திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.என். நேரு பேசியதாவது, “டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வீட்டில் சோதனை நடத்துவதாகக் கூறினர். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீடுகள், எனது சகோதரரின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இருப்பினும், முறைகேடு நடந்ததாக எந்த ஆவணமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலுவலகம் சார்ந்த குறிப்பையும், சகோதரர் வைத்திருந்த வரவு – செலவுக் கணக்கு குறிப்பை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் எடுத்துச் சென்ற பொருள்கள் தொடர்பாக ஆவணங்களில் கையெழுத்து வாங்கிச் சென்றனர். காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையில் சோதனை நடத்தினர்.
அவர்களுக்கான முழு ஒத்துழைப்பை நாங்கள் வழங்கினோம். நீதிமன்றத்தில் ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கு இருப்பதால், புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்கு குறித்து எதுவும் விசாரிக்கவில்லை.
அரசும் காவல்துறையும் சோதனை நடத்த அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறலாம். ஆனால், அரசியல்ரீதியாக பார்க்கும்போது, எங்களை மிரட்டி வைப்பதற்காக நடந்திருக்கலாம். இது பழிவாங்கும் நடவடிக்கைதான்”
என்று தெரிவித்தார்.
















