இருசக்கர வாகனத்தை திருடி அதில் சென்று திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். புழல் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் சிதம்பரம் (23). இவரது விலை உயர்ந்த பைக் கடந்த 19-ம் தேதி திருடுபோனது.
இது குறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பைக் திருட்டில் ஈடுபட்டது ஐயப்பன்தாங்கல் தண்டலம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்யமூர்த்தி (19), செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற காரைக்கால் மணி (20) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் திருடிய வாகனத்தில் சென்று மேலும் சில இருசக்கர வாகனங்களை திருடியதோடு, புழல் சக்திவேல் நகரில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், நடத்தப்பட்ட விசாரணையில் சூர்யமூர்த்தி மீது 20 திருட்டு வழக்குகளும், மணிகண்டன் மீது 13 திருட்டு வழக்குகளும் ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் இருப்பது தெரியவந்தது.

















