Thursday, September 17, 2026
Blog

‘பாரிஸ் கஃபே’ விமர்சனம் RATING 3/5

ண்மணி ரங்கநாதன் மற்றும் வெங்கல் லிங்கேஸ்வரன் தயாரிப்பில், தண்டர் மீடியா மற்றும் எல் வி என்டர்டைன்மெண்ட் சார்பில் குரு சோமசுந்தரம், அனு மோள், நயனா சாய், சாய் விக்கி, விஜய் விஷ்வா அர்ச்சனா நடிப்பில் சரஜ் சீலன் எழுதி இயக்கி இருக்கும் படம் தான் ‘பாரிஸ் கஃபே’

விமர்சனம்

மருத்துவரான குரு சோமசுந்தரம் மனைவி அனுமோல் மீது பெரும்பாசம் கொண்டவர். சமூகநலனுக்காக குரல் கொடுக்கும் அனுமோலும் கணவன் மீது பாசம் கொண்டவர் தான். குரு சோமசுந்தரம் சூழ்நிலை அழுத்தம் காரணமாக ஒரு காதல் ஜோடியின் கொலையை தற்கொலை என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்து விடுகிறார்.

அதில் கோபப்படும் அனுமோல் கணவரை விட்டுப் பிரிகிறார். இவர்களைச் சேர்த்து வைப்பதற்காக மகள் அர்ச்சனா அவரின் காதலன் விஜய் விஷ்வா இருவரும் வருகிறார்கள். பெரிய ஜோடியை சின்ன ஜோடி சேர்த்து வைத்ததா? அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ரீ ஓப்பன் ஆகி என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் கதை.

குருசோமசுந்தரம் குற்றவுணர்ச்சியை சுமக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அனுமோல் பெரியார் அம்பேத்கர் வழிமொழிந்த பெண்ணாக நடித்து கவனம் ஈர்க்கிறார். விஜய் விஷ்வா ஒரு சப்போர்ட்டிங் ஹீரோவாக அசத்துகிறார். அர்ச்சனா கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடி இயல்பாக நடித்துள்ளனர். இயக்குநர் சராஜ் சீலன் ஒரு சோசியல் கன்டென்ட்-ஐ கையிலெடுத்துள்ளார். அந்தக் கன்டென்டில் கொஞ்சம் கமர்சியல் சேர்த்து ஓரளவு இன்ட்ரெஸ்டிங்காகவே கதை நகர்கிறது. படம் முழுக்க ஆங்காங்கே காமெடிகள் வைத்து முக்கிய திருப்பத்துக்குள் கதை போனதும் எமோஷனலாக சீரியசாக முடிய வேண்டிய படம் இது. மாறாக, கடைசி நேரத்தில் வில்லனை எல்லாம் காமெடி ஆக்கி குரு சோமசுந்தரம் கையில் துப்பாக்கி கொடுத்து காமெடி செய்து படத்தை சற்று நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். கிளைமேக்ஸ் ரசிக்க வைக்கிறது.

பாரிஸ் கஃபே- ஜோடியின் கருத்து.

‘கோல்ட் கால்’ விமர்சனம் RATING 3/5

வேலை தேடி அலையும் நான்கு இளைஞர்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தைவிட, வேலையைச் செய்யாமல் எப்படி சமாளிப்பது என்பதில்தான் அவர்களுக்கு அதிக ஆர்வம். நிறுவனத்தின் இலக்குகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் பொழுதைக் கழிக்கும் இந்த நால்வருக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சினை காத்திருக்கிறது.

கொடுக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என்ற நெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் ஒரு பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு சிறுவன் கடத்தப்படுவது கதையின் போக்கையே மாற்றுகிறது. அந்தக் கடத்தல் வழக்கின் நிழல் இந்த நான்கு இளைஞர்களின் மீதும் விழ, அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. 

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் தருணங்களிலும், பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயலும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பு படத்திற்கு நகைச்சுவைத் தன்மையைச் சேர்க்கிறது. வேலை மீது அக்கறையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்களால் சமாளிக்க முடியாத ஒரு பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்ளும்போது ஏற்படும் குழப்பங்களே படத்தின் பிரதான பொழுதுபோக்கு.

