கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஆக்ராவை சென்றடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்.. சிவப்பு நிற சூட்கேஸினுள் “ஆணா? பெண்ணா?” என அடையாளம் தெரியாத சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. தலை மற்றும் கை, கால்கள் இல்லாமல் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சூட்கேஸில் இருந்த தமிழ்நாட்டின் பிரபல ஜவுளிக்கடை பையை வைத்து சம்பவம் தமிழ்நாட்டில் அரங்கேறியதை உறுதி செய்தனர்.

இதனால் உத்தரப் பிரதேச ரயில்வே காவல்துறை, தமிழ்நாடு ரயில்வே காவல்துறையின் உதவியை நாடினர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ரயிலில் ஏறுவதற்கு முன்பு, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரலுக்குள் நுழைவது சிக்கியது. தம்பதியினர் சூட்கேஸை ரயிலின் ஒரு பெட்டிக்குள் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, சென்னை பார்க் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து புறநகர் ரயிலில் ஏறி கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கியதும் சிசிடிவி காட்சி உதவியுடன் கண்டறிந்தனர். கூடுவாஞ்சேரியில் இறங்கிய அந்த தம்பதி அங்கிருந்து ஆட்டோ மூலமாகத் தப்பிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வீட்டிலிருந்து தான் அந்த தம்பதி சூட்கேசுடன் சென்றது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசாருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீடு முழுவதும் ரத்தமாகக் காட்சி அளித்ததும், ஒருவரைக் கொலை செய்து உடலை எலும்பு தனியாக, சதை தனியாக வெட்டி எடுத்து மைதா மாவு காய்கறிகள் போட்டு பெரிய பாத்திரத்தில் வைத்து சமைத்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த வீட்டில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் என ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் வசித்து வந்த தெரியவந்தது.

ஒரு ஆண், ஒரு பெண்ணிற்கு 35 வயதிற்கு உள்ளாகவும், மற்றொரு பெண் 45 வயது மதிக்கத்தக்கவராகவும் இருந்துள்ளார். கொலையாளிகளின் புகைப்படத்தைக் காட்டி உறுதிப்படுத்திய போலீசார் இறந்த பெண் அய்துல் நிஷா என்பதும் , தாம்பரம் மெப்ஸ்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி 19-வயதில் மகன் உள்ளதும் அவர் தாம்பரத்தில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. கொலை செய்யப்பட்ட அய்துல் நிஷா கொலையாளியுடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் மாதம் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து கொலையாளி தம்பதியும் கொலை செய்யப்பட்ட பெண் ஆகிய மூவரும் ஒன்றாக தங்கி உள்ளனர்.

அதன் பின்னர்தான் நிஷா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து மனிதக் கறி சமைக்கப்பட்ட பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவாகரத்தில் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் போலீசார் தலையைத் தேடி வருகின்றனர். மேலும் கொலையாளிகளின் செல்போன் சிக்னல்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மணிப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது
இதையடுத்து மணிப்பூர் சென்ற கூடூவாஞ்சேரி போலீசார், கொலையாளி மாணிக் லஸ்கரை கைது செய்தனர். அவரை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் அவரது மனைவி பகமதி மாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here