சென்னையில் 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்தப் புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 2 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பொன்முடி மீதான வழக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்திர பாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடியை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here