படத்தின் மிக முக்கியமான பலம் அதன் பெங்களூரு களம். நகரத்தின் இயல்பான சூழலைப் பயன்படுத்தி கதை நகர்த்தப்பட்டிருப்பது படத்திற்கு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. குறிப்பாக, பெங்களூருவின் பன்மொழிச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு மொழிப் பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. இயக்குநர் தம்பிதுரை எத்துராஜ், கதையை நேரடியாகச் சொல்லாமல் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.

கோல்ட் கால்- டார்கெட் வலி. 

‘தி டார்க் ஹீவன்’ விமர்சனம் RATING 3/5

பாலாஜி இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ‘தி டார்க் ஹீவன்’

விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மெக்கரை என்ற மலைக்கிராமத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக கூறப்படும் சில மர்மமான சம்பவங்கள், நிகழ்காலத்திலும் எவ்வாறு தொடர்கின்றன என்பதுதான் படத்தின் கதைக்களத்தின் முக்கிய அடித்தளம்.

மெக்கரையில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால், அதை யார் படிக்கத் தொடங்கினாலும், அவர்களின் வாழ்க்கையில் அடுத்து நடைபெறவிருக்கும் சம்பவங்கள் அதில் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அந்த நபர் எப்போது, யாரால், எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கதைக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இந்த மர்மமான புத்தகத்தைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களுக்கும், நிகழ்காலத்தில் நடைபெறும் தொடர் மரணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதையின் முக்கிய முடிச்சாக அமைந்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நூலகரின் மகள் தனது தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக மெக்கரைக்கு வருகிறார். அதே நேரத்தில், கிராமத்தில் மர்மமான முறையில் தொடர்ந்து நடைபெறும் தொடர் மரணங்களை விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரியாக சித்து அங்கு வருகிறார்.

கிராம மக்கள் இந்த தொடர் மரணங்களுக்கு பின்னால் வன தெய்வத்தின் சாபம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் காவல்துறை அதிகாரியான சித்து, இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவமாக பார்க்காமல், இதன் பின்னால் ஒரு சைக்கோ கொலையாளி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறார். இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பது யார்? என்பதே கதை.

சித்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தர்ஷிகா, ரித்விகா ஆகியோருக்கும் கதையோட்டத்திற்கு தேவையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, அருள் D சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் பார்வையாளர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே படத்தின் மர்மத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது. கதாபாத்திரத்தின் தீவிரத்தையும், விசாரணைக் காட்சிகளின் அழுத்தத்தையும் உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, கதையின் மர்மம் அதிகரிக்கும் நேரங்களில் அவரது நடிப்பு படத்தின் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

தி டார்க் ஹீவன்- த்ரில் கலவை.

நடிகை சிம்ரனுக்கு சிறந்த நடிகை விருது! எந்த படத்திற்கு தெரியுமா?!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், Tourist Family திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக SIIMA 2026-ல் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனக்கான ஒரு வலுவான கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற சிம்ரன், Tourist Family படத்தில் தனது கதாபாத்திரத்தை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது அந்த நடிப்பிற்கான அங்கீகாரமாக SIIMA விருது கிடைத்துள்ளது.
 
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள சிம்ரனுக்கு, இந்த விருது அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. “மீண்டும் இந்தப் போட்டியில் நான் இருக்கிறேன்” என்பதை தனது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களாலும், சிறப்பான நடிப்பாலும் நிரூபித்திருக்கும் சிம்ரனுக்கு இந்த SIIMA அங்கீகாரம் மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.
 
மேலும், Tourist Family திரைப்படம் SIIMA 2026-ல் மொத்தம் 6 விருதுகளை வென்று, அந்த விழாவில் அதிக விருதுகளைப் பெற்ற தமிழ் திரைப்படமாகவும் கவனம் பெற்றுள்ளது. படத்தின் நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் தங்களுக்கான விருதுகளைப் பெற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
 
ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் வசூல் அல்லது வரவேற்பைத் தாண்டி, அதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரத்தில்தான் முழுமை பெறுகிறது. அந்த வகையில், Tourist Family படக்குழுவின் இந்த 6 SIIMA விருதுகள், திரைப்படத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் தரமான படைப்புக்கும் கிடைத்திருக்கும் பெருமையான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
 
சிம்ரனின் இந்த SIIMA வெற்றி, அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாகவும், சிறந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து தனது திறமையை நிரூபிக்கிறார் என்பதற்கான வலுவான சான்றாகவும் அமைந்துள்ளது.
 

