தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக சுதர்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஊழியர்களிடம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், புகாரின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அவரை பணிநீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் பணிநீக்கம் செய்தபின்னரும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவர் மீண்டும் கணினியில் வேலை பார்த்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சத்துணவு ஊழியர்கள் சுதர்சனை பார்த்து “நீ ஏன் இங்கு வந்து வேலை பார்க்கிறாய் என கேட்டபோது ஊழியர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட சுதர்சனுக்கு ஆதரவாக உடனிருந்த சக ஊழியர்களும் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி வைரலானது.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் குலோத்துங்கன், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணியாற்றிய சுதர்சன், இவர் ஊழியர்களிடம் பணம் பெறுவது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவரை மாவட்ட ஆட்சியர் கடந்த 6-ம் தேதி பணிநீக்கம் செய்தார்.
ஆனால், சுதர்சன் அலுவலகத்தில் கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் முறையாக பதில் அளிக்காமல், எங்களிடம் தகராறுக்கு வருகிறார். அலுவலகத்தில் மேலாளர், உதவியாளர்கள் என பலரது முன்னிலையில் அவர் பணியாற்றி வருகிறார். மேலாளரிடம் கேட்டால், சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் போட வேண்டும் எனவே தான் சுதர்சன் வேலை பார்க்கிறார் என கூறுகின்றனர். தஞ்சாவூர் ஒன்றியத்தில் உள்ள 131 சத்துணவு ஊழியர்களின் குடும்ப விவரங்கள், பணி தொடர்பான விவரங்கள் அனைத்தும் கணினியில் உள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை எப்படி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதித்தனர் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டால், எங்களையே சுதர்சன் தாக்க வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம். எங்களது தகவல்கள் கணினியில் பாதுகாப்பில்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

















