சென்னை பட்டினம்பாக்கம் MRC நகர் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் கஞ்சா மற்றும் OG கஞ்சா பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஜெகதீஸ்வர், சந்தோஷ், தீபக் உள்ளிட்ட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா, 48 மில்லிகிராம் OG கஞ்சா மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், சந்தோஷ் என்பவர் தனது திருமணத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு வைத்த பேச்சிலர் பார்டியில் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட 10 பேரையும் சிறையில் அடைத்த நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திருச்சி கைலாசபுரத்தை சேர்ந்த ஆண்டனி பிரேசர் என்பவரையும் கைது செய்தனர். சென்னை ஆவடியில் வசித்துக்கொண்டு, ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து இளைஞர்களுக்கு சப்ளை செய்து கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா, கஞ்சா புகைக்க பயன்படுத்தப்படும் OCB Paper-32. Crusher Box-1 மற்றும் 1 ஐபோன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கில் மேலும் ஒரு கஞ்சா சப்ளையரான ஐஷ்வர்யாவை விருகம்பாக்கம் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இவர் விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடியிருப்பில் வசித்துக்கொண்டு கஞ்சா சப்ளை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யாவிடம் தொடர் விசாரணை நீடித்து வரும் நிலையில் சென்னையில் கஞ்சா சப்ளை செய்து வரும் மேலும் பல பெண்கள் போலீசில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

