மீசைய முறுக்கு 2! ரசிகர்கள் ஆர்வம்!!

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

80கள் முதல் Gen Z தலைமுறை வரை ரசிகர்களை கவரும் வகையில் இசை, காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.

ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள டிரெய்லர், நடனம், ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருங்கிணைத்து, அனைத்து தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, 80களின் தலைமுறை முதல் இன்றைய Gen Z தலைமுறை வரை வெவ்வேறு காலகட்டங்களின் உணர்வுகளை இணைக்கும் வகையில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘கலைவாணியே’ பாடலுக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே வெளியான ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே, ‘கோயிந்தம்மா’ மற்றும் ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, சார்ட் பஸ்டர் பாடல்களாக உருவெடுத்து, இசை தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன.

ஒவ்வொரு பாடலும் தனக்கென தனித்துவமான இசை மற்றும் உணர்வை கொண்டுள்ள நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ இளமைத் துடிப்பு, காதல், நகைச்சுவை, நட்பு மற்றும் குடும்ப உணர்வுகளை இசையுடன் இணைக்கும் வண்ணமயமான இசை கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் இசையமைப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இதன் மூலம் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் இசை விருந்தை வழங்கத் தயாராகி வருகிறார்.

இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா, சைத்ரா ஜே. ஆச்சார், கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டிரெய்லருக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பும், சார்ட் பஸ்டர் பாடல்களும் ஏற்படுத்தியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் கொண்டாட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, வழக்கமான திரையரங்க அனுபவத்தைத் தாண்டி, திரையரங்குகளையே ஒரு இசைக் கச்சேரியாக மாற்றும் வண்ணமயமான கொண்டாட்டமாக அமையவுள்ளது.

பொள்ளாச்சியில் விவசாயிகள் போராட்டம்!

பொள்ளாச்சி, பி.ஏ.பி, அலுவலகத்தில் போராட்டம் நடந்து வருவது சம்பந்தமாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், அது சமயம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர், ஈஸ்வர சாமி, மற்றும் பொள்ளாச்சி, எம். எல்.ஏ, நித்தியானந்தன், அவர்களும் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தையில்

நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உப்பாறு ஆணைக்கு தண்ணீர் திறக்கும் திட்டம் கைவிடப்பட்டது, எனவும், பி ஏ பி, வாய்க்கால் கடைமடை வரை கால்வாய் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி நீர்வளத் துறைக்கு வந்துவிட்டது, மேலும் சட்டமன்றத் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்திடம் தடை இல்லா சான்று பெற்று அரசாணை வெளியிடப்படும், அதன் பிறகு குறுகிய கால டெண்டர் வைக்கப்பட்டு கால்வாய்களை தூர் வாரும் பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது, மேற்கண்ட கோரிக்கைகளை விவசாயி இடம் தெரிவித்தார்கள், இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றார்கள்.

ஒரே மாதிரியான படங்களே வருகின்றன- நடிகை ரித்விகா ஆதங்கம்

சென்னை:
 
நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே
படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம்
இசை: சக்தி பாலாஜி
பாடல் வரிகள்: லாவர்தன்
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு
 
கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல், தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.
 
செப்டம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.
 
அறிமுக விழாவில் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,
 
“நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். க்ரைம் திரில்லர் படத்திற்கு இசையமைத்தது இதுதான் முதல் முறை. இயக்குநர் பாலாஜி முதலில் அப்படிச் சொன்ன இந்தக்கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்ன ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. அதேபோல படத்தை எடுத்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.
படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணி .ஒரு பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் ஆதரிக்க வேண்டும் “என்றார்.
 
