நான் முதல்வராக இருக்கும்போதே என்னவெல்லாம் செய்தீர்கள், அதுக்கு முன்பு என்னவெல்லாம் ஆட்டம் போட்டீர்கள் என்று அத்தனையும் இருக்கிறது. ஜாக்கிரதையா பேசுங்கள், அரசியல் ரீதியாகப் பேசுங்கள்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட அனைத்துப் பகுதியும் சேர்த்துக்கொள்ளப்படும். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். தேவையான திட்டம் நிறைவேற்றுவோம் எப்போதும் என்னை நேரில் வந்து பார்க்கலாம். அதிமுக வலிமையானது, கூட்டணி வலிமையானது” என்றார் பழனிசாமி.

வால்பாறை மலைப் பாதையில் வாகன விபத்து!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை மலைப் பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச் சுவரில், நேற்று மாலை சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னா நகரைச் சேர்ந்தவர்கள், கோடை விடுமுறையையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அதேப் பகுதியைச் சேர்ந்த டெம்போ டிராவலர் சுற்றுலா வேன் மூலம் இவர்கள் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு புறப்பட்டனர்.

வேனை முகமது பாசித் (21) என்பவர் ஓட்டினார். இந்த வேனில் ஓட்டுநர் உட்பட 13 பேர் இருந்தனர். இவர்கள் இரு நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு வந்தனர். வால்பாறையின் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து கோவை வழியாக மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் வால்பாறையில் இருந்து வேன் மூலம் கோவை நோக்கி 13 பேரும் புறப்பட்டனர்.

அப்போது வால்பாறை மலைப்பாதையில் உள்ள, 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக சென்ற வேன், அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி, 800 அடி கீழே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறித் துடித்தனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்து ஏற்பட்டதை அறிந்து வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு ஆண், ஒரு சிறுவன் மற்றும் 7 பெண்கள் என 9 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர். 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு பேர், ஓட்டுநர் முகமது பாசித் உள்ளிட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சுற்றுலா வேன் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. காடம்பாறை போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.