கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டிய ஆறு இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது.

மொத்தமுள்ள 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 15ஆம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற்றது.

ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல், ஏற்கெனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு சேர்த்து மறைத்து வைத்துள்ளனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பிறகு சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டாக ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் நடத்திய விசாரணையில் ஊழியர்கள் நால்வர் உண்டியல் பணத்தை திருடியது உறுதியானதால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் உண்டியல் பணத்தைத் திருடிய நான்கு ஊழியர்களும் அதை கவனிக்காத நான்கு அதிகாரிகளும் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here