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசும்போது,
 
“நான் இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ’டி3 ’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இது அவருடன் பணியாற்றும் இரண்டாவது படம் .வழக்கமாக மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படிப்பு நடத்துவது என்பது வேறு. மர்மமும் திகிலும் நிறைந்த ஒரு கதைக்கு அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது வேறு. கிரைம் திரில்லர் படங்களுக்கு இயற்கை அழகோடு மர்மமும் திகிலும் நிறைந்து காணப்படும் இடங்களாக இருக்க வேண்டும். அப்படி அழகும் மர்மமும் இணைந்த இடங்களைத் தேடி தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். நாங்களும் அப்படிக் காடு,மலை என்று சிரமப்பட்டு சென்று படமாக்கினோம்.வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.அந்த சிரமங்கள் எல்லாம் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்டும் போது இப்போது தெரிவதில்லை” என்றார்.
 
படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் புகழ் தர்ஷிகா பேசும்போது,
 
’தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவரும் விரும்பிப் பார்க்கும் படங்களாக இருக்கக்கூடியவை த்ரில்லர் படங்கள்தான்.அப்படி ஒரு படமாக இந்த ’தி டார்க் ஹெவன்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக உள்ளன. நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்கில் சென்று இந்தப் படத்தை பார்த்து ஆதரியுங்கள்.உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள் “என்றார்.
 
நடிகை ரித்விகா பேசும்போது,
 
“பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்.
 
ஏற்கெனவே எடுத்த படத்தை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் படம் எடுப்பது என்பது இரட்டை உழைப்பைப் போட வேண்டிய நிலை.கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அப்படி இந்தப் படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இருமடங்கு உழைத்து இருக்கிறார்கள். சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.
நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள்.இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.
 
படங்கள் திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் என்று இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகின்றன. எல்லாப் படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.திரையரங்குக்கு வந்த பிறகு ஓடிடியில் வந்தால் மட்டும் அப்போது பார்க்கலாம் .அதுவரை திரையரங்கில் பார்ப்பது தான் நல்ல அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது” என்றார்.
 
படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,
 
“ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. அப்படி மூன்று பேருக்கு நான் நன்றி கூற வேண்டும்.ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் எடுக்கும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சரண் ,கோபால் சார், மற்றும் எனது படக்குழுவினர்.இந்த மூவரும் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்து இருக்கவே முடியாது.அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும்.அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை.அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம்.அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.
 
அதேபோல இரண்டாவது முறை ஆரம்பித்தபோது பழையதைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை கேட்கவில்லை. இந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தான் அனைவரது கவனமும் இருந்தது .அதற்கு அனைவருக்கும் நன்றி.அப்படியே படத்தை முடிக்கவும் செய்தோம்.துணை நிற்பவர்கள் சரியாக இருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் சரியாக அமையும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. அவர்களே எனது பாடம்.அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் பெரிய அளவில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு சென்றோம்.
 
இந்த படத்திற்காக அனைவரும் சிரமப்பட்டோம். சிரமங்களில் நான் பெரிதாக நினைப்பது என்னவென்றால் தூக்கம் இல்லாமல் உழைப்பது என்பதைத்தான்.மூன்று மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் சில நேரம் உழைத்து இருக்கிறோம். அப்போது தூக்கம் இல்லாத அந்த உடல் ரீதியான பிரச்சினை எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தொந்தரவிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக இருந்தது.
அதிலிருந்து மீள்வதற்கு நாங்கள்  நீண்ட நாள்கள் மிகவும் சிரமப்பட்டோம்.எனது படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவருமே நன்றாக நடித்தார்கள் .அதுமட்டுமல்லாமல் அவர்களோடு அனுபவமுள்ள பெரிய நட்சத்திரங்களும் நடித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி சார் , நிழல்கள் ரவி சார் , ஜெயக்குமார் சார் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இன்று வர முடியவில்லை.
 
மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான்.டீஸர்,டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அது படைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல. எங்களது மனஸ்தாபங்கள் எல்லாம் பேக் அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும்.
அவர் நல்ல திறமைசாலி .அவர் பெரிய இடத்துக்கு வருவார். எனது இதயத்தில் இருந்து இதை நான் கூறுகிறேன். இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு பாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.
 
பாரி,உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன். ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் இந்தப் படத்திற்குப் பிறகு பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரிடம் இதைக் கேட்பார்கள்.இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிலைக்கு இன்று வந்து இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். அனைவருக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறது. நல்லதொரு திரையரங்க அனுபவமாக நிச்சயமாக இந்தப் படம் இருக்கும் .படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம். நன்றி” என்றார்.
 
கதை நாயகன் சித்து பேசும்போது,
 
“இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும் .எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது .அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும் .நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது .ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
 
அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள்.அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. 
 
வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்”என்றார்.

எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன் சிகிச்சை அறிமுகம்!

சென்னை:

காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் தனது முதுகுத்தண்டுவடப் பராமரிப்புத் திட்டத்தை இம்மருத்துவமனை மேம்படுத்தியுள்ளது. திறந்தநிலை அறுவைசிகிச்சை அல்லது வழக்கமான குறைந்த ஊடுருவல் உள்ள அறுவைசிகிச்சையை (MIS) விட சிறிய துளை மூலம் தண்டுவட அறுவைசிகிச்சை மூலம் பலன் பெறக்கூடிய நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று முறையாகும். சுமார் 8 மி.மீ அளவுள்ள சிறிய துளை மூலம் அதிக துல்லியமான கேமரா மற்றும் நுண் கருவிகளைச் செலுத்தி இந்த எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் நரம்புகளில் உள்ள அழுத்தம் நீக்கப்பட்டு, சுற்றியுள்ள தசைகள், எலும்புகள் மற்றும் தசைநார்கள் பாதிக்கப்படாமல் உட்பதியம் (இம்ப்ளாண்ட்) செய்யப்படுகிறது. வழக்கமான அறுவைசிகிச்சைகளில் ஏற்படும் பெரிய தழும்புகள், தசை பாதிப்புகள், அதிக இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை இதில் மிகக் குறைவாகவே இருப்பதால், நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த சிகிச்சை உத்தி உதவுகிறது.

வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பெரிய அளவிலான கீறல்களும், அதிகளவு தசைப் பிரித்தலும் தேவைப்படும். வழக்கமான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சையிலும் சுமார் 20 மி.மீ அளவில் கீறலிடப்படுவதால் திசுக்களுக்குச் சிறிய அளவில் பாதிப்பு உண்டாகலாம். ஆனால், எண்டோஸ்கோப்பிக் ஃபியூஷன் என்ற இந்த நவீன சிகிச்சை உத்தியில் திசு சேதம், இரத்த இழப்பு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி ஆகியவை மிக குறைவாகவே இருப்பது, நோயாளிகள் மிக விரைவில் குணமடைய உதவுகிறது.

தண்டுவட வட்டு தேய்மானம், தண்டுவடக் கால்வாய் சுருக்கம் (Spinal stenosis) மற்றும் சில ஆரம்பநிலை தண்டுவட தளர்வுகள் போன்ற தேய்மானத்தால் ஏற்படும் இடுப்புத் தண்டுவடப் பிரச்சனைகள். முறையான ஆரம்பக்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் குணமாகாமல், தொடர்ச்சியான நரம்பு அழுத்த கால் வலியால் அவதிப்படுபவர்கள், ஏற்கனவே திறந்தநிலை அறுவைசிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் உருவாகி, மீண்டும் அதே முறையில் அறுவைசிகிச்சை செய்வது அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நபர்கள் மற்றும் நீண்ட நேரம் நடைபெறும் திறந்தநிலை அறுவைசிகிச்சையின் சுமையைத் தாங்க முடியாத சில முதியவர்களுக்கும் இச்சிகிச்சை முறை பொருத்தமானதாக இருக்கும்.

இது குறித்து ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் மூத்த தண்டுவட மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. கீர்த்திவாசன் கூறுகையில், “எண்டோஸ்கோபிக் முறையானது தண்டுவட வட்டு விலகல் மற்றும் நரம்பு அழுத்தத்திற்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் தண்டுவடத்தின் இயற்கையான நிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் வழியாக, விரிவான இணைவுக்கான தேவையை தவிர்க்க இது உதவக்கூடும். நோயாளியின் உடல்நிலை மற்றும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே இச்சிகிச்சை யாருக்குப் பொருந்தும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து நோயாளிகளுக்கும் இம்முறை பொருந்தாது; கடுமையான தண்டுவடப் பிறழ்வுகளுக்கு வழக்கமான அறுவைசிகிச்சையே தேவைப்படும்,” என்றார்.

ஏற்கனவே தண்டுவட அறுவைசிகிச்சை (L4-L5) செய்திருந்த 56 வயதுப் பெண்மணிக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டபோது, எண்டோஸ்கோபிக் முறை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இரத்த இழப்பு 50 மி.லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. நோயாளி சிகிச்சைக்குப் பிறகு இரண்டு மணி நேரத்திலேயே நடக்கத் தொடங்கி, இரண்டே நாட்களில் வீடு திரும்பினார். கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் ஒருவருக்குப் பெரிய அறுவைசிகிச்சை தவிர்க்கப்பட்டு, எண்டோஸ்கோபிக் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விரைவாகக் குணமடைந்து தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பினார். மருத்துவர் பி. கீர்த்திவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எண்டோஸ்கோபிக் தண்டுவட அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இப்போது இந்த அதிநவீன சிகிச்சை முறையை இம்மையத்தில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

சென்னை, ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பாலமுரளி இது குறித்துக் கூறுகையில்: “இந்த நவீன மருத்துவ செயல்முறை உத்தி, எங்களின் விரிவான முதுகுத்தண்டு சிகிச்சைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது. சிகிச்சைக்குப் பொருத்தமான நோயாளிகளை தேர்வு செய்வது, துல்லியமான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவையே சிகிச்சையின் சிறந்த பலன்களைத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவை சிகிச்சை என்பது சிறிய அளவிலான கீறல்களை ஏற்படுத்துவது என்பதைத் தாண்டி, நோயாளியின் நிலைக்கேற்ப மிகச் சரியான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்த நவீன உத்தியின் மூலம், சிகிச்சைக்கான வரம்பை மேலும் விரிவுபடுத்தி, நோயாளிகளின் தனிப்பட்ட தேவைக்கேற்ற சிறந்த மருத்துவத் தீர்வுகளை எங்களால் வழங்க முடிகிறது. குறிப்பாக, மிகவும் சிக்கலான மற்றும் மறுசீரமைப்பு தேவைப்படும் முதுகுத்தண்டு பாதிப்புகளில் இது சிறந்த பலனளிக்கும்,” என்று தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும் செயல் இயக்குநருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “அறுவைசிகிச்சையின் சிரமங்களையும், பக்கவிளைவுகளையும் குறைத்து, மருத்துவ நிபுணத்துவத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து மக்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்கி குணம்பெறச் செய்வதே எங்களின் நோக்கம். எண்டோஸ்கோபிக் ஃபியூஷன் அறுவைசிகிச்சை உத்தியின் அறிமுகம், பொருத்தமான நோயாளிகளுக்கு குறைந்தபட்ச கீறல் மற்றும் வலியுடன் பாதுகாப்பான சிகிச்சையை வழங்கி விரைவாக குணமளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்தார்.

மண்டாடி விமர்சனம் RATING 3.2/5

ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மண்டாடி’

மீனவ சமூகத்தின் வாழ்க்கை, கடல், பாரம்பரிய படகுப் பந்தயம் மற்றும் தனிப்பட்ட பகை ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். கடலில் மீன்பிடிப்பதில் திறமை வாய்ந்தவராக மட்டுமல்லாமல், படகுப் பந்தயத்திலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவராக முத்துக்காளி காட்டப்படுகிறார். சில தனிப்பட்ட காரணங்களால் தனது சொந்த ஊரை விட்டு விலகியிருக்கும் அவர், மீண்டும் தனது மக்களுக்காக திரும்பி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது நீண்ட காலமாக அவருடன் மோதலில் இருக்கும் சட்டைப் புலி என்ற கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. அதை சூரி எப்படி கையாண்டார் என்பதே கதை.

முத்துக்காளி கதாபாத்திரத்திற்காக நடிகர் சூரி தன் உடலமைப்பை முழுமையாக மாற்றி, மீனவ மக்களின் மொழிநடையை உள்வாங்கி அப்படியே வாழ்ந்திருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இடையிலான சண்டைகாட்சி, உணர்வுப்பூர்வமான ஃப்ளாஷ்பேக் மற்றும் ஜி.வி-யின் பின்னணி இசை ஆகியவை வேற லெவல். கடலில் படகில் நடக்கும் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் மிகச்சிறந்த பகுதிகள் க்ளைமாக்ஸ் காட்சியில் தான் வருகிறது.

சற்று நீளமான ஃப்ளாஷ்பேக் காட்சிக்குப் பிறகு, திரைக்கதை மீண்டும் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக, பிரம்மாண்டமான படகுப் பந்தயக் காட்சியுடன் அமையும் க்ளைமாக்ஸ், கண்டிப்பாகப் பெரிய திரையில் அனுபவிக்கப்பட வேண்டிய ஒன்று. படம் முழுவதும் சூரி மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை உறுதியுடன் தாங்கிப் பிடிக்கிறார்.

முதல் பாதி முழுவதும் கொஞ்சம் போர் அடிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி படத்தை ஓரளவுக்குக் காப்பாற்றுகிறது. காளி தன் கடந்த காலத்தைச் சொல்லும் காட்சிகள், புலியுடனான நட்பு, சத்யராஜ் கதாபாத்திரம் ஆகியவை நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது. மஹிமா உடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. க்ளைமாக்ஸில் வரும் படகுப் போட்டி காட்சிகள் விறுவிறுப்பாகவும், எமோஷனலாகவும் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு இரண்டாம் பாதியும், படகுப் போட்டிகளும்தான் முக்கிய பலம்.

மொத்தத்தில் இந்த ‘மண்டாடி’ படகு மன்னன்

ஹைக்கூ திரைப்பட டீசர்!

கன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், சித்துகுமார் இசையில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசரை ரொமாண்டிக் ஸ்டார் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டார்.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை ரொமாண்டிக் ஹீரோ ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். கண்ணைக் கவரும் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இளமைத் துள்ளல் நிறைந்த தருணங்கள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் உணர்வுகளுடன், புத்துணர்ச்சியான ஒரு காதல் உலகத்தை இந்த டீசர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த அழகான கதையில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரியும், உணர்வுப்பூர்வமான நடிப்பும் டீசரின் சிறப்பம்சங்களில் ஒன்று. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் தனது இயல்பான மற்றும் கிராமத்து கதாபாத்திர நடிப்பால் பாராட்டைப் பெற்ற ஏகன், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், நவீனமான, கூலான மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு இணையாக ஸ்ரீதேவியும், ஃபெமினா ஜார்ஜூம் தங்களது அழகான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர். இவர்களுக்கிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி டீசரின் இனிமையான தருணங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும், டீசரின் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் விதமாக ஃபெமினா ஜார்ஜ் வருகிறார். குறுகிய நேரமே தோன்றினாலும், தனது அழுத்தமான தோற்றத்தின் மூலம் உடனடியாக கவனம் ஈர்க்கிறார்.

‘ஹைக்கூ’ படத்தின் காதல் உணர்வுகளுக்கு சித்து குமாரின் இசை கூடுதல் உயிர் கொடுக்கிறது. குறிப்பாக, கிளாசிக்கல் ராகங்களுடன் இணைந்த மென்மையான வயலின் இசையும், நவீன ஃபியூஷன் இசையும் டீசரின் இதமான காட்சியமைப்புடன் அழகாகப் பொருந்துகின்றன. அவரது பின்னணி இசை, டீசருக்கு மயக்கும் இசை அனுபவத்தை வழங்குகிறது. குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை ஒரு வண்ணமயமான காதல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் அனுபவத்தை டீசர் உருவாக்குகிறது. எழுத்தாளர் மற்றும் இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் புதுமையான திரை அணுகுமுறை, அனைவருக்கும் பரிச்சயமான காதல் உணர்வுகளை புத்துணர்ச்சியுடன் தருகிறது.

காதல் கதைகள் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.  இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள், மனதை வருடும் இசை மற்றும் புத்துணர்ச்சியான திரை அணுகுமுறை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது. படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான தொகைக்கு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

காதல் உலகத்தின் அழகிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் வெளியாகியுள்ள டீசரை தொடர்ந்து, ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.